என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டை அருகே நகைக்காக பெண்ணை எரித்துக்கொன்ற கொள்ளையர்கள்
    X

    புதுக்கோட்டை அருகே நகைக்காக பெண்ணை எரித்துக்கொன்ற கொள்ளையர்கள்

    புதுக்கோட்டை அருகே நகைக்காக பெண் எரித்துகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே குமுளூர் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து, விவசாயி. இவரது மனைவி கனகாம்பாள் (வயது 48). மாரிமுத்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்றிருந்தார். இதனால் வீட்டில் கனகாம்பாள் (வயது 48) மட்டும் தனியாக இருந்தார். இன்று அதிகாலை மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்தனர்.

    பின்னர் தூங்கி கொண்டிருந்த கனகாம்பாளை கழுத்தை அறுத்துள்ளனர். இதனால் அவர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். மேலும் ஆத்திரம் தீராத மர்மநபர்கள் அவர் மீது மண்எண்ணையை ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி சென்று விட்டனர். இதில் கனகாம்பாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    காலையில் நீண்ட நேரமாகியும் கனகாம்பாள் வெளியே வராததால் அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது அவர் உடல் கருகிய நிலையில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    இது குறித்து புதுக்கோட்டை மாவட்டம் கரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் மாவட்ட எஸ்.பி. செல்வராஜ், டி.எஸ்.பி. தெட்சிணாமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் கனகாம்பாள் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் நகை, பணத்திற்காக கனகாம்பாள் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #TamilNews
    Next Story
    ×