search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தகுதிநீக்க வழக்கை வாபஸ் பெறும் விவகாரத்தில் குழம்பும் தங்க தமிழ்ச்செல்வன்
    X

    தகுதிநீக்க வழக்கை வாபஸ் பெறும் விவகாரத்தில் குழம்பும் தங்க தமிழ்ச்செல்வன்

    தகுதி நீக்கத்தை எதிர்த்த வழக்கை வாபஸ் பெற எந்த நீதிபதியை அணுகுவது என்பது புரியாமல் குழப்பத்தில் இருப்பதாக தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். #18MLAs #ThangaTamilSelvan
    சென்னை:

    தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களாக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் உள்பட 18 பேர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று போர்க்கொடி தூக்கி கவர்னரிடம் மனு கொடுத்ததால் 18 பேரின் எம்.எல்.ஏ. பதவியை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார்.

    இதை எதிர்த்து 18 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதில் கடந்த மாதம் தீர்ப்பு கூறப்பட்டது.

    தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பு கூறினார். மற்றொரு நீதிபதியான சுந்தர் செல்லாது என்று கூறினார். இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு கூறியதால் 3-வது நீதிபதி விசாரணைக்கு வழக்கு சென்றுள்ளது.

    இதுபற்றி தங்க தமிழ்ச்செல்வன் கருத்து தெரிவிக்கையில் வழக்கு முடிவுக்கு வராமல் இழுத்துக் கொண்டே செல்வதால் வழக்கை வாபஸ் பெறப்போவதாக அறிவித்திருந்தார். ஆனால் இன்னும் அவரால் வழக்கை வாபஸ் பெற முடியவில்லை.

    இதுபற்றி தங்க தமிழ்ச்செல்வனிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

    எங்களை தகுதி நீக்கம் செய்த வழக்கில் நியமிக்கப்பட்டுள்ள 3-வது நீதிபதி தினமும் வழக்கை விசாரிக்க போவதாக கூறி இருப்பது வரவேற்கத்தக்கது.

    விசாரணை முடிந்ததும் தீர்ப்பையும் விரைந்து சொன்னால் தொகுதி மக்களுக்கு நல்லது.

    தகுதி நீக்க வழக்கை வாபஸ் பெறப் போவதாக ஏற்கனவே நான் கூறி இருந்தேன். ஆனால் எந்த நீதிபதியிடம் இதை கொடுப்பது என்பதில் சிக்கல் நிலவுகிறது.

    இரு நீதிபதிகள் இந்த வழக்கில் தீர்ப்பு கூறி உள்ளதால் அவர்கள் இருவர் முன்னிலையில் மனு கொடுக்க வேண்டுமா? அல்லது 3-வது நீதிபதியிடம் வாபஸ் மனுவை கொடுக்க வேண்டுமா? என்ற சட்ட சிக்கல் ஏற்படுகிறது.

    மனு கொடுத்தாலும் அதை நீதிபதிகள் ஏற்பார்களா? என்பது சந்தேகமாக உள்ளது. எனவே இதுபற்றி மூத்த வக்கீல்களுடன் ஆலோசித்த பிறகு தான் முடிவு செய்ய முடியும்.

    தலைமை நீதிபதியின் தீர்ப்பை விமர்சனம் செய்ததற்காக எனக்கு அட்வகேட் ஜெனரல் நோட்டீசு அனுப்பி இருந்தார்.

    அந்த கடிதத்துக்கு பதில் அளிக்க நாளை மறுநாள் நான், ஐகோர்ட்டுக்கு நேரில் சென்று அவரிடம் விளக்கம் அளிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #18MLAs #ThangaTamilSelvan
    Next Story
    ×