என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆலையில் தீப்பிடித்ததால் அதற்குள் இருந்த எந்திரங்கள் எரிந்து நாசமாகி இருக்கும் காட்சி.
    X
    ஆலையில் தீப்பிடித்ததால் அதற்குள் இருந்த எந்திரங்கள் எரிந்து நாசமாகி இருக்கும் காட்சி.

    பந்தலூர் அருகே அரிசி ஆலையில் தீ விபத்து- ரூ.20 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்

    பந்தலூர் அருகே உள்ள எருமாட்டில் அரிசி ஆலையில் தீப்பிடித்தது. இதில் ரூ.20 லட்சம் பொருட்கள் எரிந்து நாசமானது.
    பந்தலூர்:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள எருமாடு பகுதியை சேர்ந்தவர் சஜி. இவர் அங்குள்ள பஜாரில் அரிசி ஆலை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் அவர் வழக்கம்போல தனது ஆலையை பூட்டிவிட்டு வீட்டிற்கு வந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் அரிசி ஆலையில் திடீரென்று தீப்பிடித்து மளமளவென எரிந்தது. இதனால் அங்கு புகை மூட்டம் போல காட்சியளித்தது. இது குறித்து தகவல் அறிந்த அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ வேகமாக எரிந்ததால் அணைக்க முடியவில்லை.

    இது குறித்து சுல்தான்பத்தேரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

    இந்த விபத்தில் ஆலைக்குள் இருந்த எந்திரங்கள், எண்ணெய், அரிசி, மிளகாய் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. அதன் மதிப்பு ரூ.20 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இது குறித்து தகவல் அறிந்த எருமாடு போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×