என் மலர்tooltip icon

    ஈரோடு

    கோபி அருகே தோட்டத்தில் புகுந்தது சிறுத்தை அல்ல என்றும் பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் என்றும் வனத்துறையினர் கூறியுள்ளனர்.
    கோபி:

    கோபி அருகே உள்ள தாழகொம்பு புதூரை சேர்ந்தவர் சின்னு இவரது தோட்டத்தில் அதே பகுதியை சேர்ந்த சின்னான் (52) என்பவர் கரும்பு வெட்டும் தொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

    அப்போது “தோட்டத்தில் ஒரு சிறுத்தை புலி பாய்ந்து சென்றதை நான் பார்த்தேன்” என்றும் அந்த சிறுத்தை ஒரு மயிலை விரட்டி சென்றது என்று கூறி அனைவரையும் அதிர வைத்தார்.

    ஏற்கனவே இதே பகுதியில் ஒரு தோட்டத்துக்குள் மர்மவிலங்கு புகுந்திருந்தது. இந்த நிலையில் சிறுத்தையை பார்த்தேன் என்று தொழிலாளி சின்னான் புதிய குண்டை போட்டதால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் அத்தாணி வனவர் பழனிசாமி வனக்காவலர் பார்த்திபன் வன ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் கரும்பு தோட்டத்தில் பதிவாகி இருந்த கால் தடத்தை பார்வையிட்டு பரிசோதித்தனர்.

    பிறகு வனத்துறையினர் கூறும்போது, “பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம். தோட்டத்தில் பதிவாகி உள்ள கால் தடம் சிறுத்தை கால் தடம் அல்ல காட்டுப் பூனையின் தடம் ஆகும். இதுதான் மயிலை விரட்டிச் சென்றுள்ளது” என்று கூறினர்.

    வனத்துறையினர் சிறுத்தை அல்ல என்று கூறியிருப்பது பொதுமக்களின் பயத்தை போக்கி உள்ளது.

    எனினும் அப்பகுதியில் அத்தாணி வனத்துறையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    அம்மாபேட்டை அருகே வி‌ஷம் குடித்து வகுப்பறைக்கு வந்த 2 மாணவர்களுக்கு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூரில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது.

    இந்த பள்ளியில் சுந்தராம் பாளையத்தை சேர்ந்த சதீஸ்குமார் (15) ஊமாரெட்டியூர் செண்டிங் நகரை சேர்ந்த சித்தையன் (15) ஆகிய 2 மாணவர்கள் 10–ம் வகுப்பு படித்து வந்தார்கள்.

    இந்த 2 மாணவர்களையும் பெற்றோர் கண்டித்து உள்ளதாக கூறப்படுகிறது. மாணவிகளிடம் தேவையில்லாமல் பேசாமல் படிப்பில் கவனம் செலுத்துங்கள் என பெற்றோர் அறிவுரை கூறி உள்ளனர்.

    இந்த நிலையில் இன்று காலை பள்ளி வந்த இந்த 2 மாணவர்களும் வரும் போது குருணை மருந்தை (வி‌ஷம்) எடுத்து வந்தனர்.

    பிறகு பள்ளி அருகே உள்ள கரும்பு காட்டுக்கு சென்று அதை குடித்து விட்டு பள்ளிக்கூடம் வந்து வகுப்பறையில் அமர்ந்தனர்.

    அப்போது மாணவர்கள் 2 பேருக்கும் வியர்வை கொட்டியது. மயக்கமான நிலையில் இருந்ததை கண்டு பாடம் நடத்திய ஆசிரியை திடுக்கிட்டார்.

    ஆசிரியை, “ஏம்ப்பா இப்படி வியர்க்குது உங்கள் உடம்புக்கு என்ன” என்று பதட்டத்துடன் கேட்டார். அப்போது அவர்கள் “டீச்சர் நாங்க வி‌ஷத்தை குடிச்சிட்டோம்.. ஒரு மாதிரியாக வருகிறது.” என்று கூறினர்.

    உடனே சக ஆசிரியர்களுக்கு தெரிவித்து அவர்களும் ஓடி வந்தனர். உடனே இரு மாணவர்களையும பவானி ஆஸ்பத்திரியில் முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.

    அதன்பிறகு 2 மாணவர்களும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மாணவர்களின் பெற்றோரும் உறவினர்களும் ஆஸ்பத்திரியில் கதறி அழுதபடி உள்ளனர்.

    ஈரோடு லாட்ஜில் பிளேடால் கையை அறுத்து தற்கொலை செய்த கேரள வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் அரிதாஸ் (வயது 40). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் டைலராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று ஈரோடு வந்த இவர் இரவில் ரெயில் நிலையம் எதிரே உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினார். இன்று காலை வெகு நேரமாகியும் அவர் தங்கி இருந்த அறை கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் இன்டர்காமில் போன் செய்து பார்த்தனர்.

    அப்போதும் அரிதாஸ் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகப்பட்ட லாட்ஜ் ஊழியர்கள் இது பற்றி ஈரோடு சூரம்பட்டி போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கதவை உடைத்து பார்த்த போது அரிதாஸ் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவர் பிளேடால் தனது இடது கையை அறுத்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.

    அரிதாசின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சென்னிமலையில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    சென்னிமலை துணை மின் நிலையத்தில் நாளை 21-ந் தேதி (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட இடங்களில் மின்சாரம் இருக்காது.

    சென்னிமலை நகர் பகுதி முழுவதும், சின்னபிடாரியூர், நாமக்கல்பாளையம், மேலப் பாளையம் இராமலிங்கபுரம், புதுப்பாளையம், ஒரத்துப்பாளையம், அய்யம்பாளையம், பாலத்தொழுவு, கொடுமணல், வெப்பிலி, அசோகபுரம், கே.ஜி.வலசு, பசுவபட்டி, முருங்கத் தொழுவு மற்றும் எம்.பி.என்.நகர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

    இந்த தகவலை பெருந்துறை செயற் பொறியாளர் முத்துவேல் தெரிவித்தார்.

    கத்தியை காட்டி பணம் பறித்த ரவுடியை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    ஈரோடு:

    பவானி பழனி புரம் முதல் வீதியை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 27). நேற்று இவர் ஈரோடு வந்தார். பிறகு வேலையை முடித்து விட்டு பவானி செல்வதற்காக ஈரோடு பஸ்நிலையத்துக்கு செல்வதற்காக மேட்டூர் ரோடு வழியாக நடந்து சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி யுவராஜிடம் இருந்த ரூ. 500 மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை பறித்துகொண்டார்

    இதனால் அதிர்ச்சியடைந்த யுவராஜ் திருடன் திருடன் பிடியுங்கள் என்று சத்தம் போட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் கத்தியின் பின்புறத்தில். யுவராஜை தாக்கினார். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் அந்த வாலிபரை பிடிக்க முயன்றனர். அவர்களையும் அந்த வாலிபர் கத்தியை காட்டி “என்னை பிடிக்க முயன்றால்கொன்று விடுவேன்” என்று மிரட்டினாராம். இருப்பினும் பொதுமக்கள் அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, அவனது பெயர் ஜஸ்டின் சுந்தர் சிங் (வயது 32) நம்பியூர் அருகே உள்ளவெள்ளாள பாளையத்தை சேர்ந்தவர் என்பதுதெரிய வந்தது

    இதை யொட்டி ஈரோடு டவுன் போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து ரூ. 500 மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர்.

    ஆப்பக்கூடல் அருகே தனியார் நிறுவன ஊழியர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் தண்ணீர் டேங்க் பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி (வயது 51) மனைவி பெயர் ஞானசுந்தரி இவர் ஈரோட்டில் உள்ள தனியார் பாய் நிறுவனத்தில் ஊழியராக பணி புரிந்தார்.

    இன்று காலை ஞானசுந்தரி கடைக்கு போய்விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்த குமாரசாமி டி.வியில் கேபிள் வயரை சொருகினார். இதில் எதிர்பாராத விதமாக ‘எர்த்’ ஆகி அவரை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் சத்தம் போட்டபடி கீழே மயங்கி விழுந்தார்.

    இதை கண்ட அவரது மனைவி அக்கம் பக்கத்தினரை சத்தம் போட்டு வரவழைத்தார்.

    அவர்கள் ஓடிவந்தனர். பிறகு 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆம்புலன்சு விரைந்து வந்தது. அதில் வந்தவர்கள் குமாரசாமியை பரிசோதித்த போது குமாரசாமி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானது தெரிய வந்தது.

    இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் விசாரித்து வருகிறார்கள். குமாரசாமி உடல் பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பலியான குமாரசாமிக்கு 2 மகள்கள் உள்ளனர். ஒரு மகள் பெயர் ரேவதி (28) பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். மற்றொரு மகள் யுவராணி திருமணம் ஆகி கணவருடன் வசித்து வருகிறார்.

    ஈரோடு அருகே வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    பவானி அருகே உள்ள தாழைப்பையனூர் என்ற இடத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. (வயது 29). இவரது மனைவி ரேவதி (23). இவர்கள் இருவரும் கட்டிட வேலைக்கு சென்று வந்தனர்.

    கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்றும் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது,

    அப்போது ரேவதி தொடர்ந்து தகராறு செய்தால் உங்களுடன் சேர்ந்து பிழைக்க மாட்டேன் என்று கூறினாராம்.

    இதன் பிறகு ரேவதி வேலைக்கு சென்று விட்டார். அப்போது வீட்டில் தனியாக இருந்த பழனிச்சாமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இது குறித்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    டி.என்.பாளையம் அருகே உடலில் மண்எண்ணை ஊற்றி வாலிபர் தீக்குளித்து சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஈரோடு:

    பங்களாபுதூர் அருகே உள்ள காளியூர் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் தர்மன் (வயது 30).

    தொழிலாளியான இவர் நோயால் அவதிப்பட்டு வந்தார். பல இடங்களில் வைத்தியம் பார்த்தும் நோய் குணமாகவில்லையாம். இதனால் அவர் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார்.

    இதை தொடர்ந்து சம்பவத்தன்று தர்மன் தனது வீட்டின் முன்பு தனது உடலில் மண் எண்ணை ஊற்றி தீ வைத்துகொண்டார்.

    இதனால் அவரது உடலில் தீப்பற்றி எரிந்தது. வேதனை பொறுக்க முடியாமல் தர்மன் அலறினார். இதை பார்த்த அவரது மனைவி செல்லம்மாள் அதிர்ச்சி அடைந்தார்.

    இதன் பிறகு தர்மன் மீது எரிந்த தீயை அணைத்து சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் பரிதாபமாக இறந்தார்

    இது குறித்து பங்களா புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி அருகே கரும்பு தோட்டத்தில் மயிலை விரட்டிச் சென்ற சிறுத்தையை நேரில் பார்த்த தொழிலாளி பயந்து ஓட்டம் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள தாழகொம்பு புதூரில் கடந்த சில நாட்களுக்கு முன் வாழை தோட்டத்துக்குள் மர்ம விலங்கு ஒன்று புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

    இந்த நிலையில் கோபி அருகே இன்று சிறுத்தை புகுந்து உள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    இது பற்றிய விவரம் வருமாறு:-

    கோபி அருகே உள்ள தாழகொம்பு புதூர் அடுத்த மூலத்துறை தடப்பள்ளி வாய்க்கால் அருகே சர்க்கரை கார சின்னு என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டம் உள்ளது. இந்த கரும்புத் தோட்டத்தில் இன்று 6 தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர். இவர்களில் தாழகொம்பு புதூரை சேர்ந்த சின்னவன் என்ற தொழிலாளியும் வேலை பார்த்தார்.

    சின்னவன் கரும்பு காட்டின் மத்தியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு மயிலை சிறுத்தை ஒன்று பாய்ந்து ஓடி விரட்டியதை கண்டு திடுக்கிட்டார். அவரது கண்ணை அவரால் நம்ப முடியவில்லை.

    மின்னல் வேகத்தில் தன் கண் முன் சிறுத்தை பாய்ந்து சென்றதை கண்டு பயந்து தோட்டத்தை விட்டு வெளியே ஓடி வந்தார்.

    இது குறித்து சக தொழிலாளர்களுக்கும் அவர் வி‌ஷயத்தை சொல்ல அவர்களும் பயந்து ஓட்டம் பிடித்தனர். இது பற்றிய தகவல் ஊருக்குள் பரவ பொதுமக்கள் அங்கு ஆயுதங்களுடன் திரண்டு வந்தனர். இதனால் மூலத்துறை மட்டுமல்லாமல் தாழகொம்பு புதூர், கூகலூர் மற்றும் கோபி நகரிலும் பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    சிறுத்தை புகுந்ததாக கூறப்படும் பகுதி அருகே அத்தாணி வன பீட் உள்ளது. இதனால் இங்கிருந்து சிறுத்தை தவறி வந்து கரும்பு தோட்டத்துக்குள் புகுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    சிறுத்தையை நேரில் பார்த்ததாக கூறப்படும் சின்னவன், “நான் பார்த்த விலங்கு சிறுத்தை தோற்றத்தில் உயரமாகவும் அகலம் அதிகமாக கொண்டதாகவும் இருந்தது” என்று கூறினார்.

    அப்பகுதியை சேர்ந்த மேலும் சிலர் கூறும்போது, “இப்பகுதியில் சிறுத்தை புகுந்திருப்பது வாய்ப்பில்லை வனத்தில் வாழும் செந்நாய் எதுவும் வந்திருக்க கூடும் எனினும் வனத்துறைக்கு தகவல் கூறி விசாரிக்க சொல்ல வேண்டும்” என்று கூறினர்.

    இது பற்றிய தகவல் அத்தாணி வனத்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அத்தாணி ரேஞ்சர் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து உள்ளனர்.

    கரும்பு காட்டில் புகுந்த விலங்கு சிறுத்தையா? அல்லது செந்நாயா? என்பது குறித்து அதன் கால் தடத்தை வைத்து பார்க்க முடிவு செய்துள்ளனர்.
    பர்கூர் மலைப்பகுதியில் பொதுமக்களை பயமுறுத்தும் ஒற்றை யானையால் வனப்பகுதி மக்கள் மிகவும் அச்சத்துடன் உள்ளனர்.
    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனப்பகுதியையொட்டி உள்ளது பர்கூர் வனப்பகுதி. இந்த பகுதியில் ஊரையொட்டி உள்ள ரோட்டோரம் பலாபழம் மரங்கள் உள்ளன. இந்த பலா பழங்களை சாப்பிட யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகும். பொதுமக்கள் மற்றும் வனத்துறையின் நடவடிக்கையால் யானைகள் ஊருக்குள் நுழையாமல் இருந்தது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஒரு ஒற்றை யானை பர்கூர் மலையில் உள்ள பெஜலிட்டி தேவர்மலை, வெள்ளிமலை, ஊசிமலை, மடம் ஆகிய வன கிராமங்களுக்குள் புகுகிறது.

    இந்த ஒற்றை யானை மாலை 6 மணிக்கெல்லாம் ஊருக்குள் புகுந்து விடுகிறது. தாழ்வாக உள்ள மரத்தில் காய்த்து தொங்கும் பலாபழங்களை தனது துதிக்கையால் பறித்து கீழே போட்டு உடைத்து சுளைகளை மட்டும் லாவகமாக எடுத்து சுவைக்கிறது.

    மாலை நேரத்தில் புகும் யானை அதிகாலை 5 மணியளவில் தான் மீண்டும் காட்டுக்குள் புகுகிறது. அதன் பிறகு மாலை 6 மணிக்குகெல்லாம் மீண்டும் அந்த ஒற்றை யானை ஊருக்குள் புகுந்து விடுகிறது.

    தினமும் ஒவ்வொரு வனக் கிராமத்துக்கு செல்லும் இந்த யானையால் வனப்பகுதி மக்கள் மிகவும் அச்சத்துடன் உள்ளனர்.

    இதனால் இந்த யானை ஊருக்குள் புகாமல் இருக்க உடனடியாக நடவடிக்கை எடுத்து யானையிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என பொதுமக்கள் வனத்துறையினரை கேட்டுக் கொண்டுள்ளனர்.
    காந்தேஸ்வரி அம்மன் கோவிலில் சிவகிரி லக்னேஸ்வரர் கோவிலில் பறவைக்காவடி ஊர்வலம் நடைபெற்றது.
    சிவகிரியில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான லக்னேஸ்வரர் காந்தேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி மாத பூக்குழி திருவிழாவை முன்னிட்டு கடந்த 11–ம் தேதி கொடியேற்றம் நடந்தது. முன்னதாக மூலவர் உட்பட அனைத்து விக்ரகங்களுக்கும் பால், தயிர், நெய், தண்ணீர், எலுமிச்சை சாறு, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் அபிஷேகம் நடந்தது.

    ஒவ்வொரு நாளும் சுவாமி அம்பாள் வீதி உலா மற்றும் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது. 7–ம் திருநாளில் இரவு விரதம் இருந்த பக்தர்கள் கோயில் முன்பு உடலில் அலகுகள் குத்தியும், மச்சக்காவடி, பறவைக்காவடி எடுத்தும் நான்கு ரதவீதிகள் வழியாக வலம் வந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

    பறவைக்காவடி செல்லும்பொழுது குழந்தை இல்லாதவர்கள் பறவைக்காவடியில் குழந்தை கொடுத்து குழந்தையை வாங்கினால் குழந்தை பிறப்பதாக ஐதிகம் உண்டு. இவ்விழாவில் தர்மகர்த்தா நச்சாட லிங்கம், உதவி தர்மகர்த்தா நடராஜன், கோவில் பூசாரி அய்யாத்துரை, மகேந்திரன், வாசுதேவநல்லூர் மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் திருஞானம், முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    திடீரென பிரேக் போட்டதால் ஓடும் பஸ்சிலிருந்து வெளியே விழுந்த பெண்ணை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    பெருந்துறை அருகே உள்ள துடுப்பதிகள்ளி பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 60). விஜயலட்சுமி பெருந்துறையிலிருந்து குன்னத்தூர் செல்லும் தனியார் பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பஸ் டிரைவர் திடீரென ‘பிரேக்’ போட்டதாக தெரிகிறது. இதில் விஜயலட்சுமி பஸ்சிலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்டார்.

    இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. இடுப்பு எலும்பு முறிந்தது. வலியால் துடித்த அவரை சிகிச்சைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பிறகு மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து பெருந்துறை சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் விசாரணை நடத்தி வருகிறார்.

    ×