search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நடிகைகள் பாலியல் புகாரை விசாரிக்க 3 பேர் குழு- விஷால் அறிவிப்பு
    X

    நடிகைகள் பாலியல் புகாரை விசாரிக்க 3 பேர் குழு- விஷால் அறிவிப்பு

    மீடூ மூலம் வெளிச்சத்துக்கு வரும் நடிகைகளின் பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவை நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் அறிவித்துள்ளார். #MeToo #Vishal
    சென்னை:

    சமீபத்தில் இந்தி நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

    சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகளின் மிரட்டலையும் பொருட்படுத்தாமல் தனுஸ்ரீ தத்தா தொடர்ந்து பாலியல் புகாரை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார்.

    அவருக்கு பெண்கள் அமைப்பு, பெண் எழுத்தாளர்கள், பிரபலங்கள் ஆதரவு தெரிவித்தனர். தனுஸ்ரீ தத்தாவைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மேலும் பல பெண் பிரபலங்கள் தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகளை வெளியிட முன்வந்தனர்.

    இதற்காக சமூக வலைதளத்தில் ‘மீ டூ’ ஹேஷ்டேக் தொடங்கப்பட்டது. அதில் பல பெண்கள் தெரிவித்த பாலியல் புகார்கள் வெளியிடப்பட்டன.


    முதலில் மத்திய மந்திரி எம்.ஜே. அக்பர் மீது பெண் பத்திரிகையாளர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்தார்.

    தென்னிந்தியாவில் முதல் முறையாக பிரபல பின்னணி பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் செய்தார். சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழா மற்றும் சுவிட்சர்லாந்தில் நடந்த இசை நிகழ்ச்சி என பல இடங்களில் தனக்கு வைரமுத்து பாலியல் தொல்லை கொடுத்தார் என்று தெரிவித்தார்.

    இதேபோல் மேலும் பல பாடகிகள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

    சின்மயிக்கு நடிகைகள் சமந்தா, வரலட்சுமி, ஆன்ட்ரியா, நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சித்தார்த் உள்பட பலர் ஆதரவு தெரிவித்தனர். நடிகர் கமல்ஹாசன், கனிமொழி எம்.பி. போன்றோரும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து கருத்து வெளியிட்டனர்.

    பாடகி சின்மயிக்கு ஆதரவாக திரைத்துறையினர் குரல் கொடுக்க வேண்டும், அவர்கள் மவுனமாக இருப்பது ஏன் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி நடிகர் சங்க பொதுச்செயலாளர் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவரான விஷாலிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-


    திரையுலகில் பாலியல் ரீதியாக பாதிப்புக்கு உள்ளாகும் பெண்களுக்கு என்ன தீர்வு காணப்போகிறீர்கள்? என்ற கேள்வியை பலரும் முன் வைத்தனர். பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது கூறியிருக்கும் பாலியல் புகார் நிரூபிக்கப்பட்டால், நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசிக்கப்படும்.

    தமிழ் திரையுலகில் மீ டூ விவகாரம் தொடர்பாக விசாரிப்பதற்கென்றே 3 பேரை கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட உள்ளது.

    ஜூனியர் கலைஞர்கள் முதல் மூத்த கலைஞர்கள் வரை புகார் செய்யலாம். அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். குழுவில் நடிகர்-நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோரது பிரதிநிதிகள் தலா ஒருவர் இடம் பெறுவார்கள்.

    இவ்வாறு விஷால் கூறினார்.

    ஏற்கனவே ‘மீ டூ’வில் வரும் பாலியல் புகார்களை விசாரிக்க மத்திய அரசு சார்பில் குழு அமைக்கப்படும் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி மேனகா காந்தி அறிவித்து இருந்தார்.

    ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய 4 பேர் இந்த குழுவில் இடம்பெறுவார்கள் என்று தெரிவித்து இருந்தார். தற்போது நடிகர் சங்கமும் குழு அமைக்க முடிவு செய்து இருப்பதன் மூலம் பாலியல் புகார்கள் விஸ்வரூபம் எடுக்கிறது.

    ஏற்கனவே ஆந்திராவில் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மீது ஒட்டு மொத்தமாக பாலியல் குற்றச்சாட்டு கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினார். சினிமா வாய்ப்பு தருவதாக கூறி நடிகர்கள், இயக்குனர்கள் பாலியல் ரீதியாக தன்னை பயன்படுத்தி ஏமாற்றி விட்டார்கள் என்றார்.

    அவர் ஐதராபாத்தில் அரைநிர்வாண போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. #MeToo #Vishal
    Next Story
    ×