என் மலர்
உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் புறக்காவல் போலீஸ் நிலைய கண்ணாடியை உடைத்த கும்பல்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகர பகுதியில் வடபாகம், தென்பாகம், மத்தியபாகம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்கள் உள்ளன.
இதில் வடபாகம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட திரேஸ்புரம் உப்பு சங்கம் அருகே புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த புறக்காவல் நிலையத்தில் தினமும் போலீசார் பணியில் இருப்பார்கள். இதனால் அந்த பகுதியில் குற்ற சம்பவங்கள் குறைந்து வந்தன.
நேற்று இரவு போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்து கொண்டிருந்தனர். மேலும் தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றி திரிந்தவர்கள், முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர்.
இந்நிலையில் நள்ளிரவில் அந்த வழியாக வந்த மர்ம கும்பல் புறக்காவல் நிலையத்தின் கண்ணாடிகளை கல்வீசி தாக்கியது.
மேலும் சுக்கு நூறாக அடித்து நொறுக்கிய அந்த கும்பல், உள்ளே பொருத்தப்பட்டு இருந்த 2 சி.சி.டி.வி. காமிராக்களையும் திருடிச்சென்றது.
இன்று காலை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக விரைந்து வந்த போலீசார் மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.