என் மலர்
செய்திகள்

பா. ஜனதாவின் ஊதுகுழலாக அ.தி.மு.க. அரசு செயல்படுகிறது: ராமதாஸ் குற்றச்சாட்டு
பண்ருட்டி:
பண்ருட்டியில் கடந்த 2011ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது தேர்தல் நடத்தை விதி முறைகளை மீறி நடந்து கொண்டதாக பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், உள்பட 50-க்கும் மேற்பட்டோர் மீது பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை பண்ருட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி கணேஷ் விசாரணை நடத்தினர்.
இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர்.ராமதாஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், முன்னாள் காங்கிரஸ் எம்.பி.கே.எஸ்.அழகிரி, எம்.எல்.ஏ.சபா.ராஜேந்திரன் சுபவீர பாண்டியன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி நீதிபதி கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.
கோர்ட்டில் ஆஜராகி விட்டு வெளியே வந்த பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
கடந்த 2011ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக என் மீது வழக்கு போடப்பட்டது. இது எதிர்கட்சியினரை அலைக்கழிக்கவே போடப்பட்ட வழக்காகும்.
தமிழகத்தில் பாரதீய ஜனதாவின் ஊதுகுழலாக அ.தி.மு.க.அரசு மாறிவிட்டது. பாரதீய ஜனதாவின் பினாமியாகவும் உள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடைபெற்றதாக முதல்-அமைச்சர் மற்றும் 6 அமைச்சர்கள் மீது வழக்கு பதிவு செய்ய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டும் இதுவரையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
ஜனாதிபதி தேர்தலில் பாரதீய ஜனதாவும் எதிர்கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. பா.ம.க.யாரை ஆதரிக்கும் என்பதை விரைவில் அறிவிப்போம்.
ஜனாதிபதி தேர்தலில் பாரதீய ஜனதா வேட்பாளரை ஆதரிக்க போவதாக அ.தி.மு.க. தாமாகவே முன்வந்து அறிவித்துள்ளது.தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டது.
நெய்வேலியில் என்.எல்.சி.நிறுவனத்துக்கு நிலம் வழங்கியவர்களுக்கு வேலை வழங்கக்கோரி வருகிற 29-ந் தேதி பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் ஏராளமான பா.ம.க.வினர் கலந்து கொள்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறியதாவது:-
தமிழக சட்டசபை கூட்டம் தற்போது நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடரில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய சட்டம் இயற்ற வேண்டும். ராஜீவ்கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன், நளினி, ராபர்ட் உள்பட 7 பேரை மத்திய, மாநில அரசுகள் விடுதலை செய்ய வேண்டும்.

தமிழகத்தில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். விவசாய விளைபொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வருகையால் பண்ருட்டி நீதிமன்ற வளாகம் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது. பண்ருட்டி டிஎஸ்பி சுந்தரவடிவேல் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்து.






