search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக அரசு
    X
    தமிழக அரசு

    தமிழகத்தில் பள்ளிகளை திறக்க அரசு ஆலோசனை

    ஆசிரியர்கள், மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் பொதுத்தேர்வை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் 10,12-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
    சென்னை: 

    கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வு பாதிப்புக்கு முன்பு நடத்தப்பட்டதால் தேர்வு முடிவு தாமதமாக வெளியிடப்பட்டன. 

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவில்லை. காலாண்டு, அரையாண்டு மதிப்பெண் அடிப்படையில் மார்க் நிர்ணயிக்கப்பட்டன. 

    1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். கடந்த ஆண்டை போல இந்த வருடமும் தொற்று பாதிப்பு அதிகமாக இருந்ததால் திறக்கப்பட்ட வகுப்புகளும் மூடப்பட்டன. 

    ஆசிரியர்கள், மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் பொதுத்தேர்வை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் 10,12-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. 

    1 முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். தேர்வு ரத்து செய்யப்பட்ட 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதற்கு பல்வேறு வழிமுறைகள் ஆராயப்பட்டன. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண், 10,11,12-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.

    10-ம் வகுப்பு மாணவர்களுக்கு சான்றிதழில் தேர்ச்சி என்று குறிப்பிடப்பட்டு வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்  இந்த கல்வி ஆண்டு தொடங்கியுள்ளது.

    ஆனால் மே மாதத்தில் ஏற்பட்ட 2-வது அலை தாக்கத்தால் பள்ளிகளை திறக்க முடியாத சூழ்நிலை உருவானது. 
    கொரோனா
     பாதிப்பு உச்சத்தில் இருந்ததால் அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. 

    அதன் மூலம் ஜூன் மாதத்தில் தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அரசின் தீவிர தடுப்பு நடவடிக்கையால் பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் தொற்று படிப்படியாக குறைந்ததால் பொது முடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    பொது போக்குவரத்து தொடங்கியதால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள். ஆனாலும் பள்ளி, கல்லூரிகள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளன. மாணவர்கள் ஆன்லைன் வழியாகவே வீட்டில் இருந்து படித்து வருகிறார்கள். கடந்த ஓராண்டுக்கு மேலாக பள்ளி மாணவர்கள் ஆன்லைன் வகுப்பு மூலம் கல்வி கற்பதால் மாணவர்களும், பெற்றோர்களும் மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளனர்.

    இதற்கிடையில் கொரோனா 3-வது அலை செப்டம்பர், அக்டோபரில் தாக்கக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். இதனால் பள்ளிகளை திறப்பதில் அரசு கவனமாக செயல்பட்டு வருகிறது.

    பல மாநிலங்களில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலமான புதுச்சேரியில் வருகிற 16-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. 

    தொற்று பரவல் மற்றும் உயிரிழப்பு குறைந்து இருப்பதால் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று தனியார் பள்ளி நிர்வாகிகள் வலியுறுத்துகின்றனர். 

    கொரோனா வைரஸ்

    கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 

    இந்த நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து அரசு ஆராய்ந்து வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகளை திறப்பது பாதுகாப்பாக இருக்குமா? பெற்றோர்கள் மனநிலை குறித்து கருத்து கேட்கலாமா? படிப்படியாக வகுப்புகளை தொடங்கலாமா என்பது குறித்து சுகாதார வல்லுநர்களுடன் அரசு ஆலோசனை நடத்த திட்டமிட்டு உள்ளது.

    இதன் ஒரு பகுதியாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுடன் பள்ளி கல்வி ஆணையர் காணொலி மூலம் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளார்.

    இந்த ஆலோசனைக் கூட்டம் வருகிற 16-ந்தேதி பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரை நடத்தப்படுகிறது. இதில் பிளஸ்-2 வினாத்தாள் கட்டுகள் வைக்கப்பட்டுள்ள அனைத்து மையங்களிலும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

    கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை, கல்விக்கட்டணம் குறித்த புகார்கள், அங்கீகாரமின்றி செயல்படும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், கடந்த ஆண்டின் மாணவர்கள் சேர்க்கை விவரம், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திய விவரம் போன்றவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

    மேலும் 11,12 வகுப்புகளுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது குறித்தும் விவாதிக்கப்படுகிறது. அத்துடன் பள்ளிகள் திறப்பது குறித்து அதிகாரிகளின் கருத்து கேட்கப்படுகிறது. 

    ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள நிலைமைகள் குறித்து கேட்டறியப்படுகிறது. இந்த ஆலோசனைக்கு பிறகு உயர் கல்வி அதிகாரிகள் மருத்துவ வல்லுநர்களின் கருத்துக்களை கேட்டறிய உள்ளனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    அதன் பின்னர் பள்ளிகள் திறப்பது குறித்து இறுதி முடிவு செய்யப்படும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர், பள்ளிகல்வி முதன்மைச் செயலாளர்  ஆகியோருடன் இறுதிக்கட்ட ஆலோசனை நடத்தி முடிவை அறிவிப்பார்.

    22-ந்தேதி அல்லது அதற்கு அடுத்த ஒரு சில நாட்களில் உயர் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறப்பதற்கான அனுமதி வழங்கப்படலாம் என்று தெரிகிறது. 

    இதற்கிடையில் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு  சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நாளை சந்தித்து பள்ளிகளை திறக்க வலியுறுத்துகின்றனர். 

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்தாலும் அண்டை மாநிலமான கேரளாவில் தொற்று தீவிரமடைந்து வருகிறது. அங்கிருந்து தமிழகத்திற்கு பரவக்கூடிய வாய்ப்பும் அதிகமாக இருப்பதால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. 


    Next Story
    ×