search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமல்ஹாசன் நாக்கை அறுக்க வேண்டும்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசம்
    X

    கமல்ஹாசன் நாக்கை அறுக்க வேண்டும்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசம்

    சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று பேசிய கமல்ஹாசன் நாக்கை அறுக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
    தூத்துக்குடி:

    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கமல்ஹாசன் பேசி இருக்கிறார். அவரது கொழுப்பேறிய நாக்கை அறுக்க வேண்டும். அவரது நாக்கில் சனி. இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் ஊரில் சென்று அவர் பேசி உள்ளார். தீவிரவாதிகளுக்கு மதம் கிடையாது. அவர்களை தீவிரவாதி என்றுதான் கூற வேண்டும்.

    சிறுபான்மையினர் ஓட்டை பெறுவதற்காக இந்துக்களை பற்றி பேசும் கமல்ஹாசன் நாக்கை ஒருகாலத்தில் அறுக்கத்தான் போகிறார்கள். ஏனென்றால் ரொம்ப பேசுகிறார். இந்து மதம் புனிதமான மதம். மற்ற மதங்களுக்கு முன்னோடி மதம் இந்து மதம். இந்த மதத்தை புண்படுத்துவது சில கட்சிகளுக்கு தொழிலாகி விட்டது.

    கி.வீரமணி, மு.க.ஸ்டாலின் இந்துக்கள் சடங்குகளை அவமானப்படுத்தி பேசுவர். பின்னர் ஓட்டுக்காக திருநீறு பூசிக் கொள்வார். மாலையை வாங்கிக் கொள்வார். அவர்கள் நடிப்பார்கள். தற்போது கமல்ஹாசன் அவர்களோடு சேர்ந்து இருக்கிறார்.

    ஒற்றுமையாக வாழும் மக்களிடையே வாக்கு ஒன்றையே குறிக்கோளாக வைத்து, ஓட்டு வாங்குவதற்காகவே குறுக்குசால் ஓட்டும் வேலையை மு.க.ஸ்டாலின், கி.வீரமணி செய்தனர். தற்போது கமல்ஹாசன் ஆரம்பித்து உள்ளார். இது தவிர்க்கப்பட வேண்டிய கூட்டம். ஒடுக்கப்பட வேண்டிய கூட்டம். ஒழிக்கப்பட வேண்டிய அரசியல் வழிமுறை, நெறிமுறை.



    இது போன்ற பேச்சுக்களை கமல்ஹாசன் நிறுத்த வேண்டும் அல்லது நிறுத்தப்பட வேண்டும். தேர்தல் ஆணையம் உரிய முறையில் தலையிட்டு அவரது கட்சியை தடை செய்ய வேண்டும். கட்சி வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.

    தி.மு.க. என்று சொன்னாலே தில்லுமுல்லு கட்சிதான். ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்தார். அன்றே ராகுல்காந்திக்கு நேரம் சரி இல்லை என்று சொன்னோம். ஏனென்றால் நல்லவர்கள் வாயில் இருந்து நல்ல வார்த்தை வந்தால்தான் பலிக்கும்.

    மு.க. ஸ்டாலின் நயவஞ்சகர். பாம்பின் வாயில் இருந்து வி‌ஷம்தான் வரும். அது போன்று மு.க.ஸ்டாலின் ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளர் என்று கூறிவிட்டு, சந்திரசேகரராவுடன் 3-வது அணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இது கூட்டணிக்கு குழிபறிக்கும் செயலாகும்.

    கூட்டணியில் உள்ளவர்களை தோற்கடிப்பதுதான் தி.மு.க.வினர் வேலை. அதனை மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார். நம்பகத்தன்மை இல்லாத கட்சி என்பதற்கு எடுத்துக்காட்டு தி.மு.க. தி.மு.க.வுக்கு தமிழ்நாட்டில் செல்வாக்கு கிடையாது. அந்தமானில் சென்று நிற்க வேண்டியதுதான்.

    அடையாளம் காணப்பட்ட தலைவராக எடப்பாடி பழனிசாமி உருவாகி உள்ளார். கட்சியையும், ஆட்சியையும் சிறப்பாக நடத்தி வருகிறார் என்பதை மக்கள் நம்புகிறார்கள். இதனால் தான் மக்கள் வெள்ளத்தில் நீந்தி வருகிறார். எங்களுக்கு வரக்கூடிய கூட்டம் மக்கள் விரும்பி வரக்கூடிய கூட்டம். இந்த கட்சிதான் ஆளும். வாழும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×