search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்துக்கு விரைவில் விடிவு காலம் பிறக்கும்: மு.க.ஸ்டாலின் பேச்சு
    X

    தமிழகத்துக்கு விரைவில் விடிவு காலம் பிறக்கும்: மு.க.ஸ்டாலின் பேச்சு

    தமிழகத்துக்கு விரைவில் விடிவு காலம் பிறக்கும் என்று சேலத்தில் நடந்த திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
    சேலம்:

    சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் இரா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. மகள் ஆர்.கார்த்திகா (எம்.பி.ஏ.)வுக்கும், சேலம் மாவட்டம் இளம் பிள்ளையை சேர்ந்த எம்.கோவிந்தராஜ் மகன் ஜி.ஜி. ரகுநாத்துக்கும் (பி.டெக்) சேலம் ஜாகீர்ரெட்டிபட்டி எம்.எஸ்.வி. திருமண மண்டபத்தில் இன்று காலை திருமணம் நடந்தது. மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார்

    திருமண விழாவில் சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் இரா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. வரவேற்று பேசினார். தி.மு.க. செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்று திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார்.

    திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    திராவிட இயக்கம் தோன்றிய பிறகு தான் மாற்றங்கள், மறுமலர்ச்சிகள் உருவாகி உள்ளன. ஆகவே அப்படிப்பட்ட திராவிட இயக்கத்தை, இந்த பேரியக்கத்தை இன்றைக்கு அழிக்க ஒழிக்க சமயம் பார்த்து நேரம் பார்த்து காத்து கொண்டிருக்கிற நிலைகளும் நாட்டில் உள்ளன.

    அவர்களுக்கெல்லாம் நான் சொல்லிக் கொள்கிறேன், திராவிட இயக்கத்தை பொறுத்தவரையிலே அவன் எப்படிப்பட்ட நிலையில் இருந்தாலும் சரி, இந்த நாட்டை ஆளக் கூடியவர்களாக இருந்தாலும் சரி, எந்த கொம்பனாக இருந்தாலும் சரி, இந்த இயக்கத்தை தொட்டு கூட பார்க்க முடியாது.

    கொல்லைப் புறமாக திராவிட முன்னேற்றம் கழகம் ஆட்சிக்கு வராது. மக்களை சந்தித்து, மக்கள் இடத்திலேயே உரிமையோடு ஆதரவு பெற்று அந்த அடிப்படையில் தான் ஆட்சிக்கு வருமே தவிர கொல்லைப் புறமாக என்றைக்கும் ஆட்சிக்கு வருவதற்கு தி.மு.க. துடித்துக் கொண்டிருக்கவில்லை.

    இன்றைக்கு என்ன நிலை நாட்டில் ஏற்பட்டு இருக்கிறது. ஏற்கனவே கவர்னர் இடத்திலேயே ஆளுங்கட்சியாக இருக்க கூடிய அ.தி.மு.க.வை சேர்ந்த 19 பேர்கள் இப்போது இருக்கக் கூடிய முதல் -அமைச்சர் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை, எனவே சட்டமன்றத்தை உடனடியாக கூட்டி நம் பிக்கை கோரக் கூடிய வாக்குகளை பெறக்கூடிய ஒரு நிலை ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரி இருக்கின்றனர்.

    ஒரே நிலைலேயே தனித் தனியாக அ.தி.மு.க.வை சேர்ந்த 19 பேரும் கையெப்பம் இட்டு தனித்தனியாக கடிதம் கொடுத்து இருக்கிறார்கள்.

    ஆகவே அந்த செய்தி வந்த உடனேயே தி.மு.க. சார்பில் எதிர்க்கட்சி தலைவர் என்கிற முறையிலேயே ஜனநாயகத்தின் அடிப்படையிலே நானும் ஒரு கடிதத்தை கவர்னருக்கு அனுப்பி வைத்தேன்.

    இப்படி ஒரு நிலை தமிழகத்தில் ஏற்பட்டு இருக்கிறது. நீங்கள் கூர்ந்து கவனித்து, சிந்தித்து, ஆய்வு செய்து உடனடியாக சட்ட மன்றத்தை கூட்டுங்கள். ஒரு முதல்-அமைச்சர் மீது நம்பிக்கை இல்லை என்று அந்த கட்சியை சேர்ந்த ஆளுங்கட்சியில் இருக்க கூடியவர்களே கடிதம் எழுதி தந்திருக்கிறார்கள் என்று சொன்னால் இந்த நிலைக்கு நீங்கள் உடனடியாக முடிவு எடுக்க வேண்டும் என கடிதம் கொடுத்து இருக்கிறேன்.


    அதை தொடர்ந்து கடிதம் மட்டும் தந்தால் போதாது என்று கவர்னர் அவர்களை நேரடியாக சந்தித்து நம்முடைய சட்டமன்ற கட்சி துணை தலைவர் துரை முருகன் தலைமையிலேயே காங்கிரஸ் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சென்று நேரடியாக போய் பிரச்சினையை சுட்டி காட்டி விளக்கி விட்டு வந்திருக்கிறார்கள்.

    அதைத்தொடர்ந்து சட்ட மன்றத்தில் இடம் பெற முடியாத நிலையில் இருக்கக் கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட தமிழகத்தில் இருக்கின்ற அத்தனை எதிர்க்கட்சிளும் ஒன்று சேர்ந்து நேற்றைக்கு கவர்னரை சந்தித்து அந்த பிரச் சனையை சொல்லிவிட்டு வந்து இருக்கிறார்கள். கடி தத்தையும் தந்து விட்டு வந்து இருக்கிறார்கள். கவர்னர் மாளிகை சென்று வந்தவர்கள் வெளியில் வந்து பத்திரிக்கையாளர்ளை சந்தித்து பேட்டி அளித்திருக்கிறார்கள்.

    அதில் கவர்னரை சந்தித்தோம், கவர்னர் இடத்திலேயே விளக்கம் சொன்னோம். உடனடியாக கவர்னர் என்ன சொன்னார் என்று கேட்டால் நான் உடனடியாக இதில் நடவடிக்கை எடுக்க முடியாது. இது கட்சிக்குள் ஏற்பட்டு இருக்கிற பிரச்சினை. ஆகவே இதில் நாங்கள் தலையிட முடியாது. இது கட்சி பிரச்சினை என்று சொன்னதாக நேற்று கவர்னரை சந்தித்து விட்டு வந்து இருக்கிற அந்த தலைவர்கள் வெளியில் வந்து பேட்டி தந்து இருக்கிறார்கள்.


    நான் கேட்க விரும்புவது. இதே நிலை ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் இந்த ஆட்சிக்கு எதிராக 10 பேரை தனியாக பிரித்து கவர்னரை சந்தித்து ஒரு கடிதம் கொடுத்தார். இந்த ஆட்சியின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. உடனடியாக சட்டமன்றத்தை கூட்டுங்கள் என்று கடிதம் கொடுத்து இருக்கிறார்.

    ஆகவே அப்போது 10 பேர் தான். ஆகவே அதை ஏற்றுக்கொண்டு கவர்னர் உத்தரவிடவில்லையா?

    ஆனால் இப்போது 19 பேர் கடிதம் கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் இப்போது வந்து இருக்கக் கூடிய செய்தி என்ன வென்றால் 25, 26, 27 எம்.எல்.ஏ.க்கள் என தாண்டி இருக்கிறது. போகிற போக்கை பார்த்தால் 40 பேருக்கு மேல் ஆட்சிக்கு எதிராக போர்கொடி தூக்குகின்ற ஒரு சூழ்நிலை உருவாகி இருக்கின்றது.

    89 பேர் கொண்டிருக்கின்ற கூடிய திராவிட முன்னேன்ற கழகத்தினுடைய ‘பந்து’ வந்தால் கவர்னர் என்ன நட வடிக்கை எடுப்பீர்கள். அந்த பந்தை நாங்கள் கொண்டு போறோமா? கொண்டு போகவில்லையா? என்பது ஒரு கேள்விக்குறி.

    இப்பவே சொல்லி விட்டால் சஸ்பென்ஸ் போய்விடும். அதனால் தான் நேற்றைக்கு சொன்னேன் ஆராய்ந்து, சிந்தித்து, சட்ட ரீதியாக இதை பற்றி எல்லாம் விவாதித்து அதற்கு பிறகு திராவிட முன்னேற்ற கழகம் ஒரு முடிவு எடுக்கும். ஆனால் அந்த முடிவு எங்களுடைய சுய நலத்திற்காக அல்ல, திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய சுய நலத்திற்காக அல்ல. தமிழ்நாடு மக்களுடைய நன்மைக்காக அந்த முடிவை நிச்சயமாக எடுக்கும். அதில் எந்த மாற்றமும் கிடையாது.

    இவ்வளவு நாள் பொறுத்து இருந்திருக்கிறீர்கள். இன்னும் கொஞ்சம் நாள் தான். நான் கொஞ்சம் வரு‌ஷம், கொஞ்சம் மாசம் சொல்லல..கொஞ்ச நாள் தான் சொல்கிறேன்.

    ஆகவே விரைவிலேயே தமிழகத்திற்கு நல்ல விடிவு காலம் ஏற்படுத்தி தருவதற்கு தமிழ்நாட்டு மக்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தயாராக இருக்கக் கூடிய அந்த சூழ்நிலையை நிச்சயமாக தி.மு.க. உருவாக்கி தரும் என்று நான் இந்த நேரத் திலேயே எடுத்து சொல்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×