search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கால்வாய் தூர்வாரும் பணியை விரைவுபடுத்த வேண்டும்- டாக்டர் ராமதாஸ் அறிக்கை
    X

    கால்வாய் தூர்வாரும் பணியை விரைவுபடுத்த வேண்டும்- டாக்டர் ராமதாஸ் அறிக்கை

    வெள்ளத்தில் இருந்து தப்பிக்க கால்வாய் தூர்வாரும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #ramadoss #tngovt

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் வட கிழக்குப் பருவமழை தொடங்க இன்னும் 6 வாரங்களுக்கும் குறைவான கால அவகாசமே இருக்கும் நிலையில் சென்னையில் மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணிகள் இன்னும் பாதியளவு கூட முடிவடையவில்லை.

    2015-ம் ஆண்டு மழை வெள்ளத்தில் சென்னை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அத்தகைய நிலை ஏற்படாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

    சென்னையில் கடந்த ஆண்டு பெய்த மழையில் சேதமடைந்த மாநகராட்சி சாலைகள் இன்று வரை சீரமைக்கப்படவில்லை. ஆனால், பல இடங்களில் ஒரே ஆண்டில் பல முறை சாலைகள் போடப்பட்ட தாக கணக்கு காட்டி மக்களின் வரிப் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. குப்பை அகற்றும் பணிகளும் சரிவர செய்யப்படாததால் சென்னை மாநகரம் குப்பை மேடாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. சீர்மிகு சென்னை நாற்றமெடுத்துக் கொண்டிருக்கிறது.

    தென்மேற்கு பருவ மழையைப் போலவே வட கிழக்குப் பருவமழையும் காவிரி பாசன மாவட்டங்களில் தொடங்கி வட தமிழகத்திலும், ஆந்திரம், தெலுங்கானா போன்ற மாநிலங்களிலும் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும் என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது.

    சென்னையில் எந்த இடத்தில் எடுத்துக் கொண்டாலும் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் பயணம் செய்தால் மழை நீர் வடிகால் பணிகளுக்காக சாலைகளும், தெருக்களும் பள்ளம் தோண்டி சிதைக்கப்பட்டிருப்பதை காண முடியும். மழை நீர் வடிகால் பணிகள் பருவமழை தொடங்குவதற்குள் முடி வடைந்து விடும் என மாநகராட்சி அதிகாரிகள் உறுதியளித்துள்ள போதிலும் அது சாத்தியமானதாகத் தோன்றவில்லை. வடகிழக்குப் பருவமழை தொடங்க இன்னும் 6 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், அதற்குள் முடிக்கும் அளவுக்கு பராமரிப்புப் பணிகள் விரைவாக நடைபெற வில்லை.

    மழைநீர் வடிகால்களை விட மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை ஆக்கிரமிப்புகள் தான். பாரம்பரியமாக நீர் வடியும் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் மழை நீர் வடிய வாய்ப்பே இல்லை. சென்னையில் அரை மணி நேரம் மழை பெய்தால் கூட முக்கியச் சாலைகள் வெள்ளக்காடாக மாறுவதற்கு காரணம் இந்த ஆக்கிரமிப்புகள் தான். இவற்றை அகற்றும்படி சென்னை உயர்நீதிமன்றம் பலமுறை ஆணையிட்ட பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்காதது உயர்நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.

    சென்னை மாநகராட்சியில் நடைபெறும் ஊழல்கள் தான் இந்த அனைத்து சீரழிவுக்கும் காரணம் ஆகும். இந்த ஊழல்கள் பேழிவை ஏற்படுத்தி விடும். எனவே, தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல் விழித்துக் கொள்ள வேண்டும்.

    வெள்ளநீர் வடிகால்களை சீரமைத்தல், மழைநீர் வடியும் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். சென்னையில் எவ்வளவு மழை பெய்தாலும் வெள்ளம் ஏற்படாது என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு டாக்டர் ராம தாஸ் கூறியுள்ளார். #ramadoss #tngovt

    Next Story
    ×