search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நவ.3-ந்தேதி பா.ஜனதாவை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் அறிவிப்பு
    X

    நவ.3-ந்தேதி பா.ஜனதாவை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் அறிவிப்பு

    மாவட்ட தலைநகரங்களில் 3-ந்தேதி பா.ஜனதாவை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ‘மெர்சல்’ திரைப்படத்தில், மைய அரசின் ‘ஜி.எஸ்.டி.’ வரிவிதிப்பை விமர்சிக்கும் வசனங்கள் ஓரிரு காட்சிகளில் இடம் பெற்றிருப்பதாக ‘பா.ஜ.க.’வின் தமிழகத் தலைவர் தமிழிசை கண்டனம் தெரிவித்தார். அது தொடர்பாக, நான் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் போது, “நடிகர் விஜய் விமர்சனத்தில் வருத்தப்படும் அளவிற்கு ஏதுமில்லை; தணிக்கைத் துறையினர் அந்தப் படத்தை ஆய்வுசெய்த பின்னர்தான் திரையிட அனுமதி அளித்துள்ளனர்.

    எனவே, அப்படத்தில் ஆட்சேபனைக்குரிய வசனங்களிருப்பின், ‘பா.ஜ.க.’வினர் தணிக்கைத் துறையினரைத் தானே கண்டிக்கவேண்டும்? மாறாக, நடிகர் விஜய்யை கண்டிப்பது ஏன்? ஒரு வேளை, அந்தப்படத்தை வெற்றிபெற வைப்பதற்காகவும் நடிகர் விஜய்யை பா.ஜ.க. ஆதரவாளராக வளைத்துப் போடுவதற்காகவும் தான் இவ்வாறு பேசுகிறார்களோ என கருதுகிறேன்” என்று அரசியல் ரீதியாகவே கருத்துக் கூறினேன்.

    இதற்குப் பதிலளித்த தமிழிசை, அரசியல் சார்ந்து கருத்துக் கூறாமல், மிகவும் உணர்ச்சிவயப்பட்டு, அரசியல் நாகரிக வரம்புகளை மீறி, ‘தனிநபர் விமர்சனங்களைக்’ கொட்டித் தீர்த்தார். “கட்டப்பஞ்சாயத்து செய்கிறவர், நிலஅபகரிப்பு செய்கிறவர்’’ என்றெல்லாம் எனக்கு எதிராக வார்த்தைகளை வாரி இறைத்தார்.

    “இது அபாண்டமான ஒரு அவதூறு; அவருடைய மனசாட்சிக்கே அது தெரியும்’’ என்று அப்போது நான் பதிலளித்தேன். அத்துடன், “இதனையாரும் பொருட்படுத்த வேண்டாமென்றும்’’ கட்சித் தோழர்களுக்கு வேண்டுகோள் விடுத்தேன். எனினும், தமிழிசை விமர்சனம் அப்பட்டமான அவதூறு என்பதால் அதற்கு எதிராக ஒருசில பகுதிகளில் விடுதலைச்சிறுத்தைகள் தமது கண்டனத்தைத் தெரிவிக்கும் நிலை உருவானது.


    கடந்த 24-ந்தேதி விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக திரண்டு கொண்டிருந்தனர். அவர்களை காவல் துறையினர் வழிமறித்துக் கைது செய்தனர். அவர்களைக் காவல்துறையின் வண்டியில் அமரவைத்துள்ளபோதே, ‘பா.ஜ.க.’வினர் 50-க்கும் மேற்பட்டோர் சூழ்ந்துகொண்டு காவல் துறையினரின் முன்னிலையிலேயே உருட்டுக்கட்டைகளால் தாக்கினர்.

    அடுத்து, 27-ந்தேதி மயிலாடுதுறையிலும் பா.ஜ.க.வினர் இதேபோன்றதொரு வன்முறை வெறியாட்டத்தை நடத்தினர்.

    சாதிய, மதவாத சக்திகளின் ஜனநாயக விரோத போக்குகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. அத்துடன், தமிழகத்தில் சமூக அமைதியை நிலை நாட்டும் வகையில், தமிழகம் தழுவிய அளவில் வரும் நவம்பர் 3-ந்தேதி மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி ஒருங்கிணைக்கிறது. இந்த ஆர்ப்பாட்டங்களில் விடுதலைச்சிறுத்தைகளுடன் அனைத்துத் தரப்பு ஜன நாயகச்சக்திகளும் பங்கேற்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×