என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

காமராஜர் பெயரில் செயல்படும் எண்ணூர் துறைமுகத்தை விற்க பா.ஜனதா அரசு முயற்சி: டி.ஆர்.பாலு கண்டனம்

சென்னை:
முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இந்து பிஸ்னஸ் லைன் நாளேடு ஒரு அதிர்ச்சி அளிக்கும் செய்தியினை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அமைந்துள்ள, பெரிய துறைமுகங்களில் ஒன்றான மிகச்சிறந்த எண்ணூர் காமராஜர் துறை முகத்தை முழுவதுமாக விற்றுவிடுவது என்பதுதான் அந்தச் செய்தி.
2001-ம் ஆண்டு அன்றைய பிரதமர் வாஜ்பாயால் அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் முன்னிலையில் இந்த துறைமுகம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த முரசொலி மாறனும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த நானும் இந்த விழாவிலே பங்கேற்றோம்.
சென்னை துறைமுகம் தமிழகத்தில் அமைந்துள்ள அனல்மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை கையாண்டு கொண்டிருந்தது. 1996-ம் ஆண்டு கலைஞர் தமிழக முதல்வராக பொறுப் பேற்றவுடன் தமிழ் நாடு மின்சார வாரியம் மூலமாகவும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம், (டிட்கோ) மூலமாகவும் ஏறத்தாழ 2100 ஏக்கர் நிலத்தை எண்ணூர் துறைமுகத்திற்கு வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற் கொண்டார்.
துறைமுகத்தின் எதிர்கால வளர்ச்சி தேவைகளை கருத்தில் கொண்டு மத்திய அரசு மேலும் 1000 ஏக்கர் நிலத்தை காமராஜர் துறைமுகத்திற்கு வழங்கியது. இன்றைய சந்தை விலைப்படி பார்த்தால் காமராஜர் துறைமுகத்தின் வசம் உள்ள ஏறத்தாழ 3000 ஏக்கர் நிலத்தின் மதிப்பு மட்டும் ரூபாய் 15000 கோடிக்கு மேல் இருக்கும் என்று கணக்கிடலாம்.
கார்ப்பரேட் துறைமுகமான எண்ணூர் துறைமுகம் 2006-2007-ம் ஆண்டில் 105 கோடி ரூபாய் வருவாயும் ரூ.25.35 கோடி லாபமும் ஈட்டிய நிலையில், சென்ற 2016-17 ஆம் நிதியாண்டில் ரூபாய் 680 கோடி வருவாயும், ரூபாய் 480 கோடி லாபமும் ஈட்டி மாபெரும் சாதனை புரிந்துள்ளது. நிலக்கரி இறக்குமதியை மட்டுமே கையாண்டு கொண்டிருந்த எண்ணூர் துறைமுகத்தை அனைத்து வகை சரக்குகளையும் கையாளக்கூடிய வல்லமை பெற்ற துறைமுகமாக மாற்றி அமைக்க 2004 ஆம் ஆண்டு அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசினால், தேசிய கடல்சார் வளர்ச்சி திட்டம் வகுக்கப்பட்டது.
எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் முதல்கட்ட வளர்ச்சி முழுவதுமாக முடிவடையாத நிலையிலேயே இந்த துறைமுகம் அசுர வளர்ச்சி பெற்று மிகக் குறுகிய காலத்தில் ரூபாய் 480 கோடி லாபம் ஈட்டியுள்ளது.
மேலும், சென்ற 8 ஆண்டுகளாக மத்திய அரசுக்கும், சென்னை துறைமுகத்துக்கும் மூலதான பங்குதாரர்கள் என்ற முறையில் 40 சதவிகிதம் வரை ஈவு தொகை வழங்கியுள்ளது. மத்திய அரசுக்கு சொந்தமான 12 பெரிய துறைமுகங்களில், மத்திய அரசுக்கு ஈவுத்தொகை தரும் ஒரே துறைமுகம் காமராஜர் துறைமுகம் தான்.
அதே நேரத்தில் இந்த துறைமுகம் தனது வளர்ச்சி திட்டங்களை முழுமையாக செயல்படுத்தி, தனது இலக்கான 130 மில்லியன் டன் சரக்கு கையாளும் திறனை அடையுமானால் எண்ணூர் காமராஜர் துறைமுகம் எந்த அளவுக்கு லாபகரமாக இயங்கும்; மத்திய அரசுக்கு எந்த அளவுக்கு வருவாய் ஈட்டி தரும் என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும். இந்த நிலையில் காமராஜர் துறைமுகத்தை அவசர அவசரமாக விற்பதற்கு இன்றைய அரசு ஏன் முழு முயற்சியில் இறங்கி உள்ளது என்பது புரியாத புதிராக உள்ளது என்றே எவரும் கூறிட முடியும்!
ஏற்கனவே தனியார் பங்களிப்பில் சிறப்பாக செயல்பட்டு வரும் காமராஜர் துறைமுகத்தை அவசர அவசரமாக விற்பதற்கான அவசியம் என்ன? சிறப்பாக இயங்கும் இந்நிறுவனத்தை மத்தியில் ஆளும் ஆட்சிக்கு நெருக்கமான பெரும் முதலைகளுக்கு வெள்ளி தட்டில் வைத்து தாரை வார்க்க துடிப்பது ஏன்? இன்றைக்கு பதவியிலே ஒட்டிக் கொண்டிருக்கும் மாநில அரசு இது போன்ற தமிழக விரோத செயல்களை தட்டிக் கேட்காது என்ற நம்பிக்கையில் இந்திய அரசு செயல்பட நாம் அனுமதிக்கலாமா?
ஏற்கனவே சேதுசமுத்திரத் திட்டத்தை கிடப்பில் போட்டு முடக்கிவிட்டார்கள். கேட்டால், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது என்று நொண்டிச்சாக்கு சொல்லும் கப்பல் துறை அமைச்சரிடம் எந்த நீதிமன்றம் இத்திட்டத்திற்கு தடைவிதித்துள்ளது என்ற கேள்வியை தமிழக மக்கள் கேட்க விரும்புகிறார்கள்.
காமராஜரின் பெயருக்கும் புகழுக்கும் அடையாளமாக தனிச்சிறப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும் அரசின் சொத்தான எண்ணூர் காமராஜர் துறைமுகத்தைத் தனியாருக்கு விற்கும் எந்த முயற்சியையும் தமிழகம் ஒரு நாளும் ஏற்காது என்பதை மத்திய அரசும், மாநில அரசும் நினைவில் கொள்ள வேண்டும் இல்லையேல் அப்படிப்பட்ட துரோகச் செயலுக்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும்; அவர்களை தமிழக மக்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள்.
இவ்வாறு டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
