search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர் செல்வம்
    X
    எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர் செல்வம்

    27-ந்தேதி அதிமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டம்- ராயப்பேட்டையில் பிரம்மாண்ட மேடை அமைப்பு

    எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைக்கும் கூட்டம் சென்னையில் நாளை மறுநாள் பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
    சென்னை:

    தமிழக சட்டசபைக்கு வருகிற ஏப்ரல் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

    அ.தி.மு.க.வின் முதல்- அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி முன் நிறுத்தப்பட்டுள்ளதால், அ.தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் தீவிரமாக தேர்தல் பணியாற்ற தொடங்கி விட்டனர்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் கடந்த வாரம் பெருமாள் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

    இதன் அடுத்தக்கட்டமாக எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைக்கும் கூட்டம் சென்னையில் நாளை மறுநாள் பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இந்த பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் சிறப்புரையாற்றி பிரசாரத்தை தொடங்கி வைக்க உள்ளனர்.

    வருகிற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. பெருவாரியான தொகுதிகளில் வெற்றிபெற போர் முழக்கமாக இப்பிரசார பொதுக்கூட்டம் அமையும் என்று நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்த பொதுக்கூட்டத்தில் தலைமைக்கழக நிர்வாகிகள், வழிகாட்டுக்குழு உறுப்பினர்கள், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.

    இதற்காக ராயப்பேட்டை மைதானத்தில் பிரம்மாண்டமான மேடை அமைக்கப்படுகிறது. இதில் முன்னணி நிர்வாகிகள் அமரும் வகையில் பெரிய அளவில் மேடை அமைக்கப்படுகிறது.

    இந்த பொதுக்கூட்டத்தில் சுமார் 20 ஆயிரம் பேர்களை திரட்டவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு நுழைவு வாயிலில் சானிடைசர் கொடுத்து கைகளை சுத்தப்படுத்திய பின்னரே பொதுக்கூட்ட மைதானத்தில் அனுமதிக்கப்படுவார்கள். முகக்கவசமும் ஒவ்வொருவருக்கும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கூட்டத்துக்கான ஏற்பாடுகளை தலைமைக் கழகம் விரிவாக செய்து வருகிறது. மாவட்டக்கழக செயலாளர்கள் ஆதிராஜாராம், விருகை ரவி ஆகியோரும் முன்னின்று கூட்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
    Next Story
    ×