என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூரில் குடிபோதையில் பெண்ணிடம் சில்மி‌ஷம் செய்த போலீஸ்காரர் சஸ்பெண்டு
    X

    கடலூரில் குடிபோதையில் பெண்ணிடம் சில்மி‌ஷம் செய்த போலீஸ்காரர் சஸ்பெண்டு

    கடலூரில் குடிபோதையில் வீடு புகுந்து பெண்ணிடம் சில்மி‌ஷம் செய்த போலீஸ்காரர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
    கடலூர்:

    கடலூர் மஞ்சகுப்பத்தை சேர்ந்தவர் விஜயவர்மன். இவர் கிள்ளை காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடலூர் ஆல்பேட்டை சோதனைசாவடியில் நேற்று பணியில் இருந்தார்.

    இந்த நிலையில் குடிபோதையில் இருந்த விஜயவர்மன் அருகே உள்ள வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த பெண்ணிடம் சில்மி‌ஷம் செய்து தவறாக நடக்க முயன்றார். அப்போது அந்த பெண் கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் திரண்டுவந்தனர். அவர்கள் விஜயவர்மனை பிடித்து சோதனை சாவடியில் பணியில் இருந்த மற்ற போலீசாரிடம் ஒப்படைக்க சென்றனர். அப்போது பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சோதனை சாவடி அருகே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து விஜயவர்மனை புதுநகர் போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    இந்தநிலையில் குடிபோதையில் பெண்ணிடம் சில்மி‌ஷம் செய்து தவறாக நடக்க முயன்ற போலீஸ்காரர் விஜயவர்மனை சஸ்பெண்டுசெய்து போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் அதிரடி உத்தரவிட்டார். மேலும் சம்பவம் குறித்து தகவல் அறிந்து காலதாமதமாக சென்ற துணை போலீஸ் சூப்பிரண்டு நரசிம்மன், புதுநகர் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோரின் வாகனங்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டார்.

    இந்த சம்பவம் தொடர்பாக காலதாமதமாக தகவல் தெரிவித்த தனிப்பிரிவு தலைமை ஏட்டு சுப்பிரமணியன் ஆயுதபடைக்கு மாற்றப்பட்டார்.
    Next Story
    ×