என் மலர்
காஞ்சிபுரம்
பல்லாவரம் அடுத்த நாகல்கேணி திருநீர்மலை ரோட்டைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 30). பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2015-ம் ஆண்டு குடிபோதையில் அவரது குழந்தையை கொலை செய்த வழக்கில் சிறையில் இருந்தார்.
அதன்பின்னர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். சங்கர் சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்தார். அடிக்கடி குடிபோதையில் அப்பகுதியில் சுற்றி வந்தார்.
நேற்று மாலை நாகல்கேணி அண்ணாசாலை சற்குணம் சாலை சந்திப்பில் குடிபோதையில் சுற்றித்திரிந்த சங்கர் திடீரென அப்பகுதியில் இருந்த மின்சார டிரான்ஸ்பார்மர் மீது ஏறினார்.
இதை பார்த்த பொதுமக்கள் கீழே இறங்குமாறு கூறினர். ஆனால் அதற்குள் டிரான்ஸ்பார்மர் மீது ஏறி மின்கம்பியை அவர் தொட்டார். அப்போது மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு டிரான்ஸ்பார்மர் மீது விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உடனே மின்வாரியத்திற்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின்ஊழியர்கள் மின்சாரத்தை நிறுத்தி சங்கரை டிரான்ஸ்பார்மரில் இருந்து கீழே இறக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக சங்கர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மயிலாப்பூரை சேர்ந்தவர் அனந்த ராமன் (வயது 60). புரோகிதர். இவருக்கு திருமணம் ஆகவில்லை. நேற்று இரவு சிட்லபாக்கத்தில் உள்ள நண்பர் பத்மநாபன் வீட்டில் தங்கினார்.
இன்று அதிகாலை எழுந்த அனந்தராமன் திடீரென இந்த உலகத்தில் வாழ பிடிக்கவில்லை என்று கூறி தனது வயிற்றில் கத்தியால் குத்தினார்.
ரத்த வெள்ளத்தில் இருந்த அவர் அங்கிருந்த பூஜை அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பத்மநாபன் சிட்லபாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து பூஜை அறை கதவை உடைத்து மயக்க நிலையில் கிடந்த அனந்த ராமனை மீட்டனர்.
பின்னர் அவரை சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அனந்தராமனுக்கு 3 இடத்தில் கத்தி குத்து காயம் ஏற்பட்டு உள்ளது.
கூடுவாஞ்சேரியை அடுத்த பெருமாட்டுநல்லூரை சேர்ந்தவர் தன்ராஜ். இவரது மனைவி செல்லம்மாள் (52). கடந்த மாதம் 31-ந்தேதி அவர் அருகில் உள்ள ஏரிக்கரையில் ஆடு மேய்க்க சென்றார். அப்போது மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். டி.எஸ்.பி. முகிலன் மேற்பார்வையில் தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்தநிலையில் செல்லம்மாள் கொலையில் அவரது அண்ணனும், காட்டாங்கொளத்தூர் ஒன்றியக்குழு உறுப்பினருமான நாகப்பன், அவரது மகன் கவுரிராஜிக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது.
இதையடுத்து நாகப்பன், கவுரிராஜை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் சொத்து தகராறில் தங்கை செல்லம்மாளை கூலிப் படையை ஏவி நாகப்பன் தீர்த்து கட்டி இருப்பது தெரிய வந்தது.
பெருமாட்டு நல்லூர் பகுதியில் உள்ள 2 ஏக்கர் நிலம் தொடர்பாக நாகப்பனுக்கும் அவரது சகோதரின் செல்லம்மாள், நவநீதம் ஆகியோருக்கு இடையே தகராறு இருந்து வந்தது.
இந்த நிலம் தொடர்பாக கோர்ட்டிலும் வழக்கு நடந்தது. இதில் செல்லமாள், நவநீதம் ஆகியோருக்கு சாதகமாக தீர்ப்பு ஆனதாக தெரிகிறது. இதனால், நாகப்பனுக்கும், அவரது சகோதரிகளுக்கும் இடையே மோதல் அதிகரித்தது.
இதற்கிடையே பிரச்சினைக்குரிய இடத்தை வேறு ஒருவருக்கு விற்க நாகப்பன் பணம் பெற்று இருக்கிறார். இதனால் பணத்தை திருப்பி கேட்டு அவர்கள் நாகப்பனுக்கு நெருக்கடி கொடுத்தனர்.
இதைத் தொடர்ந்து நாகப்பன் மீண்டும் தனது சகோதரிகளிடம் நிலம் குறித்து சமாதானம் பேசி இருக்கிறார். இதற்கு அவர்கள் சம்மதிக்கவில்லை. மேலும் செல்லம்மாளின் மகனுக்கும் நாகப்பனின் மகனுக்கும் இடையேயும் தகராறு ஏற்பட்டது.
இந்த நிலத்தகராறே கடைசியில் தங்கை செல்லம்மாளை கூலிப்படை ஏவி கொல்லும் அளவுக்கு சென்று உள்ளது.
இந்த கொலை தொடர்பாக கூலிப்படையை சேர்ந்த ரவுடி செல்வம் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகிறார். ரவுடி செல்வம் மீது ஏற்கனவே ம.தி.மு.க. ஊராட்சி தலைவர் சம்பத் கொலை வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
கைதான கவுன்சிலர் நாகப்பன், அவரது மகன் கவுரிராஜ் ஆகியோரை போலீசார் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
சொத்து தகராறில் தங்கையை அண்ணனே கூலிப்படை ஏவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் இருந்து விமானம் மூலம் ஆமதாபாத் உயிரியல் பூங்காவுக்கு 2 ஆப்பிரிக்கா முதலைகள் இன்று அனுப்பி வைக்கப்படுகின்றன.
சென்னை முதலை பண்ணை உதவி பராமரிப்பாளர் அஜெய் கார்த்திக், ஏர்-இந்தியா மண்டல கார்கோ மேலாளர் முகமது ரியாஸ், வன உயிரின ஆர்வலர் சோஹம் முகர்ஜி, ஏர்-இந்திய உதவி பொதுமேலாளர் சீனிவாசன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள வன உயிரியல் பூங்காவில் இருந்து கடந்த 2010-ம் ஆண்டு பெண் முதலை ஒன்று சென்னை முதலை பண்ணைக்கு விமானத்தில் பத்திரமாக கொண்டு வரப்பட்டது.
இதற்கிடையில் ஆமதாபாத்தில் உள்ள பூங்காவில் இருந்த முதலை ஒன்று கடந்த 2010-ம் ஆண்டு இறந்துவிட்டதால் அங்கு குழந்தைகள் பார்வையிட முதலைகள் இன்றி இருப்பதாக அறியப்பட்டது.
இதையடுத்து சென்னை முதலை பண்ணையில் இருந்து ஆப்பிரிக்கா நீட்டு வாய் பெண் முதலைகள் இரண்டை அங்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இதற்காக மத்திய வனபூங்கா, கால்நடை மருத்துவர் உள்பட அனைத்து தரப்பு அனுமதியும் பெறப்பட்டது.
ஆப்பிரிக்காவில் இருந்து 4 பெண் நீட்டு வாய் முதலைகள் கடந்த 1999-ம் ஆண்டு சென்னை முதலை பண்ணைக்கு கொண்டு வரப்பட்டன. அதில் 25 வயது கொண்ட 8 அடி நீளம் உள்ள 2 பெண் முதலைகள் இன்று (வியாழக்கிழமை) மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் ஆமதாபாத் பூங்காவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
இந்த முதலைகள் எந்தவித கட்டணமும் இன்றி விமானத்தில் அனுப்பப்படுகின்றன. விமான போக்குவரத்தின் போது முதலைகளை கொண்டு செல்ல எந்த விதிமுறைகள் உள்ளதோ அதன்படி அனுப்பப்படும்.
கடந்த காலங்களில் லாரிகளில் முதலைகள் கொண்டு செல்லப்பட்டதால் 3 நாட்களாகும். ஆனால் தற்போது விமானத்தில் கொண்டு செல்லப்படுவதால் 3 மணி நேரத்தில் கொண்டு செல்லப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
குரோம்பேட்டை நியூ காலனியை சேர்ந்தவர் குகன் (51) தனியார் மருத்துவ கல்லூரி ஊழியர். இவரது மனைவி உமா. இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் போடுவதற்காக நேற்று இரவு ஜி.எஸ்.டி. சாலையில் எம்.ஐ.டி. மேம்பாலத்தில் சென்றனர். சீக்கிரம் பெட்ரோல் பங்கிற்கு செல்வதற்காக பாலத்தின் குறுக்கே சென்றார்.
அப்போது சிட்லபாக்கத்தில் இருந்து குரோம்பேட்டைக்கு சென்ற லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் குகன் தூக்கிவீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி குகன் இறந்தார். உமா எந்தவித காயம் இன்றி தப்பினார்.
இதுகுறித்து தாம்பரம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

லட்சதீப விழாவை முன்னிட்டு நேற்று மாலை 6 மணிக்கு வேதகிரீஸ்வரர் மலையில் பட்டாசு வெடித்து பெரிய தீபம் ஏற்றப்பட்டது. சங்குதீர்த்த குளம், தாழக்கோவில் மற்றும் ஊர் முழுவதும் ஒரே நேரத்தில் லட்சத்துக்கு மேற்பட்ட அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன.

அப்போது திருக்கழுக்குன்றம் ஊரே தீப ஒளியில் காட்சியளித்தது. இந்த காட்சியை பல லட்சம் பக்தர்கள் வீடுகளில் மாடிகளிலும், மலை மீதும், மரங்கள் மீதும் அமர்ந்து கண்டுகளித்தனர்

சிவனடியார்கள், துறவிகள் பலர் சங்கு ஒலி எழுப்பி வரவேற்றனர். பின்னர் 2 கிலோ மீட்டர் தூரம் வரை வரிசையில் நின்று பக்தர்கள் சாமியை தரிசனம் செய்தனர்.
தாம்பரம் முடிச்சூர் அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் ரங்கசாமி (57)கூலி தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி. இந்த தம்பதிக்கு சங்கர் என்ற மகனும் 1 மகளும் உள்ளனர். கடந்த 30 வருடங்களுக்கு முன்பு ரங்கசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக லட்சுமி தனது மகன், மகளுடன் தனியாக அதே பகுதியில் வசித்து வருகிறார்.
இதன் பின்னர் ரங்கசாமி பார்வதி என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 3 மகன்கள், 1 மகள் உள்ளனர். ரங்கசாமியின் முதல் மனைவி லட்சுமிக்கும், இரண்டாவது மனைவி பார்வதிக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு ரங்கசாமி வீட்டின் வெளியே படுத்து தூங்கினார். வீட்டின் உள் பார்வதியும் அவரது மகன்களும் தூங்கினர்.
இரவு 11 மணி அளவில் ரங்கசாமி திடீர் என பயங்கரமாக அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு பார்வதியும் அவரது மகன்களும் வெளியே ஓடி வந்தனர்.
அப்போது சங்கர் என்னை கத்தியால் குத்தி விட்டான் என்று கூறிவிட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கினார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி ரங்கசாமி இறந்தார்.
இதுகுறித்து பீர்கங்கரணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் லட்சுமியின் மகன் சங்கர் நேற்று இரவு அதே பகுதியில் மது குடித்து விட்டு போதையில் சொத்து தகராறில் தந்தையை கத்தியால் குத்தி கொன்றது தெரிய வந்தது.
போலீசார் தேடுவதை அறிந்ததும் சங்கர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
சென்னை:
சென்னை ஆயிரம் விளக்கில் வெளிநாட்டு பண பரிமாற்ற நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தின் வெளிநாட்டு பணம் ரூ.2 கோடியே 60 லட்சத்துடன் நவாஸ்செரீப் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தலைமறைவானார்.
இது தொடர்பாக நுங்கம்பாக்கம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாத் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அந்நிறுவனத்தில் பணியாற்றும் தினேஷ்குமார், உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரூ.2½ கோடி பணத்துடன் தலைமறைவான நவாஸ் செரீப்பை போலீசார் தேடி வந்தனர். விமான நிலையத்திலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் தாய்லாந்தில் இருந்து இன்று காலை சென்னை வந்த விமானத்தில் நவாஸ்செரீப் வந்து இறங்கினார். அவரை குடியுரிமை அதிகாரிகள் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். பின்னர் நுங்கம்பாக்கம் போலீசில் நவாஸ்செரீப் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு இன்று காலை பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த மண்ணடியை சேர்ந்த முகமது நவாஸ் செரீப்பிடம் குடியுரிமை அதிகாரிகள் விசாரித்த போது பண மோசடி வழக்கில் ஆயிரம் விளக்கு போலீசாரால் தேடப்படுபவர் என்பது தெரிந்தது.
இதையடுத்து முகமது நாவஸ் செரீப்பை அதிகாரிகள் கைது செய்து ஆயிரம் விளக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
திருப்போரூர்:
கேளம்பாக்கம் சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி மற்றும் போலீசார் முட்டுக்காடு டோல்கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது என்பதும், அவர்கள் நாவலூர் சம்பலால் தெருவை சேர்ந்த கோபால் கண்ணன் தாழம்பூர் நத்தம் ரோடு பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பதும் தெரிந்தது.
இருவரும் சிறுசேரி சிப்காட் மற்றும் தையூர் மீன்மார்கெட் பகுதியில் மோட்டார் சைக்கிள்களை திருடியதை ஒப்புக் கொண் டனர். அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டன.
இதே போல் கேளம்பாக்கம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது மோட்டார் சைக்கிள் திருடர்கள் அனகாபுத்தூரை சேர்ந்த பிரதீப்குமார், திருவேற்காடு சரத்குமார் ஆகியோரை கைது செய்தனர்.
அவர்கள் கோவளம் மற்றும் புதுப்பாக்கம் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. கைதான 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மலேசியாவில் இருந்து சென்னைக்கு நேற்று நள்ளிரவு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது ஹபீப் வைத்திருந்த பையை சோதனை செய்த போது கட்டி வைத்திருந்த துணியில் பூச்சி ஊர்வது போன்று இருந்தது.
சந்தேகம் அடைந்த அதிகாரிகள் துணியை பிரித்து பார்த்த போது சுமார் ஆயிரம் ஆமை குஞ்சுகள் இருந்தன. அளவில் மிகவும் சிறியதாக உள்ள இந்த ஆமைகள் வியாபார நிறுவனங்கள், வீடுகளில் வாஸ்துவுக்காக வளர்க்கப்படுவது ஆகும். இதன் மதிப்பு சுமார் ரூ.30 லட்சம் ஆகும். அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முகமது ஹபீப்பிடம் விசாரணை நடந்து வருகிறது.
பறிமுதல் செய்யப்பட்ட வாஸ்து ஆமைகள் வனச்சரக ஆவணகாப்பக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருப்போரூரை அடுத்த வெங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னம்மாள் (வயது 62) இவர் நேற்று பகல் 12 மணியளவில் வீட்டின் வெளியே துணி துவைத்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரிடம் முகவரி கேட்பது போல் கேட்டுள்ளனர். பின்னர் திடீரென சின்னம்மாள் கழுத்தில் கிடந்த 3 சவரன் செயினை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பினர். சின்னம்மாள் கூச்சல் போடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனடியாக 15-க்கும் மேற்பட்டோர் மோட்டார் சைக்கிளில் செயின் பறிப்பு திருடர்களை விரட்டிச்சென்றனர். சுமார் 10 கி.மீ விரட்டிச்சென்ற பொதுமக்கள் கருநிலம் அருகே உள்ள நீலமங்களம் பகுதியில் இருவரையும் மடக்கினர்.
இதில் ஒருகொள்ளையன் பொது மக்களிடம் சிக்கினான். மற்றொருவன் தப்பி ஓடி விட்டான். அவனுக்கு தர்மஅடி கொடுத்து திருப்போரூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் பிடிபட்டவன் வேங்கடமங்கலத்தை சேர்ந்த நாகராஜ் (வயது 24) என்பதும், தப்பி ஓடியவன் விஜய் (வயது 27) என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
தப்பி ஓடிய விஜய் ஊரப்பாக்கம் பெருமாள் கொலைவழக்கில் சம்மந்தப்பட்டவன் என கூறப்படுகிறது. பிடிபட்ட செயின்பறிப்பு திருடனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய விஜயை போலீசார் தேடி வருகின்றனர்.






