search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு 20 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு: மெரினாவில் குளிக்க தடை
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு 20 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு: மெரினாவில் குளிக்க தடை

    • மெரினா கடற்கரையில் 31-ந்தேதி அன்று இரவு லட்சக்கணக்கான மக்கள் திரண்டு ஆங்கில புத்தாண்டை வரவேற்பார்கள்.
    • மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட உள்ளது.

    சென்னை:

    புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் 5 நாட்களே இருக்கும் நிலையில் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாகி உள்ளன.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முழு வீச்சில் தயாராகி வருகின்றன. இதையொட்டி புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

    இதன்படி புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை மாநகர போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

    சென்னை மாநகரில் வருகிற 31-ந் தேதி அன்று இரவு 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    சென்னை மெரினா கடற்கரை, பெசன்ட்நகர் கடற்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகள் முழுவதிலும் போலீசார் தீவிர கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளனர்.

    புத்தாண்டு கொண்டாட்ட தினமான வருகிற 31-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று கடற்கரை பகுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.

    இதன்படி கடற்கரை பகுதிகளில் ரோந்து பணியை தீவிரப்படுத்தவும், தடுப்பு வேலிகளை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மெரினா கடற்கரையில் 31-ந்தேதி அன்று இரவு லட்சக்கணக்கான மக்கள் திரண்டு ஆங்கில புத்தாண்டை வரவேற்பார்கள். குடும்பம் குடும்பமாக பொதுமக்கள் மெரினாவில் கூடுவார்கள் என்பதால் கூட்ட நெரிசலை பயன்படுத்தி சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரை பிடிக்க சிறப்பு படைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

    பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தற்காலிக புறக்காவல் நிலையங்களும் அமைக்கப்பட உள்ளன.

    இந்த புறக்காவல் நிலையங்களில் பெண் போலீசார் அதிக எண்ணிக்கையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    சிறுவர், சிறுமிகள் கூட்டத்தில் காணாமல் போனால் அவர்களை கண்டுபிடிப்பதற்காக கைகளில் 'அடையாள வளையம்' கட்டிவிடப்படுகிறது. இதில் பெற்றோர்களின் செல்போன் எண் மற்றும் போலீஸ் உதவியை நாடும் செல்போன் எண்கள் ஆகியவை இடம்பெற்று இருக்கும்.

    இதன் மூலம் மாயமாகும் சிறுமிகளை எளிதாக கண்டுபிடிக்க முடியும். இந்த நடைமுறையை சென்னை மாநகர போலீசார் கடந்த சில ஆண்டுகளாகவே பின்பற்றி வருகிறார்கள். இதனால் மெரினாவில் காணாமல் போகும் குழந்தைகள் உடனுக்குடன் கண்டுபிடிக்கப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விடுவார்கள்.

    இப்படி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த உள்ள போலீசார் சென்னை மாநகர் முழுவதும் 400 இடங்களில் வாகன சோதனையிலும் ஈடுபடுகிறார்கள்.

    கிழக்கு கடற்கரை சாலை, மெரினா காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் போலீசாரை நியமித்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும் போலீசார் மோட்டார் சைக்கிள் பந்தயத்தை தடுக்கவும் நடவடிக்கைகளை எடுத்து உள்ளனர்.

    இதற்காக 20 தனிப்படைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் மணலிலும், கடலிலும் செல்லும் வகையிலான வாகனங்களில் ரோந்து சென்று கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    மதுபோதையில் வாகனங்களை ஓட்டிச்சென்று விபத்துக்களை ஏற்படுத்துபவர்களை பிடிக்க சென்னை மாநகர் முழுவதும் வாகன சோதனையை தீவிரப்படுத்தி போலீசார் கண்காணிக்க உள்ளனர்.

    மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட உள்ளது. மெரினா உள்ளிட்ட கடல் பகுதிகளில் குளிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை கண்காணிக்கும் வகையில் டிரோன் பாதுகாப்பிலும் போலீசார் ஈடுபட உள்ளனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட் மற்றும் பெண்களிடம் சில்மிஷம் போன்ற செயல்களில் ஈடுபடுவோரையும் டிரோன் மூலமாக போலீசார் கண்காணிக்க உள்ளனர்.

    கிழக்கு கடற்கரை சாலையில் விபத்துக்களை தடுப்பதற்கு அடையாறு பகுதியில் இருந்து மாமல்லபுரம் வரை சுமார் 50 இடங்களில் தடுப்புகளும் ஏற்படுத்தப்பட உள்ளன.

    இதற்கு முன்பு புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது விபத்துகள் நடைபெற்ற இடங்கள் கண்டறியப்பட்டு 500-க்கும் மேற்பட்ட பகுதிகளில் தடுப்புகள் அமைத்து விபத்துகளை கட்டுப்படுத்தவும் போலீசார் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர்.

    Next Story
    ×