search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லையப்பர் கோவிலில் அமைச்சர் செங்கோட்டையன் சாமி தரிசனம் செய்தார். அருகில் அமைச்சர் ராஜலெட்சுமி உள்ளார்.
    X
    நெல்லையப்பர் கோவிலில் அமைச்சர் செங்கோட்டையன் சாமி தரிசனம் செய்தார். அருகில் அமைச்சர் ராஜலெட்சுமி உள்ளார்.

    தமிழகத்தில் நீட் தேர்வு எழுத 550 மையங்கள்- அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

    தமிழகத்தில் 550 தேர்வு மையங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். #NEET #NEETExam #Sengottaiyan
    நெல்லை:

    தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று நெல்லை வந்தார். தொடர்ந்து அவர் நெல்லையப்பர் கோவில் மற்றும் அதன் அருகில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவில் ஆகிய கோவில்களில் சாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது. தமிழகம் அமைதி பூங்காவாகவும், மின் மிகை மாநிலமாகவும் உள்ளது. அடிப்படை திட்டங்களை நிறைவேற்றுவதில் இந்தியாவிலேயே முதலிடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகத்தில் தொழில் தொடங்க உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு 3 லட்சத்து 4 ஆயிரத்து 31 கோடி செலவில் புதிய தொழில்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.



    இதன் மூலம் 10 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள். தமிழகம் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறது. ‘நீட்’ தேர்வுக்காக 16 ஆயிரம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் மிகச்சிறந்த 4 ஆயிரம் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி தமிழகத்தில் உள்ள 10 கல்லூரிகளில் நடைபெறும். பொதுத்தேர்வு முடிந்தவுடன் பயிற்சி நடக்கும்.

    இந்தியாவில் ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்த பின் 4-ல் ஒரு பங்கினர் வரி செலுத்தி வருகின்றனர். தற்போது இந்தியாவில் 2 லட்சத்து 81 ஆயிரம் சி.ஏ. படித்த ஆடிட்டர்கள் உள்ளனர். இது போதுமானது அல்ல. மேலும் காமர்ஸ் படித்தவர்கள் தேவைப்படுகிறார்கள். எனவே பிளஸ்-2 வில் காமர்ஸ் எடுத்து படிக்கும் மாணவர்கள் சி.ஏ. படித்து ஆடிட்டராக சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் தரக்கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.

    ஆண்டுதோறும் 15 லட்சம் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. இனி வரும் ஆண்டுகளில் 8, 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தோம். அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. எனவே விரைவில் அவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்.

    1 முதல் 5-ம் வகுப்பு வரையிலும், 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலும் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு புதிய வண்ண சீருடை வரும் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும். இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதும் மாணவ-மாணவியர் தமிழகத்திலேயே எழுதலாம். இதற்காக வெளிமாநிலம் செல்ல அவசியமில்லை.

    தமிழகத்தில் 550 தேர்வு மையங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதில் 1½ லட்சம் பேர் தேர்வு எழுதலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #NEET #NEETExam #Sengottaiyan
    Next Story
    ×