என் மலர்
செய்திகள்

சிவகங்கை மாவட்டத்தில் இளம்பெண்கள்- மாணவர் மாயம்
சிவகங்கை:
சிவகங்கை தாலுகா மதகுபட்டி அருகே உள்ள தட்டம்பட்டியைச் சேர்ந்தவர் காந்திமதி. இவரது மகள் பார்வதி (வயது 17).
சம்பவத்தன்று பார்வதி மதகுபட்டிக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் பார்வதியை காணவில்லை.
இது குறித்த புகாரின் பேரில் மதகுபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
தேவகோட்டையைச் சேர்ந்தவர் சித்ரா. இவரது மகள் கவுசிகா (17). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் -2 படித்து வந்தார்.
நேற்று பள்ளிக்கு செல்வதாக கூறிச் சென்ற கவுசிகா பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து தேவகோட்டை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகிறார்.
மானாமதுரை தாலுகா குக்குடியைச் சேர்ந்தவர் மீனாள். இவரது மகன் விக்னேஷ் (16). இவர் சிவகங்கையில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று பள்ளிக்குச் சென்ற விக்னேஷ் மாயமானார். பல இடங்களில் தேடியும் பலன் இல்லை.
இது குறித்து மானாமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் முகம்மது பரகத்துல்லா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.






