search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓ.பன்னீர்செல்வம்
    X
    ஓ.பன்னீர்செல்வம்

    கட்டுமான பொருட்கள் விலையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

    ஏழை மக்களின் வீடு கட்டும் கனவு நிறைவேற வேண்டுமென்றால், கட்டுமானப் பொருட்களின் விலை கட்டுப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கடந்த 10 மாத காலமாக வீடு கட்டுவதற்குத் தேவையான அனைத்துப் பொருட்களின் விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டே செல்கின்றன.

    2 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள விலையோடு ஒப்பிடுகையில், மரத்தின் விலை மட்டும் 35 சதவீதம் உயர்ந்திருப்பதாகவும், குழாய்களின் விலை 20 சதவீதம் உயர்ந்து இருப்பதாகவும், மின் சாதனங்களின் விலை 10 சதவீதம் உயர்ந்து இருப்பதாகவும், சிக்கனமான பட்ஜெட்டில் வீடு கட்டுபவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், வழக்கத்திற்கு மாறான இந்த விலை உயர்வு கட்டுமானத் தொழிலையே முடக்கிப் போட்டுள்ளதாகவும், வீடு கட்டுவதற்கான செலவு கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 25 சதவீதம் உயர்ந்துள்ளது.

    இரும்பு விலை உயர்விற்கு உக்ரைன் போர் ஒரு காரணம் என்று சொல்லப்பட்டாலும், மற்ற பொருட்களின் விலை உயர்ந்து இருப்பது ஆச்சரியம் அளிப்பதாகவும், இதன் காரணமாக அடுக்குமாடி குடியிருப்பின் விலையும் 10 சதவீதம் உயர்ந்து இருக்கிறது என்றும் அத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

    இது மட்டுமல்லாமல், சென்ற ஆண்டு சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் உள்கட்டமைப்பு வளர்ச்சிக் கட்டணத்தை 20 சதவீதம் உயர்த்தியுள்ளது வீடு கட்டுவோர் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

    ஏழை மக்களின் வீடு கட்டும் கனவு நிறைவேற வேண்டுமென்றால், கட்டுமானப் பொருட்களின் விலை கட்டுப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.

    எனவே, முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, கட்டுமானப் பொருட்களின் விலையினை கட்டுக்குள் கொண்டு வந்து, ஏழை எளிய மக்களின் வீடு கட்டும் செலவினைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×