என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டை சிறையில் இருந்து தப்பிய கைதியை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை
    X

    புதுக்கோட்டை சிறையில் இருந்து தப்பிய கைதியை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை

    புதுக்கோட்டைசிறையில் இருந்து கைதி தப்பி ஓடியதால் அவரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள அழியாநிலை பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் ராஜமோகன். இவரது மகன் சுரேஷ்குமார் (வயது 25). இவர் கடந்த 2.10.16-ந்தேதி, அதே பகுதியை சேர்ந்த சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் திருமயம் அனைத்து மகளிர் போலீசாரால் கடந்த 6.10.16-ந்தேதி கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில் நேற்று மதியம் உணவுவிற்காக சிறை காவலர்கள் சுரேஷ்குமார் உள்ளிட்ட அனைத்து கைதிகளையும் ஜெயிலில் உள்ள கைதிகள் அறையில் இருந்து வெளியே கொண்டு வந்தனர்.

    அப்போது வரிசையின் முதல் ஆளாக உணவு வாங்கி சுரேஷ்குமார் சாப்பிட்டார். பின்னர் யாருக்கும் தெரியாமல் தான் அணிந்திருந்த கைலியை கொண்டு, கயிறுபோல் திரித்து கொண்டு, அதனை சுமார் 20 அடி உயரம் உள்ள சிறையின் சுவற்றின் மேல் உள்ள கல்லில் மாட்டினார். பின்னர் அதன் மூலம் சுவற்றில் ஏறி தப்பி ஓடினார். உணவுவேளை முடிந்த பிறகு மீண்டும் அனைத்து கைதிகளையும் அறையில் அடைக்க, சிறை காவலர்கள், கைதிகளின் பதிவேட்டை சரிபார்த்தனர். அப்போது சுரேஷ்குமார் காணவில்லை என்பது தெரியவந்தது.

    இது குறித்து சிறை துறை அதிகாரிகள் புதுக்கோட்டை டவுன் போலீசில் புகார் செய்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் சுரேஷ்குமார் எப்படி தப்பித்தார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய கைதி சுரேஷ்குமாரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×