என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாளையில் ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.1½ கோடி மோசடி- 2 பேர் கைது
- பெட்ரோல் பங்க் வைப்பதற்காக இடம் தேவைப்படுவதாக சில புரோக்கர்களிடம் தெரிவித்துள்ளார்.
- பின்னர் அந்த இடத்தை முடித்துக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.
நெல்லை:
பாளை பெருமாள் புரத்தை சேர்ந்தவர் பெர்க்மான்ஸ் (வயது 65). இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர்.
இவர் பெட்ரோல் பங்க் வைப்பதற்காக இடம் தேவைப்படுவதாக சில புரோக்கர்களிடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவருக்கு மேலப்பாளையத்தை சேர்ந்த பரித் புகாரி (52), தாழையூத்தை சேர்ந்த துரை (48) ஆகியோரின் அறிமுகம் கிடைத்துள்ளது.
இவர்கள் 2 பேரும் வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலை மற்றும் ஒரு கல்லூரி உள்ளிட்ட பகுதியை ஒட்டி அமைந்துள்ள சில இடங்களை தங்களுக்கு சொந்தமான இடம் என்று காட்டி முன் தவணை தொகையாக ரூ.1½ கோடி பெற்றுள்ளனர்.
பின்னர் அந்த இடத்தை முடித்துக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் மீது சந்தேகம் அடைந்த பெர்க்மான்ஸ் நெல்லை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் திருப்பதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அவர்கள் காட்டிய இடம் அவர்கள் 2 பேருக்கும் சொந்தமானது இல்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து பண மோசடியில் ஈடுபட்ட புகாரி மற்றும் துரை ஆகியோரை நேற்றிரவு போலீசார் கைது செய்தனர்.