search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுச்சேரியில் அரவிந்தர், அன்னை மீரா சமாதியில் பிரதமர் மோடி அஞ்சலி
    X

    புதுச்சேரியில் அரவிந்தர், அன்னை மீரா சமாதியில் பிரதமர் மோடி அஞ்சலி

    ஆரோவில் சர்வதேச நகரத்தின் பொன்விழா ஆண்டு விழாவில் கலந்துகொள்ள புதுச்சேரி வந்துள்ள பிரதமர் மோடி அரவிந்தர் ஆசிரமத்தில் உள்ள அரவிந்தர், அன்னை மீரா சமாதியில் அஞ்சலி செலுத்தினார். #PMModi
    புதுச்சேரி:

    புதுச்சேரி அருகே விழுப்புரம் மாவட்ட எல்லைப்பகுதியில் ஆரோவில் சர்வதேச நகரம் அமைந்துள்ளது. வெளிநாட்டினர் அதிகம் வசித்து வரும் ஆரோவில் நகரம் உதயமாகி 50 ஆண்டுகள் ஆகிறது. இங்கு 164 நாடுகளை சேர்ந்த 2,500-க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆரோவில் நிர்வாகம் சார்பில் இந்த நகரத்தின் 50-வது ஆண்டு பொன்விழா இன்று கொண்டாடப்படுகிறது. 

    இந்த விழாவில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி இன்று காலை 9.30 மணியளவில் சென்னையில் இருந்து புறப்பட்டு விமானம் மூலம் காலை 10.30 மணியளவில் புதுவை வந்தடைந்தார். அங்கிருந்து, கார் மூலம் அரவிந்தர் ஆசிரமத்துக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி அங்கு அரவிந்தர், அன்னை மீரா ஆகியோரின் சமாதிகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். 



    இதனை அடுத்து, சிறிது நேரம் அங்கு அவர் தியானத்தில் ஈடுபடும் மோடி, பின்னர் ஆசிரமத்தில் அன்னை பயன்படுத்திய அறைகளை பார்வையிடுகிறார். அங்கிருந்து ஆசிரம பள்ளிக்கு செல்லும் பிரதமர் மோடி அங்கு மாணவர்களுடன் சிறிது நேரம் உரையாடுகிறார்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஆரோவில் நகருக்கு செல்கிறார். அங்கு அரவிந்தர் சிலைக்கு பிரதமர் மோடி மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அதனைத் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்ட மாத்ரி மந்திரை அவர் திறந்து வைக்கிறார்.

    அங்கிருந்து பாரத் நிவாசில் உள்ள கருத்தரங்கு கூடத்திற்கு மோடி செல்கிறார். அங்கு நடைபெறும் பொன்விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகிறார். இந்த விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி, முதல்வர் நாராயணசாமி மற்றும் தமிழக அமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர்.

    பிரதமரின் வருகையையொட்டி புதுவை முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. 1200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடன் 4 கம்பெனி துணை ராணுவ படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #PMModi #TamilNews
    Next Story
    ×