search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    1,6,9,11-வது வகுப்புகளுக்கு புதிய பாட புத்தகம்- முதலமைச்சர் வெளியிட்டார்
    X

    1,6,9,11-வது வகுப்புகளுக்கு புதிய பாட புத்தகம்- முதலமைச்சர் வெளியிட்டார்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்களை வெளியிட்டார். #NewTextBooks #NewCurriculum #TNCM #EdappadiPalanisamy
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் புதிய பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்டு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் அச்சிடப்பட்டுள்ள 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான அனைத்து பாடங்கள் மற்றும் மொழிப்பாடங்களில் தயாரிக்கப்பட்டுள்ள 147 தலைப்புகளில் அமைந்துள்ள பாடநூல்களை வெளியிட்டார்.

    தேசியக் கலைத்திட்டம் 2005-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட நிலையிலும், மாநிலத்தில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டம் 7 ஆண்டுகளுக்கு முன்பும், மேல்நிலை வகுப்புகளுக்கான பாடத்திட்டம் 12 ஆண்டுகளுக்கு முன்பும் மாற்றம் செய்யப்பட்ட நிலையிலும், தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு, புதிய பாடத்திட்டம் மற்றும் புதிய பாடநூல்களை உருவாக்கிட அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அதன் அடிப்படையில், மாணவர்களின் முழுமையான ஆளுமை திறனை வளர்த்திடவும், செயல்வழி கற்றல் முறை மற்றும் படைப்பாற்றல் திறனை ஊக்குவிக்கும் வகையிலும், சிந்தனைத் திறனை வெளிக்கொணரும் வகையிலான மதிப்பீட்டு முறையை உள்ளடக்கியும், உலகளாவிய அறிவியல் தொழில்நுட்ப மாற்றங்களுக்கேற்ப, கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளுக்கான சவால்களை மாணவர்கள் உறுதியோடு எதிர்கொள்ளும் வகையிலும், மிகச்சிறந்த கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்களை கொண்டு புதிய பாடத்திட்டமும், பாட நூல்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

    தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் புதிய பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்டு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் அச்சிடப்பட்டுள்ள 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான பாடநூல்கள், சிறந்த கட்டமைப்பு, தகுந்த படங்கள் மற்றும் பாடம் சார்ந்த தகவல்களைக் கொண்டுள்ளதோடு, மாணவர்களின் அறிவுத் திறனை வளர்க்க ஏதுவாகத் தகவல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் வாய்ப்புகளையும் அளிக்கிறது.

    இப்புதிய பாடத்திட்டமும், பாடநூல்களும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை அமைத்துத் தரும் என்பது உறுதி.

    இவ்வாறு அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் பா. வளர்மதி, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப்யாதவ், பள்ளிக் கல்வித் துறை செயலாளர் (கலைத்திட்டம்) உதயசந்திரன், கலைத்திட்ட வடிவமைப்புக் குழுவின் தலைவர் அனந்தகிருஷ்ணன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் ஜெகன்நாதன், பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் இளங்கோவன், தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் அறிவொளி, முன்னாள் துணை வேந்தர்கள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள். #NewTextBooks #NewCurriculum #TNCM #EdappadiPalanisamy
    Next Story
    ×