search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மருத்துவ மாணவிகள் பாலியல் பலாத்காரமா?- பெண் அதிகாரியை விசாரிக்க 4 பேர் குழு நியமனம்
    X

    மருத்துவ மாணவிகள் பாலியல் பலாத்காரமா?- பெண் அதிகாரியை விசாரிக்க 4 பேர் குழு நியமனம்

    கஸ்தூரிபா காந்தி மருத்துவமனையில் மருத்துவ மேற்படிப்பு பயிற்சி கொண்டு வந்த மாணவிகளுக்கு பாலியல் அழைப்பு விடுத்ததாக எழுந்த புகாரில் பெண் அதிகாரியை விசாரிக்க 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. #KasturbaGandhiHospital
    சென்னை:

    அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, அதே கல்லூரியில் படித்த மாணவிகளை பாலியலுக்கு அழைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மதுரை காமராஜர் பல்கலைகழக பேராசிரியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்குமாறு நிர்மலாதேவி செல்போனில் பேசிய ஆடியோ வெளியானதை தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

    இது தொடர்பாக நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். அவரை பாலியலுக்கு தூண்டிய பேராசிரியர்களும் சிக்கனர். நிர்மலாதேவியின் பின்னணியில் இருப்பவர்கள் யார்-யார்? என்பது பற்றிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் தலைமையிலான குழுவினரும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    இந்த பரபரப்பு அடங்கும் முன்னரே சென்னையிலும் அதே போன்று பெண் அதிகாரி ஒருவர் மீது செக்ஸ் புகார் கூறப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

    சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கஸ்தூரிபா காந்தி மகப்பேறு மருத்துவமனையில் 34 மாணவிகள் பட்டமேற்படிப்பு படித்து வருகின்றனர். பயிற்சி டாக்டர்களான இவர்களில் சிலரை அதே ஆஸ்பத்திரியில் அதிகாரியாக உள்ள பெண் மருத்துவர் பாலியலுக்கு அழைத்ததாக புகார் எழுந்துள்ளது.

    இது தொடர்பாக குறிப்பிட்ட மாணவிகள் சென்னை தலைமை செயலகத்தில் சுகாதார துறை செயலாளர் ராதா கிருஷ்ணனை சந்தித்து புகார் அளித்ததாகவும் தகவல் வெளியானது.

    அதே நேரத்தில் இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவ கல்வி இயக்ககத்துக்கு மொட்டை கடிதம் ஒன்றும் வந்துள்ளது. இது தொடர்பாக மருத்துவ கல்வி இயக்குனரகம் விசாரணை நடத்தியது. பட்டமேற்படிப்பு படிக்கும் மாணவிகளை தனித்தனியாக அழைத்து விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது அவர்கள் அளித்த தகவல் வாக்கு மூலமாகவும் பதிவு செய்யப்பட்டது. இதன் பின்னர் இதில் உண்மை இல்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

    இருப்பினும் மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம் அதோடு முற்றுப்பெறாமல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சரின் தனிப்பிரிலும் புகார் அளிக்கப்பட்டது. இது பற்றி விசாரிக்க சென்னை மருத்துவ கல்லூரி முதல்வருக்கு அறிவுறுத்தப்பட்டது.

    இதனை தொடர்ந்து கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெயந்தி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் விசாரணை நடத்தி விரைவில் அறிக்கை அளிக்க உள்ளனர்.


    கஸ்தூரிபா காந்தி மருத்துவமனையில் துறை தலைவராக பணியாற்றும் டாக்டர் ஒருவருக்கும், அவருக்கு கீழ் பணியாற்றும் இன்னொரு டாக்டருக்கும் பாலியல் புகாரில் தொடர்பு இருப்பதும் அம்பலமாகி உள்ளது. இவர்களது தூண்டுதலின் பேரிலேயே மருத்துவ மாணவிகளை பெண் அதிகாரி பாலியலுக்கு அழைத்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இது தொடர்பான வீடியோ ஆதாரம் ஒன்றும் சிக்கி இருப்பதாக தெரிகிறது. பாலியல் புகாருடன் இந்த வீடியோ ஆதாரமும் இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையிலேயே விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் மாணவிகள் பாலியல் விவகாரம் தொடர்பாக மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் எட்வின் ஜோ இன்று அளித்த பேட்டி வருமாறு:-

    இந்த வி‌ஷயம் தொடர்பாக ஏற்கனவே 2 முறை விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இப்போது 3-வது முறையாக சென்னை மருத்துவ கல்லூரி நிர்வாகம் தனியாக விசாரணை நடத்தி வருகிறது.

    மாணவிகள் விவகாரத்தில் மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. நாங்கள் நடத்திய முதல்கட்ட விசாரணையில் மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

    இது தொடர்பாக வீடியோ ஆதாரம் இருப்பதாக கூறப்படுவதிலும் உண்மை இல்லை. இருப்பினும் சென்னை மருத்துவ கல்லூரி சார்பில் தனியாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்த விசாரணை குழுவில் 4 பேராசிரியர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் சென்னை மருத்துவ கல்லூரியை சேர்ந்தவர்கள் இல்லை. மற்ற கல்லூரி பேராசிரியர்களே விசாரணை நடத்த உள்ளனர். இந்த விசாரணை முடிவில் உரிய ஆதாரங்கள் கிடைத்தால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். போலீசில் புகார் அளித்து காவல்துறை மூலமும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு எட்வின் ஜோ கூறியுள்ளார். #KasturbaGandhiHospital
    Next Story
    ×