என் மலர்
செய்திகள்

தமிழகத்தில் திமுக- காங். கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும்- கார்த்தி சிதம்பரம் சொல்கிறார்
ஊட்டி:
சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் ஊட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
2019-ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலின்போது தி.மு.க. கூட்டணி எப்படி வெற்றி பெற்றதோ அதேபோல் வருகிற சட்டசபை தேர்த லின்போதும் தமிழகத்தில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களை பிடித்து ஆட்சியை பிடிக்கும்
அ.தி.மு.க. என்ன கைங்கரியம் செய்தாலும் மக்கள் மத்தியில் செல்லுபடியாகாது. 10 வருடங்களாக அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோதும் கீழ்த்தட்டு மக்களுக்கு எவ்வித நலத்திட்டங்களையும் செய்ய வில்லை.
2019-ம் ஆண்டு தேர்தலின்போது இந்தியா முழுவதும் தேர்தலில் ஒரு சூழல் நிலவியது. ஆனால் தமிழகத்தில் மட்டும் வேறுவிதமான சூழல் நிலவியது. புதுச்சேரியை பொறுத்தவரை பாரதீய ஜனதா, எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்த்து உள்ளது. இது பாரதீய ஜனதாவுக்கு ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே கோவா, மத்திய பிரதேசம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் இதுபோன்று ஆட்சியை கவிழ்த்து பாரதீய ஜனதா ஆட்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுவைக்கு பிரதமர் மோடி வரும்போது அங்கு காங்கிரஸ் முதல்-அமைச்சர் இருக்க கூடாது என்பதற்காக அங்கு நடந்து வந்த காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து விட்டார்கள். வருகிற சட்டமன்ற தேர்தலின்போது புதுவையில் பொதுமக்கள் கண்டிப்பாக பாரதீய ஜனதாவை நிராகரிப்பார்கள்.
கூட்டுறவு கடன் தள்ளுபடியை பொறுத்தவரை ஏமாற்று வேலை. நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரையில் 3 தொகுதிகளிலும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றிபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.






