search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜாக்டோ-ஜியோ போராட்ட பின்னணியில் அரசியல் கட்சிகள் - அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு
    X

    ஜாக்டோ-ஜியோ போராட்ட பின்னணியில் அரசியல் கட்சிகள் - அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு

    ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் போராட்ட பின்னணியில் சில அரசியல் கட்சிகள் உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். #ADMK #MinisterJayakumar #JactoGeo
    ராயபுரம்:

    ராயபுரத்தில் உள்ள புனித பீட்டர்ஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சமூகநலத்துறை மூலம் ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் விழா நடைபெற்றது.

    இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், சரோஜா ஆகியோர் கலந்துகொண்டு ஆயிரத்து 36 பயனாளிகளுக்கு தங்கம் அளித்தனர்.

    பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஸ்டாலின், தினகரன் ஆகியோர் இந்த ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்று பல்வேறு வகையில் முயற்சி செய்து வருகின்றனர். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா போன்ற தலைவர்களின் ஆசி எங்களுக்கு உள்ளது. இதனால் எந்த கொம்பன் நினைத்தாலும் இந்த ஆட்சியை அழிக்க முடியாது.

    எனவே, ஆட்சி கவிழும் என்பது கனவல்ல நினைவாகும் என்று ஸ்டாலின் கூறியது கனவாக மட்டுமே இருக்கும்.



    அ.தி.மு.க. அரசு ஒவ்வொரு துறையிலும் முத்திரை பதிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளை பிடிப்போம். 2021-ல் சட்டமன்ற தேர்தலிலும் மீண்டும் ஆட்சியை பிடிப்போம்.

    அ.தி.மு.க. அரசுக்குதான் மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் உள்ளது.

    ஜாக்டோ-ஜியோ அமைப்பினரிடம் ஏற்கனவே பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி அரசின் சிரமங்கள் எடுத்து சொல்லப்பட்டுள்ளது, 100 சதவீதம் வருவாயில் 71 சதவீதம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் என அனைத்தையும் கொடுக்கிறோம். மீதம் உள்ள 29 சதவீதத்தை நல திட்டங்களுக்கு செலவிட்டு வருகிறோம்.

    ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் போராட்ட பின்னணியில் சில அரசியல் கட்சிகள் உள்ளன.

    போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்கள் பிடிவாத போக்கை கடைபிடித்து வருகிறார்கள். எனவே வேறு வழி இல்லாமல் தான் நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.

    மாணவர்கள் நலன் கருதி அவர்கள் பள்ளிக்கு திரும்ப வேண்டும். யாரையும் நிர்பந்தம் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் எங்களுக்கு இல்லை. ஆசிரியர்களை அச்சுறுத்த நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல. நிதி இல்லை என்பதை விளக்கமாக பொதுமக்களுக்கு தெளிவுப்படுத்தி உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர் சரோஜா கூறும்போது, “தமிழகத்தில் இதுவரை 10 லட்சத்து 53 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டுள்ளது. இதில் 6 லட்சம் பட்டதாரி பெண்கள் பயன் பெற்றுள்ளனர்” என்றார். #ADMK #MinisterJayakumar #JactoGeo
    Next Story
    ×