என் மலர்
உள்ளூர் செய்திகள்

காரமடை அருகே ரூ.1.12 லட்சம் பணத்துடன் ஓட்டம் பிடித்த தொழிலாளி கைது
- 27 கிராம் நகைகளை தனியார் வங்கியிலிருந்து எடுத்து உங்களது நிதி நிறுவனத்தில் அடகு வைப்பதாக கூறினார்.
- வங்கி மேலாளர் பிரசாந்த் அன்னூர் போலீசில் புகார் செய்தார்.
கோவை,
காரமடை அருகே உள்ள காமராஜர் நகரை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 25). இவர் அன்னூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவரது நிதி நிறுவனத்துக்கு ஏ.குமாரபாளையத்தை சேர்ந்த கூலித் ெதாழிலாளி சுடலை முத்து (32) என்பவர் வந்தார்.
அவர் மேலாளர் பிரசாந்திடம் 27 கிராம் நகைகளை தனியார் வங்கியில் அடகு வைத்து இருப்பதாகவும், அதனை திருப்பி உங்களது நிதி நிறுவனத்தில் அடகு வைப்பதாக கூறினார்.
இதனை உண்மை என நம்பிய நிதி நிறுவன மேலாளர் ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் பணத்தை நிதி நிறுவன ஊழியர் கோகுல்ராஜ் என்பவரிடம் கொடுத்து அனுப்பினார். இதனையடுத்து சுடலை முத்து நகைகள் அடகு வைத்து இருப்பதாக கூறி வங்கிக்கு நிதி நிறுவன ஊழியரை அழைத்து சென்றார். பின்னர் வங்கி ஊழியர் கோகுல்ராஜிடம், சுடலைமுத்து பணத்தை வாங்கி கொண்டு வங்கிக்குள் சென்றார்.
பின்னர் அவர் கோகுல்ராஜிக்கு தெரியாமல் பணத்துடன் ஓட்டம் பிடித்தார். நீண்ட நேரமாக அவர் திரும்பி வராததால் கோகுல்ராஜ் உள்ளே சென்று பார்த்தார். ஆனால் அவர் அங்கு இல்லை. பின்னர் அவர் இது குறித்து வங்கி மேலாளர் பிரசாந்துக்கு தகவல் தெரிவித்தார். அவர் இதுகுறித்து அன்னூர் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த சுடலைமுத்துவை கைது செய்தனர். கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






