

சேலம்:
சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் இந்திய குடியரசு கட்சி (ஆர்.வி), தமிழ்நாடு மதமில்லா உலகம், தமிழ்நாடு மக்கள் சேவை அறக்கட்டளை சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு இந்திய குடியரசு கட்சி (ஆர்.வி) தமிழ்நாடு பிரிவின் தமிழ்மாநில அவைத் தலைவரும், தமிழ்நாடு மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனருமான டாக்டர்.கே.நடராஜ் தலைமை வகித்தார். இந்திய குடியரசு கட்சி (ஆர்.வி) மாநிலத் தலைவர் டாக்டர்.ஆர்.வெங்கடேசன், இந்திய குடியரசு கட்சி (எம்.சி.ஆர்) மாநிலத் தலைவர் எம்.சி.ராஜேந்திரன், இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) தேசியத் துணைத் தலைவர் வழக்கறிஞர் அருண்குமார் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கையை விளக்கி பேசினார்கள்.
இந்த தொடர் முழக்க போராட்டத்தில், சேலம் மாவட்டம் ஓமலூர் பாத்திமா மகளிர் மேல்நிலைப்பள்ளி எதிரில் சரபங்கா நீர்பாசன ஓடை நிலத்தை போலி பத்திரம் தயாரித்து ரியல் எஸ்டேட் அதிபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதனை ரத்து செய்து மீதமுள்ள காலி நிலத்தில் அனைத்து சமூக பயனாளிகளுக்கும் அரசு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டி முழக்கமிட்டனர்.
இந்திய குடியரசு கட்சி (ஆர்.வி) சேலம் மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம், சேலம் மாநகரத் தலைவர் ராஜபிரசாத், மாநில கொள்கை பரப்பு செயலாளர் கே.ரங்கசாமி, இந்திய குடியரசு கட்சி (எம்சிஆர்) சேலம் மாவட்ட தலைவர் பாலசுப்ர மணியன்ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.