என் மலர்
செய்திகள்

குடிநீர், வறட்சி நிவாரணம்: 7 மாவட்ட கலெக்டர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
சென்னை:
சென்னை கோட்டையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலம், கோயம்புத்தூர், விழுப்புரம், திருச்சி ராப்பள்ளி, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வறட்சி நிவாரணப் பணிகள், குடிநீர் திட்டப் பணிகள், குடிமராமத்து திட்டப் பணிகள், ஏரிகள், வாய்க்கால்கள், குளங்கள் ஆகியவற்றை தூர் வாரும் பணிகள் மற்றும் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, இடுபொருள் மானியம் வழங்காமல் விடுபட்டு போன விவசாயிகளுக்கு, அதனை உடனடியாக வழங்கவும், பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்ந்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை துரிதமாக வழங்கவும் முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.
மேலும், தமிழக அரசின் உத்தரவின்படி, கால் நடைகளுக்கு தீவனம் வழங்குவதற்கு நடவடிக்கைகளை துரிதப்படுத்த உத்தர விட்டார்.
பொதுமக்களுக்கு எவ்வித சிரமமின்றி குடிநீர் வழங்க அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் அரசுத்துறை அதிகாரிகளுக்கும் முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.
குடிமராமத்து பணிகளை துரிதப்படுத்தி, ஏரி குளங்களை வரும் மழைக்காலத்திற்குள் அதன் கொள்ளளவை அதிகப் படுத்தி நீரை தேக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
தமிழக அரசின் உத்தரவின்படி, ஏரி, குளம், வாய்க்கால்களை உடனடியாக தூர் வாரி, விவசாய பெருமக்களுக்கு வண்டல் மண் வழங்கும் வழிமுறைகளை எளிமைப்படுத்தி, தங்குதடையின்றி வண்டல் மண் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.
இந்த கலந்தாய்வில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், ஆர்.பி. உதயகுமார், உடுமலை ராதாகிருஷ்ணன், கருப்பண்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.