search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யானை
    X
    யானை

    கூடலூரில் வீட்டை உடைத்து விவசாயியை தாக்கிய காட்டுயானை- பொதுமக்கள் பீதி

    கூடலூரில் காட்டு யானை குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வீடுகளை முற்றுகையிட்டு வருவதால் பொதுமக்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டமம் கூடலூர் தாலுகா ஸ்ரீமதுரை ஊராட்சி பகுதியில் கடந்த சில வாரங்களாக காட்டு யானை ஒன்று முகாமிட்டு உள்ளது. இந்த யானை அப்பகுதியில் உள்ள பாக்கு, தென்னை, வாழை உள்ளிட்ட தோட்டங்களில் புகுந்து பயிர்களை தின்று நாசம் செய்து வருகிறது. இதனால் பொருளாதார ரீதியாக விவசாயிகள் நஷ்டம் அடைந்து வருகின்றனர்.

    மேலும் இரவு நேரங்களில் காட்டு யானை குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வீடுகளை முற்றுகையிட்டு வருவதால் பொதுமக்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை ஸ்ரீமதுரை ஊராட்சி ஓடக்கொல்லி மாங்களாச்சிகுன்னு பகுதிக்குள் காட்டு யானை வந்தது. பின்னர் அப்பகுதியை சேர்ந்த விவசாயி சந்திரன் என்பவரது வீட்டை காட்டு யானை சேதப்படுத்தியது.

    அப்போது சத்தம் கேட்டு வீட்டில் தூங்கி கொண்டு இருந்த சந்திரன் பயத்தில் எழுந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் அவரையும் யானை தாக்கியது. இருப்பினும் சந்திரன் காட்டு யானையிடம் இருந்து தப்பி ஓடினார். இந்த சமயத்தில் வீட்டில் இருந்த பொருட்களை காட்டு யானை உடைத்து சேதப்படுத்தியது. மேலும் சந்திரனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அப்பகுதிக்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் படுகாயம் அடைந்த சந்திரனை கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானையை வனத்துக்குள் விரட்டியடிக்க வேண்டும். மேலும் ஊருக்குள் மீண்டும் வராத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு சந்திரன் வீட்டை காட்டு யானை சேதப்படுத்தியது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தற்போது மீண்டும் அவரது வீட்டை காட்டு யானை சேதப்படுத்தியதால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர். மேலும் ஓடக்கொல்லி, கோழிக்கண்டி, கரிச்சன கொல்லி, தேன்கொல்லி உள்பட பல்வேறு பகுதிகளில் காட்டு யானை முகாமிட்டு உள்ளது. இந்த யானை தோட்ட பகுதியில் புகுந்து தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது.

    Next Story
    ×