search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அதிமுக
    X
    அதிமுக

    பாராளுமன்ற மேல்சபை தேர்தல்- 2 எம்.பி. இடங்களுக்கு அ.தி.மு.க.வில் கடும் போட்டி

    வேட்புமனு தாக்கலுக்கு 31-ந்தேதி வரை காலஅவகாசம் இருப்பதால் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியாக இன்னும் ஒரு வாரம் வரை ஆகலாம் என்று கூறப்படுகிறது.
    சென்னை:

    பாராளுமன்ற மேல்சபையில் 57 எம்.பி. இடங்கள் காலியாகின்றன. இந்த 57 எம்.பி. இடங்களுக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் அடுத்த மாதம் (ஜூன்) 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

    தமிழ்நாட்டில் தற்போது மேல்சபை எம்.பி.க்களாக உள்ள டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் (மூவரும் தி.மு.க.) எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், நவநீத கிருஷ்ணன், ஏ.விஜயகுமார் (மூன்று பேரும் அ.தி.மு.க.) ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வருகிற 29-ந்தேதியுடன் நிறைவுபெறுகிறது.

    தமிழகத்தில் இருந்து இந்த 6 பேருக்கு பதில் புதிதாக 6 பேரை தேர்வு செய்ய ஜுன் 10-ந்தேதி தேர்வு நடத்தப்பட உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஒரு மேல்சபை எம்.பி.யை தேர்வு செய்ய 34 எம்.எல்.ஏ.க்களின் வாக்குகள் தேவை. மொத்தம் உள்ள 234 எம்.எல்.ஏ.க்களில் தி.மு.க. கூட்டணிக்கு 159 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால் 4 மேல்சபை எம்.பி. பதவிகளை பெற முடியும்.

    இதேபோன்று அ.தி.மு.க. கூட்டணிக்கு 75 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால் அ.தி.மு.க.வில் இருந்து 2 மேல்சபை எம்.பி.க்களை தேர்வு செய்ய முடியும். 6 எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைமுறைகள் வருகிற 24-ந்தேதி தொடங்க உள்ளது. அன்று முதல் 31-ந்தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.

    தி.மு.க. கூட்டணியில் மொத்தம் உள்ள 4 இடங்களில் ஒரு இடத்தை கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு தி.மு.க. விட்டுக்கொடுத்து உள்ளது. தி.மு.க. சார்பில் போட்டியிடும் 3 வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர். கல்யாண சுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், கிரிராஜன் ஆகிய 3 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்தநிலையில் அ.தி.மு.க. சார்பில் மேல்சபை எம்.பி. பதவிக்கு போட்டியிடும் 2 பேர் யார் என்பதில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. சார்பில் ஏற்கனவே எம்.பி.க்களாக இருந்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது என்பது உறுதியாகி உள்ளது. இதனால் புதுமுகங்கள் மேல்சபை எம்.பி.க்கு தேர்வு செய்யப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    அ.தி.மு.க.வில் 2 எம்.பி.க்களை தேர்வு செய்ய முடியும் என்பதால் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இருந்து ஒருவரும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து ஒருவரும் மேல்சபை எம்.பி.பதவிக்கு அறிவிக்கப்படலாம் என்று முதலில் கருதப்பட்டது. ஆனால் இரு தரப்பிலுமே ஏராளமானோர் எம்.பி.பதவியை கைப்பற்ற தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் 2 எம்.பி. இடங்களுக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

    எம்.பி. பதவி கேட்டு எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீர் செல்வத்தையும் தினமும் ஏராளமானோர் சந்தித்து பேசி வருகிறார்கள். தங்களை பற்றிய தகவல்களை தொகுத்து கடிதமாகவும் கொடுத்து வருகிறார்கள். இது தவிர எப்படியாவது எம்.பி. பதவியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அ.தி.மு.க. மூத்த தலைவர்களிடம் ஆதரவு திரட்டும் வேலையையும் ஓசையின்றி நடத்தி வருகிறார்கள்.

    அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் பலரும் எம்.பி.பதவி மீது கண் வைத்து காய்களை நகர்த்தி வருகிறார்கள். முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வைகைச்செல்வன், பொன்னையன், வளர்மதி, கோகுல இந்திரா, செம்மலை ஆகியோர் எம்.பி. பதவி வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வத்திடமும், எடப்பாடி பழனிசாமியிடமும் நேரடியாக கோரிக்கை விடுத்துஉள்ளனர். இவர்கள் தவிர 2-ம் நிலை தலைவர்களும் எம்.பி.பதவிக்காக முட்டி மோதி வருகிறார்கள். மொத்தத்தில் 50-க்கும் மேற்பட்டவர்கள் எம்.பி. பதவி கேட்டு கட்சி தலைமையிடம் கடிதம் கொடுத்து இருப்பதாக தெரியவந்துள்ளது.

    2 எம்.பி. இடங்களுக்கு மூத்த நிர்வாகிகள் பலரும் மோதுவதால் யாரை தேர்வு செய்வது என்பது தெரியாமல் ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் கடும் திணறலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். எம்.பி. பதவிக்கு யாரை தேர்வு செய்வது என்பது பற்றி அவர்கள் இருவரும் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இதில் ஒருமித்த கருத்து ஏற்பட்ட பிறகே 2 இடங்களுக்கான வேட்பாளர்கள் யார் என்பது அதிகாரப்பூர்வமாக தெரிய வரும்.

    ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு மறைந்த பிறகு அ.தி.மு.க. எதிர்கொள்ளும் 3-வது பாராளுமன்ற தேர்தல் இதுவாகும். ஜெயலலிதா இல்லாத நிலையில் முதல்முதலாக பாராளுமன்ற மேல்சபைக்கு தேர்தல் வந்த போது வேலூர் முகமது ஜான், சேலம் சந்திரசேகர் ஆகிய இருவரையும் எடப்பாடி பழனிசாமி எம்.பி.யாக்கினார். 2-ம் முறையாக பாராளுமன்ற எம்.பி.தேர்தலை சந்தித்த போது தம்பித்துரை, கே.பி.முனுசாமி இருவரும் எம்.பி.க்களாக ஆக்கப்பட்டனர்.

    தற்போது 3வது முறையாக எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் பாராளுமன்ற மேல்சபை எம்.பி. வேட்பாளரை சுமூகமாக தேர்வு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 2 தடவை மேல் சபை எம்.பி. தேர்தல் வந்த நிலையில் அந்த 2 தேர்தலிலும் வட மாவட்டங்கள் மற்றும் கொங்கு மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்குத்தான் வாய்ப்பு அளிக்கப்பட்டது. எனவே இந்த தடவை தென் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி வருகிறார்.

    ஓ.பன்னீர் செல்வத்தின் இந்த முயற்சியை அறிந்த தென் மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் கடும் மகிழ்ச்சியும், சுறுசுறுப்பும் அடைந்துள்ளனர். அவர்கள் தினமும் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து தங்களுக்கு எம்.பி. பதவி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதையடுத்து தென் மாவட்டங்களில் இருந்து யாரை எம்.பி. பதவிக்கு தேர்வு செய்யலாம் என்று ஓ.பன்னீர்செல்வம் தினமும் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளதாக தெரிய வந்துள்ளது.

    அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமியும் எம்.பி. பதவி தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார். தற்போதைய சூழ்நிலையில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், கோகுல இந்திரா, செம்மலை ஆகிய மூவரும் எம்.பி. பதவி வேட்பாளர் தேர்வு போட்டியில் முன்னிலையில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த மூன்று பேரில் இருந்துதான் 2 பேருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று அ.தி.மு.க. வட்டாரத்தில் பேசப்படுகிறது.

    2 எம்.பி. இடங்களுக்கு அ.தி.மு.க.வில் கடும் போட்டி நிலவுவதால் வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியாகும் என்பதில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. சார்பில் மேல்சபையில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் இருப்பதால் தனக்கு இடம் வேண்டும் என்று கோகுல இந்திரா மிகவும் வற்புறுத்துவதாக தெரிகிறது. அதேபோன்று செம்மலையும் தீவிர முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. எனவே அவர்கள் இருவருக்கும் வாய்ப்பு கிடைக்கலாம் என்று கூறுகிறார்கள்.

    வேட்புமனு தாக்கலுக்கு 31-ந்தேதி வரை காலஅவகாசம் இருப்பதால் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியாக இன்னும் ஒரு வாரம் வரை ஆகலாம் என்று கூறப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வம் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு பிரதிநிதித்துவம் கேட்பதால் அதில் ஏற்படும் சுமூக முடிவை பொறுத்துதான் வேட்பாளர் பட்டியல் தயாராகும் என்று சொல்லுகிறார்கள். எனவே அ.தி.மு.க. சார்பில் எம்.பி.யாக போகும் 2 பேர் யார் என்பதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    Next Story
    ×