search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொன்பரப்பி கலவரம் பற்றி அறிக்கை: பாமக, இந்து முன்னணி மீதான குற்றச்சாட்டு உண்மையாகி விட்டது- திருமாவளவன்
    X

    பொன்பரப்பி கலவரம் பற்றி அறிக்கை: பாமக, இந்து முன்னணி மீதான குற்றச்சாட்டு உண்மையாகி விட்டது- திருமாவளவன்

    அரியலூர் அருகே பொன்பரப்பி கலவரம் பற்றிய அறிக்கையில் பாமக மற்றும் இந்து முன்னணி மீதான குற்றச்சாட்டு உண்மையாகி விட்டது என்று திருமாவளவன் கூறியுள்ளார். #ponparappiissue #thirumavalavan #pmk

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ‘மாலைமலர்’ நிருபரிடம் கூறியதாவது:-

    அரியலூர் அருகே பொன்பரப்பி கிராமத்தில் தேர்தல் தினத்தன்று தலித்துகள் மீது நடத்தப்பட்ட கொலை வெறி தாக்குதல், ஜாதி வன்கொடுமைகள் சம்பவத்தை பல்வேறு தரப்பினர் நேரில் ஆய்வு செய்தனர்.

    அதுமட்டுமல்ல பேராசிரியர் லட்சுமணன், பேராசிரியர் கதிரவன் தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினரும் ஆய்வு செய்து அறிக்கை தயாரித்துள்ளனர்.

    அதில் பா.ம.க.வும், இந்து முன்னணியும் சேர்ந்து இந்த வன்முறையை திட்டமிட்டு நடத்தியது என்பதை உறுதி படுத்தி உள்ளது.

    கலவரத்துக்கு யார் காரணம் என்பதை நாங்கள் தொடக்கத்தில் இருந்தே கூறி வருகிறோம். தேர்தலில் சிதம்பரம் தொகுதி முழுவதும் ஒட்டு மொத்தமாக வாக்குச்சாவடிகளை கைப்பற்ற பா.ம.க.வினர் திட்டமிட்டனர்.

    எங்கெங்கு எதிர்ப்பு இல்லையோ அங்கெல்லாம் வாக்கு சாவடிகளை கைப்பற்றி பா.ம.க.வினர் கள்ள ஓட்டு போட்டுள்ளனர். பெரும்பாலான இடங்களில் அவர்களின் முயற்சி பலிக்க வில்லை.

    பொன்பரப்பியில் காலை 8 மணிக்கே ஓட்டு போட வந்த தலித்துகளை அச்சுறுத்தி உள்ளனர். 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வாக்குச்சாவடி அருகே பானைகளை போட்டு உடைத்துள்ளனர். 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் தலித் குடியிருப்பு அருகே விடுதலை சிறுத்தைகள் கொடிக்கம்பத்தின் அருகில் இருந்த பானைகளையும் விட்டு வைக்காமல் உடைத்துள்ளனர்.

    இதை தட்டிக் கேட்ட குணசீலன் என்பவரை பா.ம.க. வினரும், இந்து முன்னணியினரும் தாக்கிய தோடு சேரிக்குள் புகுந்தும் பானை சின்னத்துக்கா ஓட்டு போட்டாய் என கேட்டு தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

    ஆனால் அபாண்டமாக ராமதாஸ் விடுதலை சிறுத்தைகள் மீது அவதூறுகளை பரப்பி வருகிறார். போலீசாரும் தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வில்லை.

    ஆனால் நான் அந்த கிராமத்துக்கு வரக்கூடாது என்று வாய்வழி உத்தரவு போட்டுள்ளனர். போலீசார் ஒருதலைபட்சமாக செயல் படுகின்றனர்.

    நெல்லிக்குப்பம் அருகே குச்சிப்பாளையத்திலும் விடுதலை சிறுத்தைக்கு சம்பந்தம் இல்லாத சம்பவத்தை தொடர்பு படுத்தி எங்கள் மீது ராமதாஸ் அபாண்டமாக பழி சுமத்துகிறார்.

    என் படமும், டாக்டர் அம்பேத்கர் படமும் பொறிக்கப்பட்ட இரு சக்கர வண்டியில் சென்ற தலித் இளைஞர்களை வழி மறித்து பா.ம.க.வினர் தாக்கி உள்ளனர். வண்டியையும் உடைத்துள்ளனர். தட்டிக் கேட்டவர்களையும் அரிவாளால் வெட்டி உள்ளனர்.

    ஆனால் தலித் தாக்கியதாக எங்கள் மீது ராமதாஸ் அபாண்டமாக பழி சுமத்துகின்றார்.


    இப்போது விருத்தாசலம் அருகே திலகவதி என்ற பெண் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இது மிகுந்த வேதனை அளிக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி இதை வன்மையாக கண்டிக்கிறது.

    இந்த கொலைக்கும் விடுதலை சிறுத்தைக்கும் சம்பந்தம் இல்லை. அந்த பெண்ணுக்கும் ‘ஆகாஷ்’ என்ற வாலிபருக்கும் காதல் இருந்ததாகவும், அதனால் அந்த நபருக்கு இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் எனவும் கூறி போலீசார் கைது செய்துள்ளனர்.

    அந்த வாலிபர்தான் குற்றவாளியா? என உறுதிப்படுத்தாத நிலையில் வழக்கம் போல் ராமதாஸ் பழி சுமத்தி பேசுகிறார். அரசியல் ஆதாயம் பெற குறியாக உள்ளார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியை எல்லாவற்றிலும் தொடர்புபடுத்துவதையும் வம்புக்கு இழுப்பதையும் டாக்டர் ராமதாஸ் தொழிலாக கொண்டுள்ளார். இந்த போக்கை வன்மையாக கண்டிக்கிறோம்.

    திலகவதி கொலையில் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி விருத்தாசலத்தில் 14-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ponparappiissue #thirumavalavan #pmk

    Next Story
    ×