search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியலூர் அருகே விபத்து: தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் 2 பேர் பலி
    X

    அரியலூர் அருகே விபத்து: தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் 2 பேர் பலி

    அரியலூர் அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர்கள் 2 பேர் இறந்தனர்.
    ஜெயங்கொண்டம்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் கிளை நிறுவனம் அரியலுர் மாவட்டம் மின் நகரில் உள்ளது.

    இதில் திண்டுக்கல் மாவட்டம் ஓட்டன்சத்திரம் மண்ட குளத்துப்பட்டியை சேர்ந்த சரவணன் (வயது 21), அதே பகுதியை சேர்ந்த பழனிசாமி (வயது 36) ஆகியோர் தங்கியிருந்து பணம் வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை ஓரே மோட்டார் சைக்கிளில் 2 பேரும் அரியலூரில் இருந்து மல்லூர் சாலை வழியாக சென்று கொண்டிருந்தனர். அரியலூர் அடுத்து உள்ள மேலக்கருப்பு என்ற இடத்தின் அருகே சென்று திருச்சி- ஜெயங்கொண்டம் மெயின் ரோட்டிற்கு சென்றனர்.

    அப்போது கீழப்பழூரில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி சென்ற ஜல்லிக்கற்கள் ஏற்றிச்சென்ற லாரி எதிர்பாரதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த 2 பேரும் தூக்கி விசப்பட்டனர்.

    இந்த விபத்தில் சரவணன் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தகவல் அறிந்ததும் கீழப்பழூர் போலீசார் விரைந்து சென்று பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய பழனிச்சாமியை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பழனிச்சாமி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கீழப்பழூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    Next Story
    ×