search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டெங்கு காய்ச்சல் குறித்து தவறான தகவல்: 38 தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்
    X

    ேமயர் சரவணன் தலைமையில் கூட்டம் நடந்த போது எடுத்த படம். அருகில் மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி.

    டெங்கு காய்ச்சல் குறித்து தவறான தகவல்: 38 தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்

    • நெல்லை மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
    • பருவமழை காரணமாக டெங்கு காய்ச்சல் மற்றும் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் மேயர் சரவணன் தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

    விழிப்புணர்வு கூட்டம்

    இதன் காரணமாக டெங்கு காய்ச்சல் மற்றும் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் மேயர் சரவணன் தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி, நகர்நல அலுவலர் சரோஜா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    248 மருத்துவ முகாம்கள்

    அவர்களுக்கு தற்போது பரவும் டெங்கு காய்ச்சல் மற்றும் தொற்று நோய்களை தடுக்கும் வகையில் ஆலோசனைகள் வழங்கப் பட்டது. கூட்டத்துக்கு பின் மேயர் சரவணன் கூறியதாவது:-

    தற்போது பருவ காய்ச்சலை கட்டுப்படுத்த நெல்லை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நெல்லை மாநகர் பகுதியில் மட்டும் இந்த மாதம் 248 மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிட்டு தற்போது மக்கள் பயன்படும் வகையில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும் மாநகராட்சி சார்பில் பள்ளி மாணவ -மாணவிகள் பயன்பெறும் வகையில் கடந்த 16-ந் தேதி வரை 121 முகாம்கள் நடத்தப்பட்டு 214 குழந்தைங்களுக்கு காய்ச்சல் உள்ளதை கண்டறிந்து அவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு 25 ஆயிரத்து 256 பேர் பயன் பெற்றுள்ளனர். வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் கொசுப்புளு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அழிக்கும் பணியில் 557 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    அதுபோல தற்போது சில தனியார் மருத்துவ மனைகள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் டெங்கு காய்ச்சல் குறித்து தவறான அறிக்கை தருவதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. எனவே அவர்கள் டெங்கு தொடர்பாக முறையான பரிசோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம்.

    இது குறித்து 38 தனியார் மருத்துவமனைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். மேலும் தவறான தகவல் தெரிவித்தால் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×