search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருகம்பாக்கத்தில் தாக்குதல் நடந்த பிரியாணி கடைக்கு சென்று மு.க.ஸ்டாலின் ஆறுதல்
    X

    விருகம்பாக்கத்தில் தாக்குதல் நடந்த பிரியாணி கடைக்கு சென்று மு.க.ஸ்டாலின் ஆறுதல்

    சென்னை விருகம்பாக்கத்தில் தி.மு.க.வினரால் தாக்குதல் நடத்தப்பட்ட பிரியாணி கடைக்கு மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். #DMK #MKstalin
    சென்னை:

    சென்னை விருகம்பாக்கம் ஆர்.ஆர்.அன்பு பிரியாணி கடையில் ஓசியில் பிரியாணி கேட்டு தி.மு.க. பிரமுகர் யுவராஜ் பாக்சிங் குத்து விட்டு தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    கடந்த 28-ந்தேதி இரவு தி.மு.க. பிரமுகர்கள் யுவராஜ், திவாகர் உள்ளிட்ட 11 பேர் கும்பலாக பிரியாணி கடைக்கு சென்று பிரியாணி கேட்டனர். அப்போது கடை உரிமையாளரான பிரகாஷ், பிரியாணி தீர்ந்து விட்டதாக கூறியுள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த யுவராஜ், பிரியாணி இல்லாம ஏன்டா கடையை திறந்து வைத்திருக்கிறீர்கள்? என்று கேட்டு மோதலில் ஈடுபட்டார். கடையில் உள்ள பொருட்களை தூக்கி வீசிய அவர் உரிமையாளரான பிரகாசின் முகத்தில் சரமாரியாக குத்து விட்டார்.

    பாக்சரான இவர் மேடைகளில் குத்துச் சண்டை போட்டியில் பங்கேற்பது போல குதித்து குதித்து குத்து விட்டார். அவருடன் வந்தவர்களும் சரமாரியாக தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டனர்.

    இதில் பிரகாஷ், கடை ஊழியர்களான கருணாநிதி, நாகராஜ் ஆகிய 3 பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். பின்னர் இதுபற்றி விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. வடபழனி உதவி கமி‌ஷனர் சங்கர், இன்ஸ்பெக்டர் ராஜூ பிரின்ஸ் ஆரோன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


    நேற்று காலையில் யுவராஜின் பாக்சிங் தாக்குதல் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து யுவராஜும் அவரது நண்பர் திவாகரும் தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் கட்சியினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்தார்.

    இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் இன்று காலை விருகம்பாக்கத்தில் உள்ள பிரியாணி கடைக்கு நேரில் சென்றார். கடை உரிமையாளரை சந்தித்து நடந்த விவரங்கள் பற்றி அவர் கேட்டறிந்தார். தாக்குதலில் காயம் அடைந்த ஊழியர்கள் யார்-யார் என்பது பற்றியும் விசாரித்தார். அவர்களையும் அழைத்து நலம் விசாரித்தார். மு.க.ஸ்டாலினுடன் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

    இந்த நிலையில் பிரியாணி கடை தாக்குதல் தொடர்பாக சுரேஷ் மற்றும் ராம்கிஷோர், கிஷோர், கார்த்திக், மற்றொரு கார்த்திக் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சுரேஷ் கல்லூரி மாணவர் ஆவார். மாங்காட்டில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.சி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    யுவராஜ், திவாகர் உள்ளிட்ட மேலும் சிலர் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். அனைவரையும் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க உயர் போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    பிரியாணி கடைக்குள் தாக்குதல் நடத்தி விட்டு யுவராஜும், அவரது கூட்டாளிகளும் வெளியே வந்தபோது கடையின் சீருடையில் இருந்த ஊழியரான அருள் ஜஸ்டினையும் தாக்கி உள்ளனர்.

    இதுதொடர்பாக தனியாக புகார் செய்யப்பட்டுள்ளது. இதில் யுவராஜ், திவாகர், அவரது தம்பி ருத்ரகுமார் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் ருத்ரகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். இது யுவராஜ் மீது போடப்பட்டுள்ள 2-வது வழக்காகும்.

    பிரியாணி கடையில் தாக்குதல் நடத்திய தி.மு.க. வினர் மீது நடவடிக்கை எடுத்ததற்காக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக சங்கத்தின் பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பிரியாணி கடையில் தி.மு.க.வினர் அராஜகச் செயலில் ஈடுபட்டுள்ளனர் என்பதை ஊடகங்கள் வாயிலாக அறிந்து, உடனடியாக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்கி இருப்பதை வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பாராட்டி வரவேற்கிறது. இதற்காக பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா, மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #DMK #MKStalin
    Next Story
    ×