search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குட்கா முறைகேட்டில் ஆதாரங்களை அழிக்க அ.தி.மு.க. அரசு முயற்சி - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
    X

    குட்கா முறைகேட்டில் ஆதாரங்களை அழிக்க அ.தி.மு.க. அரசு முயற்சி - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

    குட்கா போதைப் பொருள் முறைகேட்டில் ஆதாரங்களை அழிக்க அ.தி.மு.க. அரசு முயற்சி செய்வதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். #gutkhascam #MKStalin
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கோவை கண்ணம்பாளையத்தில் குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையைக் கண்டுபிடித்த விவகாரத்தில், ஒளிவுமறைவற்ற வெளிப்படையான சோதனை நடத்தவேண்டும் என்று வலியுறுத்தி அறவழிப்போராட்டம் நடத்திய தி.மு.க.வினர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பொய் வழக்குப்பதிவு செய்து, கோவை மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக்கை கைது செய்ய தேடுதல்வேட்டை நடத்திக் கொண்டிருப்பதற்கும் அ.தி.மு.க. அரசுக்கு தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    குட்கா ஊழலில் சிக்கிக் கொண்டுள்ள அ.தி.மு.க. அமைச்சரை காப்பாற்றுவதோடு, தமிழக டி.ஜி.பி. தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளவும், கண்ணம்பாளையம் ஊராட்சியின் முன்னாள் தலைவர் தளபதி முருகேசன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் செல்வராஜ், இளைஞரணியை சேர்ந்த சுரேஷ், சண்முகம் உள்ளிட்ட 7 பேரை நள்ளிரவில் கைதுசெய்து சிறையில் அடைத்திருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்ளும் அதேவேளையில், குட்கா வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பின் ஈரம் காய்வதற்குள், அந்த சி.பி.ஐ. விசாரணையை சீர்குலைத்து திசைதிருப்பும் விதத்தில் இதுபோன்றதொரு அராஜக நடவடிக்கையை எடுக்க, கோவை காவல்துறையினருக்கு டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டிருப்பது நீதிமன்ற அவமதிப்பு மட்டுமல்ல, நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நடைபெற வேண்டிய சி.பி.ஐ. விசாரணைக்கான ஆதாரங்களையும், தடயங்களையும் அழிக்கும் முயற்சி.

    ஏற்கனவே, குட்கா விவகாரத்தில் வருமான வரித்துறை, தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடம் கொடுத்த கோப்புகள் காணவில்லை. ஊழலில் சம்பந்தப்பட்ட இன்னொரு டி.ஜி.பி. ஓய்வுபெற அனுமதிக்கப்பட்டார். இப்போது குட்கா வழக்கிற்கு மிகவும் முக்கியமான ஆதாரமாகத் திகழும் இதுபோன்ற உற்பத்தி ஆலைகளில் நடத்தப்படும் சோதனைகளும், திட்டமிட்டு உண்மைகளை மறைக்க நடைபெறுகின்றன. தட்டிக்கேட்கும் பிரதான எதிர்கட்சி மீதே பொய் வழக்குப்போட்டு கைது செய்யும் அத்துமீறிய நடவடிக்கையில் அ.தி.மு.க. அரசும், அதன் டி.ஜி.பி.யும் ஈடுபடுவதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளவும் முடியாது, பொறுத்துக் கொள்ளவும் முடியாது.

    இதுபோன்று வழக்கு விசாரணையை முடக்க சூழ்ச்சி செய்வார்கள் என்பதால்தான் தீர்ப்பு வெளிவந்தவுடன் டி.ஜி.பி.யும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தேன். ஆகவே, அறவழியில் போராட்டம் நடத்திய தி.மு.க.வினர் மீது போடப்பட்ட வழக்குகளை உடனடியாக ரத்து செய்யவேண்டும் என்பதோடு, கைது செய்யப்பட்ட தி.மு.க.வினர் அனைவரையும் விடுதலை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதுமட்டுமின்றி, தமிழக டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகிய இருவரையும் உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  #gutkhascam #MKStalin
    Next Story
    ×