search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சட்டசபையில் சபாநாயகருக்கு இணையாக கவர்னரின் செயலாளர் அமர்வதா?- துரைமுருகன் கேள்வி

    தமிழக சட்டசபையில் சபாநாயகருக்கு இணையாக கவர்னரின் செயலாளர் அமர்வதா? என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கேள்வியெழுப்பியுள்ளார். #TNAssembly #DuraiMurugan #Dhanapal
    சென்னை:

    சட்டசபையில் இன்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் எழுந்து ஒரு பிரச்சனையை எழுப்பினார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்த சட்டமன்றம் கண்ணியம் மிக்க சபையாகும். இதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தவிர வேறு யாரும் நுழைந்து விட முடியாது.

    சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உதவும் ஊழியர்கள் கூட தலையில் தொப்பி அணிந்துதான் உள்ளே வருவார்கள். சிறப்பு நேரமாக கவர்னர் வந்து செல்வார். சபாநாயகரால் அனுமதிக்கப்படும் விருந்தாளிகளும் வந்து அமரலாம். இவர்களை மீறி யாரும் உள்ளே வரமுடியாது.

    ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மட்டுமல்ல தலைமை செயலாளர் கூட உள்ளே வந்து இருக்கையில் அமர முடியாது. அதையும் மீறி யார் வந்தாலும் அவர்களை கண்டிக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு உண்டு. ஏன் சிறைக்கு அனுப்பும் அதிகாரம் கூட உங்களுக்கு (சபாநாயகருக்கு) உண்டு. அந்த அளவுக்கு தாங்கள் சர்வ வல்லமை படைத்தவர். எந்த கோர்ட்டும் உங்களை அழைக்க முடியாது. கட்டளையிட முடியாது.

    இப்படிப்பட்ட நிலையில் கவர்னர் உரை நிகழ்த்திய அன்று அவருடன் வந்த செயலாளர் தங்கள் சபாநாயகர் இருக்கை அருகே இணையாக நாற்காலியில் அமர்ந்து இருந்தார். பொதுவாக கவர்னர் வரும்போது அவருடன் வரும் செயலாளர் அதிகாரிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்கு சென்று தலைமை செயலாளர் அருகே அமர்வதுதான் வழக்கம்.

    ஆனால் இப்போது சட்டமன்றத்தின் உள்ளேயே உட்கார வைக்கப்பட்டிருக்கிறார். எனவே இந்த மன்றத்தின் கவுரவத்தை காப்பாற்றும் வகையில் நான் இதை தங்கள் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளேன்.

    அந்த செயலாளர் எனக்கும் நண்பர் தான். ஆனாலும், இனி எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நான் யாரையும் தனிப்பட்ட முறையில் குறை கூறுவதாக இதை சொல்லவில்லை.


    இவ்வாறு கூறிவிட்டு அதிகாரி சட்டமன்றத்தில் அமர்ந்திருந்த போட்டோவையும் காண்பித்தார். இதற்கு சபாநாயகர் கூறுகையில், எனது தனி அதிகாரம் பற்றி துரைமுருகன் கூறினார். அதற்காக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கவர்னர், சட்டசபைக்கு வரும் போது அவருடன் உதவியாளர்கள் வருவது மரபாக இருந்துள்ளது.

    கவர்னரின் உதவியாளர்கள் அமர்வதை இனிவரும் காலங்களில் சரியாக எப்படி கையாள வேண்டுமோ? அதை இனி கையாளுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNAssembly #DuraiMurugan #Dhanapal
    Next Story
    ×