search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    5 முறை இயக்கப்பட்டு வந்த நிலையில் நெல்லையில் இருந்து ஆறுமுகநேரிக்கு ஒரு முறை மட்டுமே இயங்கும் அரசு பஸ் - வியாபாரிகள், மாணவர்கள் பாதிப்பு
    X

    5 முறை இயக்கப்பட்டு வந்த நிலையில் நெல்லையில் இருந்து ஆறுமுகநேரிக்கு ஒரு முறை மட்டுமே இயங்கும் அரசு பஸ் - வியாபாரிகள், மாணவர்கள் பாதிப்பு

    • தினமும் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை பல்வேறு நேரங்களில் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது
    • தற்போது தினமும் ஒரே ஒரு பஸ் மட்டுமே இயக்கப்படுவதால் மக்கள் சிரமம்

    நெல்லை:

    நெல்லையில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி, காயல்பட்டினம் உள்ளிட்ட இடங்களுக்கு தினமும் 5-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது.

    இதன்மூலம் ஆறுமுகநேரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த வியாபாரிகள், பொதுமக்கள், கல்லூரி, பள்ளி மாணவ-மாணவிகள் என ஏராளமானோர் தினந்தோறும் பயன்அடைந்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களாக நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து அந்த வழித்தடங்களில் இயக்கப்படும் பஸ்கள் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

    தினமும் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை பல்வேறு நேரங்களில் பஸ்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மதியம் 1.15 மணிக்கு மட்டுமே ஒரே ஒருமுறை ஆறுமுகநேரி, காயல்பட்டினத்திற்கு பஸ் இயக்கப்படுகிறது.

    இதனால் மாலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று திரும்பும் மாணவர்கள் பஸ்கள் இயக்கப்படாததால் மிகவும் சிரமம் அடைகின்றனர். வியாபாரிகளும் நெல்லை மார்க்கெட்டுகளில் காய்கறிகள் உள்ளிட்டவற்றை வாங்கி கொண்டு செல்ல அவதி அடைகின்றனர்.

    இந்த வழித்தடங்களில் தனியார் பஸ்களின் இயக்கமும் இல்லை. இதனால் பயணிகள் அரசு பஸ்களை மட்டுமே நம்பி வந்த இருந்த நிலையில் தற்போது தினமும் ஒரே ஒரு பஸ் மட்டுமே இயக்கப்படுவதாக புகார் தெரிவித்து வருகின்றனர்.

    எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் இந்த பிரச்சினையை கவனத்தில் எடுத்து நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×