சங்கரன்கோவில் அருகே ஊராட்சி செயலரை பணியிடை நீக்கம் செய்ய கலெக்டரிடம் மனு

சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருமாள்பட்டி ஊராட்சியின் தலைவராக குருவம்மாள் என்பவர் பதவி வகித்து வருகிறார்.ஊராட்சி தலைவரும், செயலாளரும் சேர்ந்து துணைத்தலைவர் மாரியம்மாளின் கையெழுத்தை போலியாக பதிவு செய்து ரூ.9 லட்சம் வரை கையாடல் செய்ததாக புகார் எழுந்துள்ளது.
சங்கரன்கோவில் அருகே ஊராட்சி செயலரை பணியிடை  நீக்கம் செய்ய கலெக்டரிடம் மனு
Published on

தென்காசி:

சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருமாள்பட்டி ஊராட்சியின் தலைவராக குருவம்மாள் என்பவர் பதவி வகித்து வருகிறார்.

இவரும், ஊராட்சி செயலாளரான சீனியம்மாள் என்பவரும் சேர்ந்து பெருமாள்பட்டி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மாரியம்மாளின் கையெழுத்தை போலியாக பதிவு செய்து அரசு ஆவணமாக காட்டி வங்கியில் இருந்து ரூ.9 லட்சம் வரை கையாடல் செய்ததாக புகார் எழுந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து அந்த புகார் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு பணம் கையாடல் செய்யப்பட்டது உறுதியானதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சங்கரன் கோவில் யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், முறைகேட்டில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளரான சீனியம்மாளை இதுவரை பணியிடை நீக்கம் செய்யாமல் அதே பணியில் உள்ளதால் அந்த ஊராட்சியில் தொடர் முறைகேடுகள் நடப்பதாகவும், முறைகேடுகள் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்ட நாள் முதல் ஊராட்சி செயலாளர் விடுமுறையில் உள்ளதால் பெருமாள்பட்டி பகுதியில் எந்தவிதமான அடிப்படை பணிகளும் மேற்கொள்ளப்படாமல் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் பொதுமக்கள் சார்பில் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com