திங்கள் நகரில் விதிகளை மீறினால் பஸ்களுக்கு அபராதம்

மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலர் உத்தரவின் பேரில் போக்குவரத்து ஆய்வாளர் பஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறைகள், குடிநீர் தொட்டிகள், நடைபாதைகளை ஆய்வு செய்தார்.
திங்கள் நகரில் விதிகளை மீறினால் பஸ்களுக்கு அபராதம்
Published on

கன்னியாகுமரி:

திங்கள்நகர் பஸ் நிலையத்தில் குளறுபடியாக பஸ்களை நிறுத்துவது குறித்து மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கும், திங்கள்நகர் பேரூராட்சிக்கும் பல்வேறு புகார்கள் சென்றன. இதையடுத்து மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) சசி உத்தரவின்பேரில் போக்குவரத்து ஆய்வாளர் ராஜேஷ் பஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது ஒதுக்கப்பட்ட இடங்களில் தான் பேருந்துகளை நிறுத்த வேண்டுமென்றும் மினி பஸ் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவுரை கூறினார். மேற்குநெய்யூர் வழியாக பெத்தேல்புரம் செல்லும் பஸ்கள் மற்றும் ஞாறோடு, வெள்ளிச்சந்தை, திருநயினார்குறிச்சி, ஆசாரிப்பள்ளம், ராஜாக்கமங்கலம் வழியாக நாகர்கோவில் செல்லும் அரசு பஸ்கள் அனைத்தும் பஸ் ஸ்டாண்டின் வடக்கு பகுதியில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் எனவும் கூறினார்.

விதி முறைகளை மீறும் அரசு பஸ்கள், மினி பஸ்கள் மீது அபராதம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறைகள், குடிநீர் தொட்டிகள், நடைபாதைகளை ஆய்வு செய்தார். அப்போது மாற்றுதிறனாளிகளுக்கு நடை பாதை அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆய்வின் போது திங்கள்நகர் பணிமனை பொது மேலாளர், திங்கள்நகர் தேர்வுநிலை பேரூராட்சி தலைவர் சுமன், செயல் அலுவலர் எட்வின்ஜோஸ், கவுன்சிலர் செல்வின்ஜார்ஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com