search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எம்.ஜி.ஆர். அருவியில் காட்டாற்று வெள்ளம்
    X

    எம்.ஜி.ஆர். அருவியில் காட்டாற்று வெள்ளம்

    • மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது.
    • கூடலூர்-மசினகுடி இடையே 4-வது நாளாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து அணைகளும் நிரம்பி உள்ளது. நேற்று நடுவட்டம்(128 மி.மீ.), கூடலூரில்(107 மி.மீ.) அதிகபட்ச மழை அளவு பதிவாகி உள்ளது.

    இந்த நிலையில் நடுவட்டம், பைக்காரா பகுதியில் இருந்து வரும் தண்ணீர் மாயார் ஆற்றில் கலந்து ஓடுவதாலும், முதுமலை வனப்பகுதியில் பெய்த தொடர் மழையாலும் எம்.ஜி.ஆர். அருவியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இதேபோல் தரைப்பாலம் மூழ்கியவாறு உள்ளதால் கூடலூர்-மசினகுடி இடையே 4-வது நாளாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் மசினகுடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்புற மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். மேலும் பஸ் போக்குவரத்தும் இல்லாததால் மாணவ- மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிக்கு வர முடியாமல் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

    கூடலூர் நகரில் இன்று காலை முதல் கனமழை பெய்தது. பின்னர் படிப்படியாக மழை குறைந்து லேசான வெயில் தென்பட்டது. தொடர்ந்து மாலை 3 மணிக்கு பிறகு பரவலாக மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து கடும் குளிர் நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

    இதேபோன்று தேவர்சோலை பேரூராட்சி கணியம் வயல் பகுதியை சேர்ந்த சுல்தான் என்பவரது வீடு மண் சரிவு ஏற்பட்டு சேதமடைந்தது. மேலும் கூடலூரில் இருந்து ஓவேலி செல்லும் சாலையில் கெவிப்பாரா பகுதியில் வாய்க்காலில் இன்றும் அடைப்பு ஏற்பட்டு மழைநீர் தெருவுக்குள் வழிந்து ஓடியது.

    இதனால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். மேலும் கூடலூர் சின்னப்பள்ளி வாசல் தெருவில் இருந்து கோத்தர் வயல் செல்லும் சாலையில் பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டு மழை வெள்ளம் சாலையில் தேங்கியது. இதைத்தொடர்ந்து பொக்லைன் எந்திரம் கொண்டு வந்து அடைப்புகளை அதிகாரிகள் சரி செய்தனர். அதன் பின்னர் தண்ணீர் சீராக வழிந்து ஓடியது.

    Next Story
    ×