என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாளையங்கோட்டையில் விபத்து -போக்குவரத்து கழக பெண் ஊழியர் மோட்டார் சைக்கிள் மோதி சாவு
- வேலம்மாள் நேற்று மாலை அருகில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளார்.
- மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வேலம்மாள் பரிதாபமாக இறந்தார்.
நெல்லை:
பாளை வி.எம்.சத்திரம் பகுதியில் வசித்து வந்தவர் வேலம்மாள் (வயது63). இவரது கணவர் சண்முகம் நெல்லை அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இதையடுத்து அவர் பணியின் போது இறந்ததால் வேலம்மாளுக்கு அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் வேலை கிடைத்தது. அதில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற வேலம்மாள் நேற்று மாலை அருகில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளார்.
அப்போது திருச்செந்தூர் மெயின் ரோட்டை கடக்க முயன்ற அவர் மீது அவ்வழியே வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வேலம்மாள் படுகாயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் வேலம்மாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






