என் மலர்
உள்ளூர் செய்திகள்

சூலூர் அருகே விவசாயி மீது தாக்குதல்
- கள்ளப்பாளையம் அரசு பள்ளி முன்பு வந்த போது, சங்கரை, 3 பேர் வழிமறித்தனர்.
- சங்கர் கொடுத்த புகாரின் பேரில் சூலூர் போலீசார் விசாரணை நடத்தினர்.
கோவை,
கோவை வெள்ளலூர் ராமசாமி கோனார் தோட்டத்தை சேர்ந்தவர் சங்கர்(வயது 32). இவர் தற்போது பாப்பம்பட்டி, இடையர்பாளையம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவரது மகன் பட்டணத்தில் உள்ள பள்ளியில் யு.கே.ஜி. படித்து வருகிறார். சம்பவத்தன்று, சங்கர் பள்ளியில் இருந்து தனது மகனை அழைக்க பள்ளிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தனது மகனுடன் வீட்டிற்கு புறப்பட்டார்.
கள்ளப்பாளையம் அரசு பள்ளி முன்பு வந்த போது, சங்கரை, 3 பேர் வழிமறித்தனர். அவர்கள், சங்கரிடம் ஏன் இவ்வளவு வேகமாக செல்கிறாய் என கேட்டனர். அதற்கு அவர் நான் மெதுவாக தானே செல்கிறேன் என தெரிவித்தார்.ஆனால் அந்த நபர்கள் அதனை கேட்காமல் எங்களையே எதிர்த்து பேசுவியா என கேட்டு சங்கரை தாக்கினர். இதை அந்த வழியாக வந்த சங்கரின் தந்தை மற்றும் அவரது மாமா பார்த்தனர். அவர்கள் ஓடி வந்து, தடுக்க முயன்றனர்.
அப்போது அந்த மர்மநபர்கள் அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி விட்டு, அவர்களது வாகனங்களை சேதப்படுத்தினர். பின்னர் 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து சங்கர் கொடுத்த புகாரின் பேரில் சூலூர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சங்கரை தாக்கியது, கள்ளப்பாளையம் வெற்றிலைக்கடை வீதியை சேர்ந்த பொன் கார்த்திகேயன், பொன்னுசாமி மற்றும் ரமேஷ்பாபு என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பொன்கார்த்தி கேயன், பொன்னுசாமி ஆகியோரை கைது செய்தனர். ரமேஷ்பாபு தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.






