search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பஸ் படிக்கட்டில் இருந்து விழுந்து வாலிபர் பலி - சி.சி.டி.வி. காமிரா மூலம் பஸ் டிரைவர் கைது
    X

    பஸ் படிக்கட்டில் இருந்து விழுந்து வாலிபர் பலி - சி.சி.டி.வி. காமிரா மூலம் பஸ் டிரைவர் கைது

    சேலம் அருகே பஸ் படிக்கட்டில் இருந்து விழுந்து வாலிபர் பலியான சம்பவம் குறித்து டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேலம்:

    தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாது. இவரது மகன் முத்து (வயது 24).

    கட்டிட தொழிலாளியான இவர் கோவையில் சென்ட்ரிங் வேலைக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் தனியார் பஸ்சில் புறப்பட்டு சேலம் வந்து கொண்டிருந்தார்.

    இரவு சுமார் 11 மணிக்கு சேலம் சுந்தர்லாட்ஜ் சிக்னல் அருகே வந்தபோது, பஸ்சின் முன்பக்க படிக்கட்டில் இருந்து முத்து கீழே விழுந்தார். இதில் அவரது கை முறிந்தது. முகத்திலும் பலத்த காயம் அடைந்தார்.

    மயங்கிய நிலையில் கிடந்த முத்துவை, ரோந்து வாகனத்தில் வந்த போலீசார் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றி தகவல் அறிந்த அஸ்தம்பட்டி போலீசார், சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அதில், முத்து பஸ் படிக்கட்டில் இருந்து கீழே விழுந்ததும், அவரை அந்த பஸ்சின் டிரைவர், கண்டக்டர் ஆகியோர் கண்டு கொள்ளாமல் சென்றதும் பதிவாகியிருந்தது.

    இதையடுத்து, போலீசார் சம்பந்தப்பட்ட பஸ் உரிமையாளருக்கு, செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். உடனே, சம்பந்தப்பட்ட பஸ்சையும், டிரைவரையும் அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்குமாறு கூறினர்.

    இதனை தொடர்ந்து இன்று காலை போலீஸ் நிலையத்திற்கு டிரைவர் பஸ்சை ஓட்டி வந்தார். அவரை போலீசார் கைது செய்து, பஸ்சை பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து போலீசார் கூறுகையில், விபத்து நடந்ததும், முதலில் பஸ்சை நிறுத்தி சம்பந்தப்பட்ட நபரை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். அதன்பிறகு அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்திருக்க வேண்டும். இந்த இரண்டையுமே டிரைவரும், கண்டக்டரும் செய்யவில்லை. சி.சி.டி.வி. காமிரா உதவியால் தான், பஸ் அடையாளத்தையும் விபத்து எப்படி நடந்தது? என்பதையும் எங்களால் கண்டுபிடிக்க முடிந்தது, என்றனர்.
    Next Story
    ×