என் மலர்
செய்திகள்

நீலகிரி, கோவையில் பலத்த மழை
குன்னூர்:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாகவே பகல் நேரங்களில் தூரலும், இரவில் கனமழையும் பெய்து வருகிறது. குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று காலை முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. சாரல் மழையால் கடும் குளிரும், பனிமூட்டமும் நிலவியது. இதனால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர்.
அதனை தொடர்ந்து மாலை 6 மணியளவில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் கனமழை கொட்டியது.
தொடர்ந்து நள்ளிரவு வரை கொட்டி தீர்த்த கனமழை காரணமாக குன்னூர் பஸ் நிலைய பகுதி, மார்க்கெட் வளாக பகுதி, தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. முக்கிய சாலைகளில் தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஒடியதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.
பலத்த காற்றுடன் பெய்த இந்த மழைக்கு குன்னூர்- ஊட்டி சாலையில் காணிகிராஜ் என்ற இடத்தில் நின்றிருந்த ராட்சத மரம் முறிந்து நடுரோட்டில் விழுந்தது.
இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள மஞ்சணகொரை, கோடப்பமந்து, பெர்ன்ஹில் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் நேற்று காலையில் இருந்து மாலை வரை பனிமூட்டம் நிலவியது.
இதனால் சாலைகளில் எதிரே வந்த வாகனங்கள் தெரியாததால் வாகன ஒட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றனர். தொடர் பனிமூட்டத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊட்டி படகு இல்லத்தில் படகு சவாரியும் நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
கோவையில் கடந்த சில தினங்களாக குளிர்ச்சியான கால நிலை நிலவி வருகிறது. அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருவதால் காலை நேரங்களில் கடுமையான குளிர் நிலவுகிறது. நேற்று மாலை திடீரென காற்றுடன் மிதமான மழை பெய்தது.
இந்த மழையால் அவினாசி சாலை, காந்திபுரம் சாலை, ரெயில்நிலைய சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. மாவட்டத்தின் பிறபகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம், உடுமலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை முதல் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து இன்று காலையும் மிதமான காலநிலையே நிலவி வருகிறது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் அமராவதி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து கொண்டே செல்கிறது.
அணையில் இருந்து பாதுகாப்பு கருதி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் அமராவதி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அமராவதி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்மழை காரணமாக திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.






