என் மலர்tooltip icon

    ஈரோடு

    பு.புளியம்பட்டி அருகே குடிக்க பணம் தராததால் வாலிபர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டி அருகே உள்ள வாலிபாளையம் அரிஜன காலணியை சேர்ந்தவர் சுப்பன். இவரது மகன் பண்ணாரி (வயது 18) .

    சம்பவத்தன்று பண்ணாரி தனது மச்சானிடம் குடிப்பதற்கு பணம் கேட்டாராம். அதற்கு அவர் மறுத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் பண்ணாரி வீட்டின் முன் நின்று கொண்டு தன் மேல் மண்எண்ணையை ஊற்றினார்.

    பணம் கொடுக்கிறாயா... இல்லையா... என்று மிரட்டியவர் திடீரென தீப்பெட்டியை எடுத்து உரசி பற்ற வைத்தார்.

    விளையாட்டாக சொன்னது, வினையாகி விட்டதால் அருகே இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து கூக்குரலிட்டனர்.

    அவரது உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்து சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பண்ணாரி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பவானி சாகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரவி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    திருக்குறள் இந்திய மக்கள் அனைவரையும் ஒன்றாக இணைக்கும் சக்தியாக திகழ்கிறது என்று தருண் விஜய் எம்.பி. ஈரோட்டில் பேசியுள்ளார்.
    ஈரோடு:

    கன்னியாகுமரியிலிருந்து ஹரித்துவாருக்கு திருவள்ளுவர் சிலை தருண் விஜய் எம்.பி தலைமையில் பேரணியாக எடுத்து செல்லப்படுகிறது.

    வரும் 29-ந்தேதி இந்த திருவள்ளுவர் சிலை கங்கை நதிக்கரையோரம் நிறுத்தப்படுகிறது.

    கரூர் வழியாக வந்த இந்த பேரணி நேற்று மாலை ஈரோட்டுக்கு வருகை தந்தது.

    ஈரோட்டில் பேரணி குழுவினருக்கும், தருண் விஜய் எம்.பி.க்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஈரோடு செங்கோடம்பாளையத்தில் நடந்த இந்த வரவேற்பை ஏற்றுக்கொண்ட தருண் விஜய் எம்.பி. பேசியதாவது:-

    இங்கே இளைஞர்கள் மாணவ-மாணவிகள் திரண்டு வந்து வரவேற்பு கொடுத்துள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சி. திருவள்ளுவர் என்ற அற்புத மனிதர் உங்கள் தமிழ்நாட்டில்தான் தோன்றி உள்ளார். நமக்கெல்லாம் திருக்குறளையும் தந்துள்ளார். திருக்குறள் இந்திய மக்கள் அனைவரையும் ஒன்றாக இணைக்கும் சக்தியாக திகழ்கிறது.

    உங்கள் தாய்மொழியான தமிழ்மொழியை நேசியுங்கள். உங்கள் கலாச்சாரத்தை போற்றுங்கள். என்னதான் நீங்கள் எல்லாம் ஆங்கில புலமை பெற்றிருந்தாலும் வீடுகளில் தமிழில் பேசுங்கள்.

    நான் திருக்குறளையயும் திருவள்ளுவரையும், மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் தபால்காரனாகவே இருக்கிறேன்.

    நான் உத்தரகாண்ட் மாநிலத்தில் பிறந்தாலும் தமிழ் அன்னையின் மகன் என்று கூறுவதில் பெருமை படுகிறேன். பாரத ரத்னா விருதை விட நீங்கள் எனக்கு அளித்த வரவேற்பை மிகப்பெரிய விருதாக கருதுகிறேன்.

    இவ்வாறு தருண் விஜய் எம்.பி. பேசினார்.

    விழாவில் ஒளிரும், ஈரோடு துணை தலைவர் யு.ஆர்.வி.தேவராஜன், இந்து கல்வி நிலைய தாளாளர் கே.கே.பாலுசாமி, தொழில் அதிபர் டி.நவநீத கிருஷ்ணன், அனைத்து வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் என்.சிவானந்தன், பா.ஜ.க நிர்வாகிகள் என்.பி.பழனிசாமி, ராஜேஷ்குமார், சரவணன், கிருஷ்ணகுமார், இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் பூசப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    கடைக்கு வெற்றிலை பாக்கு வாங்க சென்ற மூதாட்டி மாயமானது குறித்து அவரது மகன் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு வளையக்கார வீதியை சேர்ந்தவர் தும்பிராஜா இவரது தாயார் பெயர் குப்பாயம்மாள் (வயது 85). சம்பவத்தன்று குப்பாயம்மாள் பக்கத்தில் உள்ள கடைக்கு வெற்றிலை பாக்கு வாங்க சென்றார். ஆனால் அதன் பிறகு அவர் வீட்டுக்கு வரவில்லை வழிதெரியாமல் எங்கேயாவது சென்று விட்டார் என்று கூறப்படுகிறது.

    இது குறித்து அவரது மகன் தும்பிராஜா. ஈரோடு டவுன் போலீசில் புகார் செய்தார். புகாரில் கடைக்கு சென்ற என் தாயார் வழி தவறி மாயமாகி விட்டார். அவரை கண்டுபிடித்து தரும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

    பவானிசாகர் அருகே பொதுமக்களை பயமுறுத்தும் ஒற்றை யானையால் மாலை 6 மணிக்கு மேல் வெளியே நடமாட அப்பகுதி மக்கள் மிகவும் பீதியுடன் உள்ளனர்.
    பு.புளியம்பட்டி:

    கோவை அடுத்த மதுக்கரையில் ஒரு ஒற்றை யானை அப்பகுதி மக்களை பயமுறுத்தி வந்தது. இந்த யானை மயக்க ஊசி போட்டு 2 கும்கி யானைகளால் லாரியில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டது. இதனால் அப்பகுதி மக்களின் அச்சமும் தீர்ந்து உள்ளது.

    இதேபோல் தற்போது ஈரோடு மாவட்டம் பவானிசாகர் வனப்பகுதி விளாமுண்டி காட்டிலிருந்து ஒரு ஒற்றை யானை கடந்த சில நாட்களாக ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.

    இந்த ஒற்றை யானை கடந்த ஒரு வாரமாக இரவு 10 மணிக்கு மேல் காட்டிலிருந்து வெளியேறி ஊருக்குள் புகுகிறது. புங்கார், பெரியார் நகர், அண்ணா நகர் வழியாக பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதிக்கு சென்று தண்ணீர் குடித்துவிடடு அங்கேயே சுற்றுகிறது.

    அதன் பிறகு தெங்குமரகடா செல்லும் காராச்சி கோரை ஊருக்குள் புகுந்து அங்கேயே விடிய விடிய சுற்றுகிறது. வழியில் உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்தும் பயிர்களை துவம்சம் செய்கிறது. அதன்பிறகு காலை 6 மணியானதும் அந்த ஒற்றை யானை காட்டுக்குள் புகுந்து விடுகிறது. மீண்டும் இரவு 10 மணிக்கு மேல் ஊர்களுக்குள் புகுந்து விடுகிறது.

    தினமும் ஒற்றை யானை ஊர்களுக்குள் புகுவதால் அப்பகுதி மக்கள் மிகவும் பீதியுடன் உள்ளனர். எந்த நேரத்தில் அந்த ஒற்றை யானை எங்கு நிற்குமோ..? என்ற பயத்தில் அப்பகுதி மக்கள் மாலை 6 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே செல்ல பயப்படுகிறார்கள்.

    இப்படி தினம்..தினம் அச்சுறுத்தி வரும் இந்த ஒற்றை யானையை வனப்பகுதி உள்ளே விரட்டியடிக்க வேண்டும். அல்லது கோவை மதுக்கரையில் ஒற்றை யானையை பிடித்தது போல் பவானிசாகர் மற்றும் பு.புளியம்பட்டி பகுதியில் சுற்றி திரியும் இந்த ஒற்றை யானையையும் வனத்துறையினர் கும்கி யானைகள் மூலம் பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறையினரை கேட்டுக் கொண்டுள்ளனர்.
    அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது.

    ஈரோடு:

    அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஈரோடு மாநகர மாவட்ட காங்கிரஸ் தவைர் ரவி தலைமையில் இன்று காலை ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் விசே‌ஷ பூஜை நடந்தது.

    அதன்பிறகு கோவில் அருகே கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் ராஜேஷ் ராஜப்பா, மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் சுரேஷ், இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஜய்கண்ணா, முன்னாள் கவுன்சிலர் சுப்பிரமணியம், மாதேஷ், மண்டல தலைவர் திருச்செல்வம், பாட்சா மகளிர் காங்கிரஸ் தலைவர் புவனேஸ்வரி, அங்காளபரமமேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பவானிசாகரில் காதல் தோல்வியால் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பவானிசாகர்:

    பவானிசாகர், அண்ணா நகரை சேர்ந்தவர் முத்து (வயது47). மீனவர். இவரது மகன் பிரகாஷ்(வயது19).

    முத்துவின் மனைவி ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். தற்போது முத்து, மகனுடன் வசித்து வந்தார். பிரகாஷ் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

    பிரகாஷ் ஒரு மாணவியை காதலித்து வந்ததாகவும், அது தோல்வியில் முடிந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக பிரகாஷ் சோகத்தில் இருந்தாராம்.

    இந்நிலையில் பிரகாஷ் சம்பவத்தன்று தற்கொலை செய்ய முடிவு செய்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டார். இதில் பிரகாஷ் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். காதல் தோல்வியால் பாலிடெக்னிக் மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கோபி அருகே இன்று காலை எஸ்.எஸ்.எல்.சி. மாணவர் லாரி மோதி பரிதாபமாக பலியானார்.
    கோபி:

    கோபி அருகே உள்ள நஞ்சை ஊத்துக்குளியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சுதாகரன் (வயது 17). எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார். சுதாகரனின் தாத்தா நஞ்சை புளியம்பட்டியில் இறந்துவிட்டார். துக்க காரியத்துக்கு கோபி சென்று கரி வாங்க சுதாகரனும், சூரியாவும் (13) புறப்பட்டனர்.

    அப்போது அந்த வழியாக திருப்பூர் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கும் குமார் (24) என்பவர் கிரிக்கெட் விளையாட கோபிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரிடம் சுதாகரனும், சூரியாவும் லிப்ட் கேட்டு ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் சென்று கொண்டிருந்தனர்.

    இன்று காலை 6.30 மணியளவில் கோபி அருகே செல்லப்பன் டீ கடை என்ற இடத்தில் வரும் போது அந்த வழியாக வந்த ஒரு லாரி மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். இதில் செல்லும் வழியிலேயே மாணவர் சுதாகரன் பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஏற்கனவே தாத்தா இறந்த சோகத்தில் இருந்த உறவினர்கள் மாணவன் சுதாகரன் விபத்தில் பலியானதை கண்டு கதறி அழுத காட்சி மிகவும் பரிதாபமாக இருந்தது.
    பெட்டிகடையில் வியாபாரம் செய்த பெண்ணின் வாயை பொத்தி நகை பறித்து சென்ற 3 மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள வெள்ளையம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவ குமார். இவர் பெருந்துறையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தாமரை செல்வி. இவர் அந்த பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார்.

    சம்பவத்தன்று காலை தாமரைசெல்வி கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு 3 பேர் வந்தனர். அவர்கள் தாமரை செல்வியிடம் குளிர்பானம் வாங்கி குடித்து விட்டு நோட்டமிட்டனர்

    இதன் பிறகு அவர்கள் மீண்டும் மாலையில் வந்து குளிர்பானம் கேட்டனர். இதனால் சந்தேகம் அடைந்த தாமரை செல்வி ஏன் இங்கேயே சுற்றி கொண்டிருக்கிறீர்கள் என கேட்டார்.

    உடனே அந்த மர்ம ஆசாமிகள் தாமரைசெல்வி வாயில் துணியை வைத்து அழுத்தி அவரது கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு ஓடி விட்டனர்.

    இது குறித்து அந்தியூர் போலீசில் தாமரைசெல்வி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் விசாரணை நடத்தி தங்க சங்கிலியை பறித்த மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்.

    அக்னி வெயில் கடந்த 4–ந் தேதியுடன் முடிவடைந்தது. இதை தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது.

    ஈரோடு:

    அக்னி வெயில் கடந்த 4–ந் தேதியுடன் முடிவடைந்தது.இதை தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் அதிகமான வெயில் இருந்தாலும் அவ்வப்போது பெய்த மழை காரணமாக வெப்பம் ஓரளவு தணிந்தது.

    இந்த நிலையில் நேற்று மாலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    ஈரோட்டில் நேற்று காலை வெயில் அடித்தது. மதியம் திடீர் என்று மழை பெய்தது. பிறகு சிறிது நேரம் விட்டிருந்த மழை மாலையில் மீண்டும் பெய்ய தொடங்கியது.

    இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கிநின்றது.

    அதேபோல டி.என்.பாளையம், சத்தியமங்கலம், பவானி சாகர் , தாளவாடி, சென்னிமலை, அந்தியூர், ஆப்பக்கூடல், கவுந்தப்பாடி உள்பட பல்வேறு பகுதிகளிலும் நேற்று மாலை பரவலாக மழைபெய்தது. இதனால் இரவில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு–

    ஈரோடு –7

    பவானிசாகர் –8.6

    கவுந்தப்பாடி –3

    மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மகன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    முத்தூர்:

    ஈரோடு, சூரம்பட்டி அண்ணாவீதியை சேர்ந்தவர் குணசேகர். இவரது மகன் தினேஷ்(வயது30). இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இவரது மனைவி ஒட்டன்சத்திரத்தில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று தினேஷ் மோட்டார் சைக்கிளில் காங்கேயம்–வெள்ளக் கோவில் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    ஓலப்பாளையம் அருகே வந்த போது எதிரே வந்த லாரி ஒன்று திடீரென கட்டுபாட்டை இழந்து கண் இமைக்கும் நேரத்தில் தினேஷ் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட தினேஷ் தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு தினேஷ்க்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி தினேஷ் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து வெள்ளக்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    இறந்த தினேஷ்சின் தந்தை ஈரோட்டில் சப்–இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.

    மொடக்குறிச்சியில் மோட்டார் சைக்கிளும், மொபட்டும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் தொழிலாளி பலியானார்.
    ஈரோடு:

    கரூர் சின்னாண்டம் கோவில் வீதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 50). தொழிலாளி.

    சம்பவத்தன்று இவர் மொபட்டில் மொடக்குறிச்சி அருகே உள்ள எல்லக்கடை அருகே வந்து கொண்டு இருந்தார்.

    அப்போது அந்த வழியாக முத்ததூரை சேர்ந்த சிவசுப்பிரமணியம் என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    இந்த மோட்டார் சைக்கிளும், செல்வராஜ் வந்த மொபட்டும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

    இதில் படுகாயம் அடைந்த செல்வராஜ் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பிறகு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

    ஆனால் சிகிச்சை பலன் இல்லாமல் செல்வராஜ் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பேத்தி சீர்வரிசைக்கு ஈரோட்டுக்கு வந்த தாத்தா திடீரென மாயமானார். இது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    கேரள மாநிலம் பாலகாட்டில் வசித்தவர் வல்லப்பன் (வயது 67). இவரது மனைவி யசோதா. இவர்களின் மகள் வீடு ஈரோடு கள்ளுக்கடை மேட்டில் உள்ளது.

    மகளின் மகளுக்கு (பேத்தி) சீர் செய்யும் விழா ஈரோட்டில் நடந்தது. இதில் கலந்து கொள்ள தனது மனைவியுடன் வல்லப்பன் ஈரோடு வந்தார்.

    இந்த நிலையில் தனியாக வெளியே சென்ற வல்லப்பன் அதன் பிறகு வீட்டுக்கு வர வில்லை. மாயமானார். அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்று தெரிய வில்லை.

    இது குறித்து ஈரோடு டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இது குறித்து வழக்குபதிவு செய்து மாயமான முதியவரை தேடி வருகிறார்கள்.

    ×