என் மலர்
நாகப்பட்டினம்
குத்தாலம்:
நாகை மாவட்டம் குத்தாலம் அருகே ஆலங்குடி ஊராட்சியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்ற கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆலங்குடி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் உத்திராபதி தலைமை தாங்கினார். ஒன்றிய துணை செயலாளர்கள் அப்துல்ஹாதி, சிவசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஊராட்சியின் தேவைகளான குடிநீர், காலனி வீடுகளை புதுப்பித்து தரக்கோருதல், நூறு நாள் வேலை சம்பளத்தை வழங்க வலியுறுத்தல் மற்றும் டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து விவசாயிகளுக்கு 30 ஆயிரம், விவசாய தொழிலாளிகளுக்கு 15 ஆயிரம் நிவாரணம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர் கணபதி, இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் அறிவழகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
சீர்காழி:
சீர்காழி உழவர்சந்தை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ரூ.500, 1000 செல்லாது என அறிவித்ததை கண்டித்தும், வங்கிகளில் பணம் எடுப்பவர்களிடம் கைவிரலில் மை வைக்கும் முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வட்ட செயலாளர் ஜீவானந்தம் தலைமை வகித்தார்.வட்டக்குழு உறுப்பினர்கள் நாகையா, ராஜாராமன், பாலு, கேசவன், ஜோதிலிங்கம் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக வட்டக்குழு உறுப்பினர் விஜய் வரவேற்று பேசினார். மாவட்டக்குழு உறுப்பினர் கணேசன் கண்டன உரையாற்றினார். முடிவில் வட்டக்குழு உறுப்பினர் புஷ்பலதா நன்றி கூறினார்.
புதுவை மாநிலம் காரைக்கால் அருகே உள்ள காரைக்கால் மேடு பகுதியை சேர்ந்த பாலமுருகன் (22) நாகை நம்பியார் நகரை சேர்ந்த அரவிந்த் (20) உள்ளிட்ட 9 பேர் காரைக்கால் பகுதியில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
கடந்த 13-ந் தேதி கடலுக்கு சென்ற அவர்கள் பெரிய விசைப்படகில் தங்கி மீன் பிடித்தனர். நேற்று இரவு அவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே 10 நாட்டின் கல் தொலைவில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி மீனவர்கள் மீது சரமாரி துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் பாலமுருகன், அரவிந்த் ஆகியோர் காயம் அடைந்தனர். பாலமுருகனுக்கு கழுத்து, தோள்பட்டையிலும், அரவிந்துக்கு தொடையிலும் காயம் ஏற்பட்டது.
இதனால் சக மீனவர்கள் அதிச்சி அடைந்தனர். உடனடியாக காயம் அடைந்த மீனவர்களை அழைத்து கொண்டு படகில் கரைக்கு திரும்பினர். காயம் அடைந்த 2 மீனவர்களுக்கும் காரைக்கால் ஆஸ்பத்திரியில் முதுலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் 2 பேரும் புதுவை ஜிம்பர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ராமேசுவரம், நாகை, மீனவர்களை இலங்கை கடற்படை அடிக்கடி சிறைபிடித்து செல்லும் சம்பவம் நடைபெற்று வந்தது. மேலும் தமிழக மீனவர்களின் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்து வைத்துள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் தமிழக மீனவர்களுடன் டெல்லியில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அப்போது இலங்கை அமைச்சர் இனி தமிழக மீனவர்களை சிறை பிடிக்க மாட்டோம் என கூறியிருந்தார்.
இந்த நிலையில் நாகை, காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி இருப்பது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பிரச்சினைக்கு மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் மற்றும் போலீசார் செம்போடை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது செம்போடை அரசு மதுபான கடை அருகே அனுமதியில்லாமல் மதுபானம் விற்றுக் கொண்டிருந்தவர் போலீசை பார்த்ததும் ஓட தொடங்கினர். அவரை போலீசார் விரட்டி சென்று பிடித்து விசாரித்த போது அவர் செம்போடை பகுதியை சேர்ந்த தேவேந்திரன் (38) என்பது தெரிய வந்தது.
மேலும் அவர் அனுமதியில்லாமல் வைத்திருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தும், வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தலைஞாயிறு:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள பிரிஞ்சிமூலையை சேர்ந்தவர் முருகையன். இவர் தண்ணீரின்றி சம்பா பயிர்கள் கருகியதால் மனவேதனை அடைந்து நேற்று முன்தினம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.அவரது இறுதி ஊர்வலம் நேற்று நடந்தது. இதில் அதே பகுதியை சேர்ந்த விவசாயி பால சுப்பிரமணியன் (65) கலந்து கொண்டார்.
தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே சென்ற போது பால சுப்பிரமணியனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவர் அதே இடத்தில் மயங்கி விழுந்து இறந்தார்.
கீழ்வேளூர் பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் விவசாயத்திற்கு தண்ணீர் இன்றி பயிர் கருகியதை கண்டு அதிர்ச்சியடைந்து 3 விவசாயிகள் இறந்துள்ளனர்.
நாகை மாவட்டத்தில் 5 விவசாயிகள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே கோழிகுத்தி கிராமத்தை சேர்ந்தவர் சகாயசபரிநாதன் (வயது 39). இவருடைய மனைவி லதா (32).
கணவன்-மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்தது. இதனால் மனமுடைந்த இருவரும் சம்பவத்தன்று மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தனர்.
உடனே அக்கம் பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வீட்டிற்கு வந்த லதா திடீரென்று இறந்து விட்டார்.
மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சகாய சபரிநாதனும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகை மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சி பகுதிக்குட்பட்ட பிரிஞ்சிமூலை பகுதியை சேர்ந்தவர் முருகையன் (வயது45). விவசாயி. இவர், அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கி குத்தகை அடிப்படையில் சம்பா நெல் சாகுபடி செய்தார்.
இந்தநிலையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் கருகின. இதனால் முருகையன் மனவேதனையில் காணப்பட்டார். அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் தலைஞாயிறு கடை வீதியில் முருகையன் உடலை வைத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க கோரி அவரது உறவினர்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் வேதாரண்யம் தாசில்தார் இளங்கோவன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். அதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து தலைஞாயிறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை செய்து கொண்ட முருகையனுக்கு, ராணி என்ற மனைவியும், நித்யா என்ற மகளும், ஹரிகரன் என்ற மகனும் உள்ளனர்.
கீழ்வேளூர்:
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள சேமங்கலம் தெற்கு தெருவை சேர்ந்தவர் அந்தோணிசாமி (62) விவசாயி.
இவருக்கு 2 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் சம்பா பயிர் சாகுபடி செய்து இருந்தார். நாற்று விட்டு 42 நாட்கள் ஆகிய நிலையிலும் பயிருக்கு தேவையான தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் மன வேதனையில் இருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை அந்தோணிசாமி திடீரென அவர் வயலில் மயங்கி விழுந்து இறந்தார். இது குறித்து கீழ்வேளூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வயலில் மயங்கி விழுந்து இறந்த அந்தோணிசாமிக்கு பிலோமினாள் என்ற மனைவியும், விக்டோரியா ராணி, வினோதினி ராணி, விண்ணரசி ராணி ஆகிய 3 மகள்களும் வின்செண்ட் என்ற மகனும் உள்ளனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட குப்பையன்காடு பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சப்பன். இவரது மகன் வீரையன் (26). இவர் 2010ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த வேதநாயகி என்ற பெண்ணை கொலை செய்த வழக்கு, பல்வேறு வழிபறி மற்றும் திருட்டு வழக்கில் சிறை சென்று ஜாமீனில் வெளிவந்தார்.
தொடர்ந்து இவர் 4.10.16 அன்று தேத்தாகுடி பகுதியில் ஒரு கடையில் தகராறு செய்து கடைக்காரரிடமிருந்து 500 ரூபாய் பறித்த வழக்கில் சிறையில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை பரிந்துரையின் பேரில் நாகை மாவட்ட கலெக்டர் பழனிசாமி, வீரையனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதன் பேரில் வேதாரண்யம் போலீசார் நாகை கிளை சிறைச்சாலையில் இருந்த வீரையனை குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்து, அவரது மனைவி மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
வேதாரண்யம் அடுத்த கத்தரிப்புலம் கீழக்குத்தகை பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி லெட்சுமி (55). இவரது மகனுக்கு வேதாரண்யம் பகுதி தேத்தாகுடி தெற்கு பகுதியைச் சேர்ந்த ராமையன் மனைவி விஜயா (45) என்பவரது மகளை திருமணம் செய்து கொடுத்துள்ளார்.
இந்நிலையில் விஜயா தனது மகளை பார்ப்பதற்காக சென்றபோது தன்னை மாமியார் பாகுபாடாக நடத்துகிறார் என மகள் கூறியுள்ளர். இதுகுறித்து லெட்சுமியிடம் அவர் கேட்டுள்ளார்.
இதில் ஒருவருக்கொருவர் தகராறு ஏற்பட்டு லெட்சுமியை விஜயா கீழே தள்ளி கட்டையால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த லெட்சுமி வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்த புகாரின் பேரில் கரியாப்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பசுபதி வழக்கு பதிவு செய்து விஜயாவை கைது செய்து வேதாரண்யம் கோர்ட்டில் ஆஜர் செய்தார்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் காவல் சரகம், தென்னம்புலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது36). விவசாயி.
இவர் சம்பவத்தன்று தன் நிலத்தின் வேலியை அடைத்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (50), அவரது மனைவி சுசீலா (44) ஆகிய இருவரும் சென்று மாரிமுத்துவை அவதூறாக பேசி தாக்கி உள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட மாரிமுத்து வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
புகாரின் பேரில் கரியாப்பட்டினம் போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கலையரசன் வழக்கு பதிவு செய்து பன்னீர்செல்வம், சுசீலா ஆகிய இருவரையும் கைது செய்து வேதாரண்யம் கோர்ட்டில் ஆஜர் செய்தார்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் காவல் சரகம், வடமழை மணக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (55). இவர் சம்பவத்தன்று கடையை மூடிய போது அதே பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் மகன் இளையராஜா (22) என்பவர் ஜெராக்ஸ் எடுத்து தருமாறு கேட்டுள்ளார்.
கடையை சாத்திவிட்டதால் தற்போது எடுக்க முடியாது என சொல்லியுள்ளார். மறுநாள் காலை சந்திரசேகரன் கடையை திறக்கும் போது இளையராஜா அங்கு சென்று தரக்குறைவாக பேசி மிரட்டல் விடுத்தாராம்.
இது குறித்து சந்திரசேகரன் கொடுத்த புகாரின் பேரில் கரியாப்பட்டினம் போலீஸ் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் கலையரசன் வழக்கு பதிவு செய்து இளையராஜாவை கைது செய்தனர்.






