search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாநகர பகுதியில் இன்று மீண்டும் அதிரடி: 'ஹெல்மெட்' அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு அபராதம்- 50 இடங்களில் போலீசார் வாகன சோதனை

    • சில நாட்களுக்கு முன்பு மாநகர் பகுதி முழுவதும் போலீசார் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு விதிமுறைகளை மீறுபவர்களையும், ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களையும் கண்டறிந்து அபராதம் விதித்தனர்.
    • வாகனத்தில் முறையாக நம்பர் பிளேட் பொருத்தாதவர்கள். விதிமுறைகளை மீறியவர்கள், 2-க்கும் மேற்பட்டோர் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் உள்பட விதிகளை மீறி சென்றவர்களை பிடித்து அபராதம் விதித்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகர் பகுதிகளில் மோட்டார் சைக்களில்களில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். இல்லையென்றால் அபராதம் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என புதிதாக பொறுப்பேற்ற போது போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

    வாகன சோதனை

    இதனைத்தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு மாநகர் பகுதி முழுவதும் போலீசார் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு விதிமுறைகளை மீறுபவர்களையும், ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களையும் கண்டறிந்து அபராதம் விதித்தனர். 2 வாரங்களாக கடுமையாக பின்பற்றப்பட்ட இந்த வாகன சோதனை கடந்த சில நாட்களாக குறைந்திருந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் மாநகர் பகுதிகளில் கடும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    50 இடங்களில்...

    அதன்படி பழைய பேட்டை சோதனை சாவடி, வழுக்கோடை முக்கு, நயினார்குளக்கரை, டவுன் ஆர்ச், மாநகராட்சி அலுவலகம், சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் கீழ் பகுதி, வண்ணார்பேட்டை, முருகன்குறிச்சி, பாளை மார்க்கெட், சமாதானபுரம் உள்ளிட்ட 50 இடங்களில் இன்று போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் சென்றவர்களை மறித்து அபராதம் விதித்தனர். ரூ.100 முதல் ரூ.1,000 வரை வாகன ஓட்டிகளிடம் அபராதமாக வசூலித்தனர்.

    இதேபோல் வாகனத்தில் முறையாக நம்பர் பிளேட் பொருத்தாதவர்கள். விதிமுறைகளை மீறியவர்கள், 2-க்கும் மேற்பட்டோர் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் உள்பட விதிகளை மீறி சென்றவர்களை பிடித்து அபராதம் விதித்தனர்.

    ஒருசில இடங்களில் போலீசார் மறித்த போது சில வாகன ஓட்டிகள் மின்னல் வேகத்தில் தப்பி சென்ற சம்பவமும் நடந்தது.

    Next Story
    ×