என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டுப்பாளையத்தில் மாப்பிள்ளை கேட்க சென்ற தாய்-மகள்கள் மீது தாக்குதல்
    X

    மேட்டுப்பாளையத்தில் மாப்பிள்ளை கேட்க சென்ற தாய்-மகள்கள் மீது தாக்குதல்

    • தந்தை ரவி மற்றும் உறவினர்கள் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம்
    • 3 பேரை கைது செய்த போலீசார் தப்பியோடிய மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை திம்மம்பாளையம்புதூரை சேர்ந்தவர் 40 வயது பெண். இவருக்கு 22 மற்றும் 19 வயதில் 2 மகள்கள் உள்ளனர்.

    அதே பகுதியை சேர்ந்தவர் ராகுல்(22). இவரும், பெண்ணின் 2-வது மகளும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது.

    இதையடுத்து அந்த பெண், தனது மகளை ராகுலுக்கு திருமணம் செய்து வைக்க, அவரது பெற்றோரிடம் பேச முடிவு செய்தார். அதன்படி தனது மகள்களை அழைத்து கொண்டு, ராகுலின் வீட்டி ற்கு சென்று மாப்பிள்ளை கேட்டார்.

    அப்போது ராகுலின் தந்தை ரவி, மற்றும் உறவினர்கள் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அந்த பெண் மற்றும் அவரது மகள்களிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

    வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த ராகுலின் தந்தை ரவி மற்றும் உறவினர்கள் உதயகுமார்(21), வினு(21) உள்பட 4 பேர் சேர்ந்து, அந்த பெண்ணையும், அவரது மகள்களையும் தாக்கினர்.

    இதில் அவர்கள் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, அவர்களை மீட்டு காரமடையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    இதுகுறித்து அந்த பெண் காரமடை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் ராகுல், ராகுலின் தந்தை ரவி, உறவினர்கள் உதயகுமார், வினு ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

    தொடர்ந்து ரவி, உதயகுமார், ராகுல் ஆகிய 3 பேரை கைது செய்தனர். தப்பியோடிய வினுவை வலைவீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×